சனிதோறும் ஒரு பத்தி

June 18, 2009

சனிமூலை - 009

இந்தியாவின் பணவீக்கம் முதல்முறையாக -1.61% குறைந்திருக்கிறது. ஏற்கனவே பணவீக்கம்(Inflation)/பண இளைப்பு(Deflation) பற்றி பார்த்திருந்தோம். உடனே வந்த கேள்விகள், பண இளைப்பு இன்னமும் பெருகுமா? என்ன ஆகும்?

உண்மையில், இந்த பண இளைப்பு தற்காலிகமே. நிரந்தரமாக இருக்காது. கச்சாப் எண்ணெயின் விலை $70/பேரல் ஒடிக் கொண்டிருக்கிறது. இந்தியா கச்சா எண்ணெயினை பெருவாரியாக இறக்குமதி பண்ணும் தேசம். அதனால் நம் அன்னிய செலவாணி அதிகம். அதனால் எல்லா பொருட்களின் விலையும் கொஞ்சம் ஏறும். மீண்டும் பணவீக்கத்திற்கு உள்ளே வருவோம். முரளி தியோரா அமைச்சராக பொறுப்பேற்ற போது சந்தை விலையிலேயே பெட்ரோல் பொருட்களின் விலை இருக்கும் என்று ஜபர்தஸ்தாக அறிக்கையெல்லாம் விட்டார். உண்மையில், இந்தியா மாதிரி ஒரு நாட்டில் மான்யம் இல்லாமல் பெட்ரோல்/டீசல் விற்கமுடியாது.ஆந்திரா/ராஜஸ்தான்/அஸ்ஸாம்/வட கிழக்கு மாநிலங்களில் பெருவாரியாக ஏதாவது ஒரு கண்டுபிடிப்பு நடந்து, பகவான் நம்மை ரட்சித்தாலேயொழிய, நாம் அரபு நாடுகள் இல்லாமல் குடித்தனம் நடத்த முடியாது.

பங்கு சந்தை எதிர்ப்பார்த்ததைப் போலவே இறங்கிக் கொண்டிருக்கிறது.பட்ஜெட் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. ஆகவே சந்தையின் இறக்க விகிதங்கள் அதிகமாகவும், ஏற்றங்கள் குறைவாகவும் இருக்கும். ஆனால் இந்த டூபாக்கூர் பண இளைப்பு என்கிற ஒரு விஷயத்தினை வைத்துக் கொண்டு ஒரு லாபியே வட்டி விகிதத்தினை குறைக்க சொல்லும். இவ்வளவு நிதிநிலை சீர்கேடுகள் உலகமெங்கும் நடந்தாலும், இந்தியா பெரிய அளவில் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு மொத்த இந்தியாவும், மத்திய வங்கியின் முன்னாளைய கவர்னர் ஒய்.வி.ரெட்டிக்கு கடமைப்பட்டிருக்கிறது. எவ்வளவோ மேலிடத்து அழுத்தங்கள் வந்த போதிலும், தொடர்ச்சியாக கருமமே கண்ணாயினர் வகையறா அவர். அவரால் தான் இன்னமும் நாம் நிலையாய் நிற்க முடிகிறது.

சமீபத்தில் மத்திய வங்கி சத்தமே போடாமல் சில விஷயங்களை சொல்லியிருக்கிறது. ஒரு லட்ச ரூபாய் காசோலைகள் மே.1 முதல் உயர் மதிப்பு (High Value) காசோலையாக கணக்கிலெடுக்கப்பட மாட்டாது. 5 லட்சம் தான் இப்போதைக்கு உயர் மதிப்பு. இதுவும் செப்-அக்டோபரில் 10 இலட்சமாக மாறும். அடுத்த ஏப்ரல் 2010இல் உயர் மதிப்பு காசோலை என்கிற ஒரு வகையறாவே இருக்காது. மத்திய வங்கி வெகு தீவிரமாக தேசிய மிண்-பண மாற்ற முறையினை (National Electronic Funds Transfer(NEFT) ) வங்கிகளுக்கும், வாக்காளர்களுக்கும் பரப்ப முயன்று கொண்டிருக்கிறது.

நான் ஒரு ஆன்லைன் வங்கிவாசி.NEFT மற்றும் RTGS - Real Time Gross Settlement போன்றவற்றினை பயன்படுத்துபவன் என்கிற முறையில், இம்முறைகள் பெரும்பாலான பணரீதியான கேடுகளை நிராகரிக்கும். கூடுமானவரை 25000 ரூபாய்க்கு மேல் எவ்விதமான கொடுக்கல் வாங்கலாய் இருந்தாலும் NEFT வழியாக செய்யுங்கள். ஒரே நாளில் அல்லது முழு 24 மணிநேரத்திற்குள் பணம் மாறிவிடும். ஒரு லட்சத்திற்கு மேலென்றால் RTGS செய்யுங்கள். அடுத்த 10 நிமிடங்களுள் மாறிவிடும். பல அலைச்சலகள், செலவுகள், போன்கள், பேரங்கள், வாக்குவாதங்கள் மிச்சம். 2015க்குள் காசோலைகள் வழக்கொழிந்துவிடும் என்பது என் தனிப்பட்ட எண்ணம்.


போன வாரம் ஒரு உடுப்பி ஒட்டலில் என் ஆர்டரினை கொடுத்து விட்டு, தேமே என்று விட்டத்தினை பார்த்து கொண்டு, உட்கார்ந்த நேரத்தில், “ஏன் சார் தோனி இப்படி சொதப்பறான்” என எதிரில் இருப்பவர் பேச ஆரம்பித்தார். இந்தியாவில், முன்பின் தெரியாத ஆட்களிடம் பேச வேண்டிய கட்டாயங்கள் வந்தால், நீங்கள் பேசும் முதல் மூன்று விஷயங்களில், இந்த மூன்று விஷயங்கள் இல்லாமல் இருக்காது - அரசியல், சினிமா, கிரிக்கெட்.

வாத்தியார் கிரிக்கெட் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.ஐபிஎல் பார்க்காமல், டி20 பற்றி எழுதாமல் போய்விட்டாரே என்கிற வருத்தம் எனக்கு எப்போதுமுண்டு. இந்தியா நல்ல பீமபுஷ்டி பயில்வான்களாக போய் லண்டனில் இறங்கி, ஒமக்குச்சி நரசிம்மன் போல் உதைப்பட்டு ஊர் வந்து சேர்ந்தார்கள். கிரிக்கெட், சினிமா, அரசியல் என்கிற மூச்செயல்கள் தான் இந்தியாவை ஆளுகின்றன.

கதைசொல்லியே வளர்ந்த/வாழ்ந்த பரம்பரை நம்முடையது. அதனாலேயோ என்னமோ, இன்னமும் நாடகத்தனமான தமிழ் திரைப்படங்கள் வெற்றி பெருகிறது. நாம் தமன்னாவில் ஐக்கியமானால், ஜெனிலியாவினை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது மும்பாய். கிரிக்கெட் வீரர்கள் நடிகைகளுடன் தொடர்பு. அரசியலுக்கும் பாலிவுட்டிற்கும் இருக்கும் சம்பந்தம். மேட்ச் பிக்சிங். கிரிக்கெட் வீரர்கள், நடிக/நடிகைகள் அரசியலில் இறங்குவது (அசாரூதின், ஜெயப்பிரதா, சத்ருஹன் சின்ஹா, நெப்போலியன்). சினிமாவினிற்குள் / கிரிக்கெட்டிற்குள் அரசியல் செய்வது என எப்படிப்போட்டு கலக்கினாலும் கிடைக்கும் சுவையான காக்டெய்ல், இந்தியாவில் சினிமா.அரசியல்.கிரிக்கெட்.

தோனியின் கொடும்பாவி எரித்த கையோடு, “தேகா துஜை, தேக்கா முஜை” என ஷாருக்கான்/தீபிகா படுகோனின் பரந்த மார்புகளையும், உயரமான கால்களையும் பார்த்துக் கொண்டே, அரசியல்வாதிகளை சலூனில் திட்டிக் கொண்டே டீக்கு ஆர்டர் கொடுக்கும் அற்புதர்கள் நாம். எல்லா மனிதர்களுக்குள்ளும் இருக்கும் ஜெனடிகல் கோடில், இந்தியர்களுக்கென்றே சில தனித்துவமான ஜீன்கள் இருக்கலாம் என்பது பரவலான அபிப்ராயம். அமெரிக்க/ஐரோப்பிய விஞ்ஞானிகள் அதற்கு வேண்டுமானால் வேறு பெயர் வைத்து இருக்கலாம். ஆனால், அதன் உண்மையான பெயர் - இந்தியன் ஜீன்.


சென்னையின் மின்வெட்டுகள் பற்றிய கதைகள் ஏராளம். போன வாரம் இரவில் இதே போல மின்சாரம் திடீரென பிடுங்கப்பட்டது. நடுநிசி 2.00 மணி இருக்கலாம். பால்கனியில் கொஞ்ச நேரம். உலாத்தல் கொஞ்ச நேரம். சிந்தனைகள் கொஞ்ச நேரமென காலம் ஒடிக் கொண்டிருந்த போது, பக்கத்து அடுக்கக்த்தில் போன் அடித்தது.

நள்ளிரவு 2.30-3.00 மணிக்கு போன் அடித்தால் அது ஏறக்குறைய துர்செய்தியாக தான் இருக்க வேண்டும். ஒரு துர்செய்தி சொல்லப்படும் நேரத்தில், ஒரு பார்வையாளானாய் இருப்பதன் துரதிர்ஷ்டம் போல் வேறெதுவுமில்லை. எவ்விதமான உதவியும் செய்ய வாய்ப்பில்லாமல், வெறுமனே, இருளில் சில அதிர்ச்சிகரமான நினைவுகளையும், அழுகைகளையும் கேட்பது போன்ற ஒரு பயங்கரம் எதுவுமில்லை. யாருக்கு என்ன ஆயிற்று, யாரோடு யார் உறவு என்கிற எவ்விதமான அடிப்படை தகவல்கள் கூட இல்லாமல் போனாலும், நள்ளிரவு போன்கள் ஒரு விதமான நிச்சயமற்ற தன்மையினை தொடர்ச்சியாக நினைவுறுத்திக் கொண்டிருக்கின்றன.


இந்த வார ஏடாகூட கேள்வி

டிவிட்டரில் ஏற்பட்ட செய்திகள் தான் ஈரானின் தேர்தல் குறித்த கேள்விகளை மறுபரிசீலனை செய்ய வைத்தன என மேற்கத்திய ஊடகங்கள் தொடர்ச்சியாக சொல்லி வருகின்றன. ஏகப்பட்ட புள்ளிவிவரங்கள், மேப்புகள், கிராப்கள் வேறு. அமெரிக்காவின் காலனியாதிக்க முயற்சிகளில் முறியடிக்கப்படாத தேசங்களில் ஈரானும் ஒன்று. இப்போது கேள்வி, நவீன சமூக இணைய ஊடகங்கள் ஒரு நாட்டுக்கு எதிரான அரசியலை பரப்ப உபயோகப்படுத்தப்படுகிறதா? சி.ஜ.ஏவின் தொடர்ச்சியான மாற்று முயற்சிகளில் இப்போது டிவிட்டரும், பேஸ்புக்கும் சேர்ந்திருக்கிறதா? (காரணம்: பாரக்ஒபாமா என்கிற டிவீட்டருக்கான தொடர்பாளர்களை பாருங்கள். ஒபாவின் வெற்றிக்கு இணைய ஊடகங்கள் எவ்விதமான முன்னேற்பாடினை கொடுத்தன என்பது வரலாறு)

June 13, 2009

சனிமூலை - 008

நடுவில் ஆறு வாரங்களாக காணவில்லை. எழுதவில்லையே என்று நிறைய பேர் கேள்வி கேட்டார்கள். யாரும் மடல் அனுப்பவில்லை. பிஸியாக இருந்தேன், இல்லை மூடு இல்லை என்றெல்லாம் எழுதலாம். ஆனால் உண்மையில், நானெடுத்து எழுதுவதற்கு தோதான செய்திகள் எதுவும் அமையவில்லை என்பது தான் உண்மை.


பங்குச்சந்தை எகிறுகிறது. என்.டி.டி.வி ப்ராபிட், சி.என்.பி.சி டிவி 18 எல்லாம், கிராப்கள் காண்பிக்கிறார்கள். ஒரு பெரிய புள்ளி விவர புயலே தாக்கிக் கொண்டிருக்கிறது. டைம்ஸ் ஆப் இந்தியாவில் அங்கலேஷ் அய்யர், மத்திய வங்கியின் வெளிநாட்டு முதலீடு டேட்டாவினை வைத்துக் கொண்டு வாரத்துக்கு ஒரு பில்லியன் டாலர்கள் இந்தியாவுக்கு வருகிறது என்று கீபோர்ட்டிலேயே குதிக்கிறார். தினமும் எதாவது ஒரு அமைச்சர் புதிய திட்டங்கள், மானியங்கள், சலுகைகள் பட்ஜெட்டில் வரும் என்று டீசர் கொடுக்கிறார்கள்.

காங்கிரஸ் பெருபான்மை பலத்தோடு வென்றாலும், வென்றது. அவரவர்கள் கொடுக்கும் பில்ட்-அப்புகளுக்கு அளவேயில்லாமல் போய்விட்டது. மன்மோகன் சிங் ஆட்சியமைப்பார் என்று சொன்ன விடனேயே 2000 புள்ளிகள் ஏறி மே.18 அன்று பங்குச்சந்தைக்கு விடுமுறை. டாட்.காம் காலத்தில் ஆலன் கீரின்ஸ்பேன், இதற்கு ஒரு அழகான வார்த்தை சொல்லியிருப்பார்.Irrational exuberance.இந்தியாவில் அதுதான் நடக்கிறது இப்போது.

அடிப்படை விஷயங்களில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாத போது, இம்மாதிரியான ஜீபும்பா வேலைகள் எந்தளவிற்கு சாத்தியம் என்று யாரும் யோசித்தாற்போல தெரியவில்லை. பணவீக்கம் குறைந்திருக்கிறது, சுழிக்கு அருகாமையில் வந்து விட்டோம் என்று நாளிதழ்கள் சொல்கின்றன. அப்படியென்றால், ஏறின பொருட்களின் விலை இறங்கியிருக்க வேண்டுமே? ஏன் இறங்கவில்லை? வேலை வாய்ப்புகள் அதிகரித்து இருக்க வேண்டுமே? அது நடக்கவில்லையே? ஏன் ? உண்மை நிலவரம் என்னவென்றால், எல்லா முன்னேறி வரும் நாடுகளுக்கும் இப்போது பணம் வெள்ளமாய் பாய்கிறது. இந்த பணம், அமெரிக்கா அச்சடித்த பணம். எவ்விதமான பின்விளைவுகளின் பாதிப்புகளையும் பற்றி கவலைப்படாமல், தாராளா தொண்டியாய், அமெரிக்கா டாலரை அச்சடித்து கொண்டு, ஜி.எம்மையும், செத்துப் போன வங்கிகளையும் வாங்கிக் கொண்டிருக்கிறது. பொருளாதார பாஷையில் இதற்கு “quantitative easing" என்று பெயர். இதன் விளைவு 2012க்கு பின்னால் தெரியும். இப்போது அதன் பாதகங்கள் புரியாது.

இந்த மாதிரி அச்சடித்து புழக்கத்துக்கு விடும்போது, முதலில் எல்லாம் செளஜன்யமாக தான் இருக்கும். அதிக பணப்புழக்கத்தினால், மீண்டும் பணவீக்கம் ஏற தொடங்கும். ஏனெனில், இது கடினமாய் உற்பத்தியினை பெருக்குவதால் உள் வரும் பணமல்ல. இது Easy Money. பவர்பாயிண்ட், எக்செஸ் தாள்களில் போடப்பட்ட ப்ரொஜக்‌ஷன்களை அடிப்படையாகக் கொண்டு உள் வரும் பணம். அதனால் தான். ஐ.எம்.எப். 400 டன் தங்கத்தினை சர்வதேச சந்தையில் இறக்கும் என்று தெரிந்தாலும், தங்கத்தின் விலை ஏறிக் கொண்டிருக்கிறது. கடந்த 45 நாட்களில் $1000/oz தொட்டு தொட்டு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறது.

நிஜம் என்னவென்றால், மந்த நிலையின் பாதிப்பு இனிமேல் தான் அதிகமாகும். வளர்ந்த நாடுகளின் உற்பத்தி குறையும். மக்கள் வேலையில்லாமல் திண்டாடுவார்கள். இப்போது ஒடிக் கொண்டிருப்பது சந்தை மொழியில் Bear market rally.இதனை இதே நிலையில் தாக்கு பிடிப்பது கடினம். உங்களைச் சுற்றி பார்த்தாலே, டிவி சேனல்கள் நம் காதில் எவ்வளவு பெரிய மாலையினை போட்டு நமக்கு மங்களம் பாட முயற்சிக்கிறார்கள் என்று தெரியும். இதில் தரகர்களுக்கு தான் லாபம். இதன் மூலம், ஒட்டு மொத்தமாக, நாம் எல்லாரும் மண்ணுக்குள் போகப் போகிறோம் என்கிற பெஸிமிஸ்ட் பார்வையல்ல.

நம் பயங்கள் குறைந்திருக்கின்றன. நிறுவனங்கள் இனிமேல் தங்களுடைய சேவை தேவைகள்/உற்பத்தி கீழே போகாது என்று நம்புகின்றனர்.வலிமையான அரசு. பொங்கும் பங்குச்சந்தை. பரவலான உள்ளூர் சந்தை என்று பல காரணிகள் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கின்றன.

ஜிம் ரோஜர்ஸ், சொரோஸ் போன்ற விற்பனர்களின் பார்வையில், இந்தியாவும் சீனாவும் தான் இந்த மந்த நிலையிலிருந்து வெளிவரும் முதலிரு நாடுகளாக இருக்கும் என்று சொல்கிறார்கள். ப்ரிக் நாடுகளில் இந்தியாவும், பிரேசிலும் தான் முதலிடத்தினை பிடிக்க ஒடிக் கொண்டிருக்கின்றன.

ஆக இந்த நம்பிக்கை தான் வாழ்க்கை. இப்போதைக்கு உங்களின் பர்ஸினை கெட்டியாக பிடித்திருங்கள்.


தொழில் நிமித்தமாக 2-3 வாரங்களுக்கு முன்பு, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான தயாரிப்பாளாரான “ஆஸ்கார்” ரவிச்சந்திரனை சந்தித்தேன். மனிதர் மிக மிக சாதாரணமாக இருக்கிறார். டிவி சீரியல் நடிகர்களே ஹோண்டா சிட்டியும், ஹுண்டாய் ஆக்செண்ட்டுமாய் செட்டுக்கு வருகையில், வெறுமனே ஒரு i10 வைத்திருக்கிறார். ஒரு லீ டீ சர்ட், சாதாரண ஜீன்ஸ் என உள்ளே வந்தார்.

ஆழ்வார்பேட்டை அனுமார் கோயில் காலையில் போகவில்லை, அதனால் பரிகாரமாக 500 சுற்றுகள் சுற்றிவிட்டு வந்தேன், அதான் லேட்டு என்று தன்னிலை விளக்கம். மனிதருக்கு அசாத்திய கடவுள் நம்பிக்கை. கார் வைத்திருப்பதே திருப்பதி போவதற்கு தான் என்கிற தொனியிலான விளக்கத்தினை இப்போது தான் கேட்கிறேன். ஆஸ்கார் பிலிம்ஸ் ஒரு தனி நபர் கார்ப்பரேஷன். ரவிச்சந்திரனோடு அவர் சகோதரர்கள் எல்லாரும் பங்குதாரர்களே. 85% படங்கள் வெற்றிப் படங்கள்.

ரவிச்சந்திரன் எடுப்பது தான் இறுதி முடிவு. பல நடிகர்கள், இயக்குநர்கள் பற்றியெல்லாம் பேசி கொண்டிருந்தோம். ரவிச்சந்திரனின் முதல் சினிமா நுழைவு வேலூரில் “வானம்பாடி” படத்தினை 37வது தடவையாக எடுத்து திரையரங்கத்தில் போட்டது. அவர் போட்ட ஒரு வாரம் செம கல்லா. அங்கிருந்து ஆரம்பித்து, இன்றைக்கு ஜாக்கி சானை வைத்து ஒரு படமெடுக்கிறார் - 6 மொழிகளில் வர இருக்கிறது. இது தாண்டி, முருகதாஸ் நன்றிக் கடனுக்காக “ரமணா”வினை ஹிந்தியில் இவருக்காக இயக்குகிறார். இன்னமும் இரண்டு படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன. மிக அபூர்வமாக இவ்வளவு பணமிருந்தும் [தசாவதாரம் சம்பாதித்தது 200 கோடிகள்] மிக மிக down-to-earth ஆக இருக்கும் ஒரு நபரினை இப்போது தான் பார்க்கிறேன். வழக்கமாக ரஜினிக்கு தான் இம்மாதிரியான வர்ணணைகள் பொருந்தும்.

மிக எளிமையாக இருக்கும் அவரின் வியாபார யுக்திகள், நேற்றைய சாண்டோ சின்னப்பா தேவரினை நினைவுப் படுத்துகின்றன. ஒரு தனி நபர் என்கிற முறையில், ரவிச்சந்திரன் மிக நல்லவர். ஆனால் நிறுவனம் என்கிற வகையில் ஆஸ்கார் ஒரு பெரிய பெயிலியர்.


இந்த வார செய்கைகள்

படித்தது: பா.ராவின் “பிரபாகரன்: வாழ்வும் மரணமும்”
பிடித்தது: வோடாபோன் விளம்பரத்தில் வரும் சூசூக்கள்(Zoozoo)
கேட்டது: “என்னடா பாண்டி, இன்னா பண்ண போறே” இளையராஜாவின் ரஸ்டிக் குரலில் “வால்மீகி” பாடல்
பார்த்தது: திருவல்லிக்கேணி ரத்னா கபேயில் ”கடவுள் பாதி.மிருகம் பாதி” ஜெகன்
பங்கேற்றது: கிழக்கு மற்றும் Fundsindia.com இணைந்து நடத்திய "பேரங்கள் மற்றும் ரிவார்டு பாயிண்டுகள்” கலந்துரையாடல்
வாங்கியது: ரிச்சர்ட் தேலரின் “Nudge: Improving Decisions about Health,Wealth and Happiness
முணுமுணுப்பது: ”இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை” - டி.ஆர். மகாலிங்கம்
வெறுப்பது: இன்னமும் anyindian.com-இல் “விதுர நீதி” புத்தகம் இல்லாமலிருப்பது
கொலை வெறியோடு இருப்பது: சென்னையில் ஓடும் ஆட்டோக்கள்

April 17, 2009

சனிமூலை - 007

என்னுடைய வீட்டில், என்னுடைய நெருங்கிய வட்டாரங்களில் நான் தான் தங்க வழிகாட்டி. தங்குவதற்கான வழிகாட்டி அல்ல. தங்கத்திற்கான.

தங்கம். இந்திய பெண்களின் இன்றியமையாத இன்னொரு விஷயம். கல்லூரி படிக்கும் போது கலந்து கொண்ட ஒரு தெலுகு கல்யாணத்தில் உலாத்திய பெண்களோடு, அந்த மண்டபத்தினை ஹை-ஜாக் பண்ணியிருந்தால், வடகிழக்கு மாநிலத்தில் ஏதேனும் ஒரு மாநிலத்தின் பாதி பட்ஜெட்டினை ஒப்பேத்தியிருக்கலாம். பெண்கள் மட்டுமல்லாமல், தாதாக்கள், அரசியல்வாதிகள், டூபாக்கூர் தொழிலதிபர்கள் போன்ற ஷோ பேர்வழிகளுக்கான முக்கியமான சமாச்சாரம்.

வழிகாட்டி என்றால், எப்போது தங்கம் ஏறும், எப்போது தங்கம் இறங்கும் என்று ஒரளவுக்கு சொல்லக்கூடிய திறமை கொஞ்சுண்டு ஒட்டிக் கொண்டிருக்கிறது. இதை திறமை என்று சொல்வதை விட, இது உலக சந்தைகளை தொடர்ச்சியாக பார்த்து கொண்டிருப்பதால் ஏற்படக்கூடிய அடிப்படை அறிவு. இனி தங்கம் ஏறுமா ? ஏறாதா?

இனி தங்கம் இறங்கும். ஜி-20 மாநாட்டில் உலக தலைவர்கள் ஐ.எம்.எப்பின் இருப்பிலிருந்து 400 டன் தங்கத்தினை விற்க சொல்லியிருக்கிறார்கள். காற்றில் கணக்குப் போடாதீர்கள். ஒரு டன் தங்கம் இன்றைய விலையில் ஜஸ்ட் ரூ.144 கோடி மட்டுமே. 400 டன் எவ்வளவு என்பதை கணக்குப் போட்டு ஈனோ குடிக்காதீர்கள். அது நமக்கு தேவையில்லை. இந்தியா ஒரு தங்க இறக்குமதி நாடு. நாம் தொடர்ச்சியாக தங்கத்தினை இறக்குமதி செய்து கொண்டே இருப்போம். ஆனால் பிப்ரவரி, மார்சில் ஒரே ஒரு கிராம் தங்கம் கூட இறக்குமதி செய்யவில்லை. மாறாக, விலை கூடியவுடன், புத்திசாலியான நம்மாட்கள், தங்கத்தினை விற்க ஆரம்பித்தார்கள். முட்டாள் ஐரோப்பிய நாடுகள், ஏறும் தங்கம் தான், நிதி சீர்குலைவு, பொருளாதார மந்தநிலைக்கு எதிரான மாற்று என்று நினைத்து வாங்க ஆரம்பித்தார்கள். இந்தியா மற்றும் மத்திய கிழக்கினை தவிர வேறு யாரும் ஆபரண தங்கத்தினை தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதில்லை. ஆக இந்தியா வாங்கவில்லையென்றால், உலகமெங்கும் தங்கம் காற்று வாங்கும்.

மேலும், இந்த எவரெஸ்ட் உயரத்திற்கு காரணம், மத்திய வங்கிகள் உலகெங்கிலும், நிதி சீர்குலைவு ஏற்பட்டவுடன், உஷார் பத்ரி ரைடாக, தங்கத்தினை வாங்கி முடக்கி விட்டார்கள். அதனால் வரத்து குறைந்தது. தேவை அதிகம், ஆனால் சப்ளே குறைவு என்றால் அது சிம்பள் பொருளாதார வீக்கத்தினை உண்டாக்கும். சவரன் 8000ரூபாய்க்கு போய் கொண்டிருந்தது கடந்த ஒன்றரையாண்டுகளில் உயர்ந்து 12-13,000க்கு எகிறியதற்கு இது தான் காரணம். இப்போதைய நிலையே கூட இன்னமும் உயர்நிலையில் தான் இருக்கிறது. கொஞ்ச காலம் போனால் வாங்கும் நிலைக்கு வரும்.

இப்போதைக்கு, தங்கம் வாங்க வேண்டுமென்ற எண்ணங்கள் இருந்தால், கொஞ்ச காலம் ஐபிஎல்லும், உலக டி-20 கிரிக்கெட்டும் பார்த்து முடித்துவிட்டு ஜி.ஆர்.டிக்கு வண்டியினை எடுங்கள்.






கண்கள் பனித்தன. இதயம் நெகிழ்ந்தது. இது அரசியல் வசனமில்லை. சமீபத்தில் ஒரு புத்தகம் படித்தவுடன் ஏற்பட்ட உணர்வுகள்.

2008-இன் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த ஒரு தோழி என்னிடத்தில் கொடுத்த புத்தகம் தான் இது. Sadako and the Thousand Paper Cranes by Eleanor Coerr சிறிய குழந்தைகளுக்கான புத்தகம். சடாகோ என்கிற ஒரு குட்டிப்பெண்ணின் உண்மைக்கதை. குட்டியாய் 80 பக்கங்கள். ஆனால் அது உண்டாக்கிய அதிர்வுகள் ஏராளம்.

சசாகி சடாகோ ஜப்பானில் 1943ல் பிறந்து 1955-இல் தன்னுடைய பன்னிரண்டு வயதில் ஹிரோஷிமாவில் போட்ட அணுகுண்டால் ஏற்பட்ட கதிர்வீச்சால் உயிர் இழந்த குழந்தை. வாழ்க்கையில் ஒட்டப்பந்தய வீராங்கனையாக வேண்டும் என்று நினைத்த பெண். அவளுடைய தோழி சிசுகோ. கதிர்வீச்சின் பாதிப்பால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, சிசுகோ அவளுக்கு ஒரு தங்க பேப்பரானாலான ஒரு கொக்கினை செய்து கொடுத்தாள். ஒரிகமி என்பது மிகப் பிரபலமான ஜப்பானிய கலாச்சார பொழுதுபோக்கு. பேப்பரில் பல உருவங்களை ஒரிகமியில் செய்ய முடியும். ஆயிரம் கொக்குகள் ஒரு நோயாளி செய்தால், வலி, வேதனை, வியாதி எல்லாம் பறந்துவிடும் என்பது ஒரு ஜப்பானிய ஐதீகம்.

வெகு சூட்டிகையாக, ஒடியாடிக் கொண்டிருந்த சடாகோ, சடாலென மருத்துவமனையில் படுத்தப் படுக்கையாக ஆனாள். ஆனாலும், நம்பிக்கை தளராமல், பேப்பரில் கொக்கு செய்வது எப்படி என்று கற்றுக் கொண்டு, தொடர்ச்சியாக கொக்கு செய்ய ஆரம்பித்தாள். அக்டோபர் 25, 1955இல் சடாகோ இறந்து போனாள். அவள் இறக்கும்போது அவள் செய்த மொத்த கொக்குகளின் எண்ணிக்கை 644. அவளின் வகுப்பிலிருந்த குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து மீதமிருக்கிற 356 கொக்குகளை செய்து அவளோடு புதைத்தார்கள். கணக்கு சரியாக போனது - ஆயிரம் கொக்குகள்.

அவள் இறந்த பிறகு அவளின் வகுப்பு நண்பர்கள் அவள் மருத்துவமனையில் இருந்தபோது நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள், அவளின் டைரி போன்றவற்றினை தொகுத்து ‘ககோஷி (Kakoshi)' என்ற பெயரில் வெளியிட்டார்கள். ஜப்பானில் இருக்கும் எல்லா குழந்தைகளும் சேர்ந்து நிதி திரட்டி, 1958-இல் அவளின் சிலையினை ஹிரோஷிமா அமைதி பூங்காவில் திறந்தார்கள். சடாகோவின் சிலையின் கீழ் இன்றும் ஆகஸ்ட் -6இல் எல்லோரும் பேப்பர் கொக்குகளை வைக்கிறார்கள். அது அமைதி தினமாக அனுசரிக்கப்படுகிறது.சடாகோவின் சிலையின் கீழே இந்த வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

This is our cry,
this is our prayer;
peace in the world.

போர் என்பது மிக மோசமான விஷயம். இந்தியாவில் கற்பிக்கப்படும் வரலாறு இன்னமும், “இவர் அவரை போரில் வீழ்த்தினார்” “அவர் இவரை போரில் வெற்றிக் கொண்டு, சாம்ராஜ்யத்தினை விரிவு செய்தார்” என்கிற அளவில் தான் கற்றுக் கொடுக்கப்படுகிறது. வெற்றி என்பது எது என்று அசோகனுக்கு ஒரு புத்த பிட்சு சொன்னது வெறுமனே ஸ்டேஜ் ட்ராமா போட தான் உதவியிருக்கிறது. வரலாற்றினை இன்னமும் நாம் சரியாக கற்றுக் கொள்ளவில்லை அல்லது கற்றுக் கொடுக்கத் தெரியவில்லை என்பது தான் இன்றைக்கும் மேலோங்கியிருக்கிறது. வெற்றி என்பது அடுத்தவரின் தோல்வியிலிருந்து வருவதல்ல. அது உள்ளிருந்து வருவது. தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்வது. தன்னை தொடர்ச்சியாக பரிசோதனைக்கு உட்படுத்தி, அதிலிருந்து பாடம் கற்பது. அனுபவங்களை உள்ளிழுப்பது. அடுத்தவரை கொல்வதல்ல.

தமிழகத்தில் இருக்கக்கூடிய பதிப்பகங்கள் யாராவது இதன் உரிமம் பெற்று தமிழில் வெளியிடலாம். குழந்தைகளுக்கு ஏற்றாற் போல நடை. பெரிய எழுத்து புத்தகம். பென்குவின்புட்னம் என்கிற நியுயார்கில் இருக்கும் ஒரு பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது.



RPG குழுமத்திலிருந்து Open என்கிற ஒரு ஆங்கில பத்திரிக்கை வரத் தொடங்கியிருக்கிறது. இந்தியா டுடே, அவுட்லுக், வீக் போன்றவைகளின் தளத்திலேயே இதுவும் இருக்கிறது. கீழே குறிப்பிடுள்ள மேற்கோள் ’ஒபன்’ பத்திரிக்கையின் முதல் இதழில் வந்த கட்டுரையில் வந்தது. இந்தியாவில் இணைய இணைப்பு அதிகமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் பேப்பரில் அச்சடித்து வரும் பத்திரிக்கைகளுக்கு விளம்பரங்கள் வாங்குவதில் சில பல ஆபத்துகள் இருக்கின்றன. இந்த நிலையில் RPG குழுமம் இப்பத்திரிக்கையினை தொடங்கியிருப்பது பாராட்டத்தகுந்த விஷயம்.

இதே மாதிரி முந்தாநாள் ’பாரிஸ்தா’வில் உட்கார்ந்து கொண்டு பொழுது போகாமல் முன்னால் உட்கார்ந்திருந்த பெண்ணினைப் பார்த்துக் கொண்டே (டார்க் புளு ஜீன்ஸுக்கு பிங் குர்தா, நன்றாக இருந்தாலும், ஏதோ ஒன்று குறைந்தது போல தோன்றியது) இந்தியா டுடே புரட்டினால், மிருணாள் சென் பற்றி ஒரு செய்தி வந்திருந்தது. ரித்விக் கட்டக், மிருணாள் சென் கடைசியாக சத்யஜித் ரே என்கிற வரிசையில் தான் நான் ஆரம்பகாலத்தில் படங்கள் பார்த்தேன்.

வங்காள திரை பிதாமகர்கள் வரிசையில் மிருணாள் சென்னுக்கு ஒரு தனியிடமிருக்கிறது. அடுத்த மாதம் நடக்க இருக்கும் கான்ஸ் திரை விழாவில் திரையிட சென்னின் 1970களின் கல்கத்தாவினை பிண்ணணியாகக் கொண்ட மூன்று படங்களை கேட்டிருந்தார்கள். இண்டர்வியு, கல்கத்தா 71 மற்றும் படாதிக். ஆனால் அந்த படங்களின் பிரிண்ட் படு மோசமாக இருந்ததால் கைவிடப்பட்டது. வெறுத்துப் போய் “நான் சாகும் போது, என் படங்களும் மறைந்து போகும்” என புலம்பி தள்ளியிருக்கிறார். இது ஒரு மகா மோசமான விஷயம்.

மே.வங்காளத்திலிருந்து வந்து பாலிவுட்டினை கலங்கடித்து கொண்டிருக்கும் பிபாசா பாசு, சுஷ்மிதா சென், ரீயா சென் போன்றவர்களில் ஆரம்பித்து பல்வேறு நபர்கள் வங்காள சினிமாவிற்கு கடமைப்பட்டுள்ளார்கள். இது தவிர, தேசிய பட வளர்ச்சி கார்ப்பரேஷனுக்கு இதை விட வேறு என்ன வேலை இருக்க முடியும்? அமிதாப் பச்சனின் மெழுகு சிலையினை ஹாங்காங்கில் வைப்பதற்கு காட்டும் அக்கறையில் அரை பங்காவது, நம்மிடையே இன்னமும் இருக்கும் திரைச்சிற்பிகளை காப்பதில் நமக்கில்லை. நல்ல வேளையாக, தமிழ்நாட்டினை திரையுலகம் கடந்த 40 ஆண்டுகளாக ஆண்டு வருவதால், ஜி.என்.செட்டி சாலையில் போட்டிருக்கும் மேம்பாலத்திற்கு, கலைவாணர் மேம்பாலம் என்று பெயர் வைத்திருக்கிறோம். இல்லையென்றால் என்.எஸ்.கே என்றால் பட்டணம் பொடி பெயரா என்று நாளைய சந்ததியினர்கள் கேட்பார்கள்.

இந்தியர்களான நமக்கு நம்முடைய பாரம்பரியத்தினை காப்பதில் இருக்கும் அலாதி அக்கறை சொல்லி மாளாது. இந்தியாவின் எல்லா மியுசியங்களும் காலியாக இருக்கும். பள்ளிக் குழந்தைகளின் செலவு குறைவான கல்விச்சுற்றுலா தலமாக தான் பிரபலப் படுத்தியிருக்கிறோமே தவிர அதன் முக்கியத்துவத்தினை உணர்த்தியதுப் போல தெரியவில்லை. வங்காள சினிமாவினை நேசிப்பவர்கள் யாராவது இருந்தால் புத்ததேவ் பட்டாச்சார்யா / மம்தா பானர்ஜி வகையறாக்களில் யாராவது ஒருவரிடம், தாகூர் மாதிரியான ஒரு ஆள் இன்னமும் உங்களூரில் உயிரோடு இருக்கிறான், அவனை சரியான பாதுகாத்து வையுங்கள் என்று பெங்காலியில் உரக்கச் சொல்லுங்கள்.

இந்த வார மேற்கோள்

நஸ்ரூத்தின் ஷா "ஒபன்” பத்திரிக்கையில் கலைப்படங்கள் எடுப்பதுப் பற்றி
“sign me up, borrow funds from NFDC claiming to make realistic cinema, use indoor shots to save money, producer and I split the remaining cash"

April 11, 2009

சனிமூலை - 006

வேளச்சேரி கான்கார்ட் மோட்டார்ஸில் டாடா நானோ பார்க்க கியு நிற்கிறது. நல்ல விஷயம்தான். இந்த மாதிரி ஒரு பொருளுக்கான கியுக்களை ஆப்பிளின் ஸ்டோர்களில் ஒவ்வொரு மேக் கருத்தரங்கு முடிந்தவுடன் அறிவிக்கப்படும் புது பொருளுக்காக பார்க்க முடியும். “ஹமாரா பஜாஜ்”-க்கு பிறகு, ஒட்டு மொத்த இந்தியாவும் ஒரு வாகனத்திற்காக முண்டியடிப்பது டாடா நேனோவாகதான் இருக்க முடியும்.

டாடா நேனோ வெறுமனே ஒரு வாகனமாக பார்க்க முடியாது. இதை ஒரு புது தலைமுறையாக பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது. 1991-இல் இந்தியா பொருளாதார சீரமைப்பினை ஆரம்பித்து 17 வருடங்கள் ஆன நிலையில், இது இரண்டாம் கட்ட சீரமைப்பின் ஆரம்பமாக தோன்றுகிறது.

1992-இல் நாம் உலக நிறுவனங்களை இந்தியாவுக்குள் அனுமதித்தோம். அன்னிய பொருட்களை இஷ்டத்திற்கு உபயோகப் படுத்தினோம்.2009-இல் இந்தியாவிலிருந்து உலகத்திற்கு பொருட்களை அனுப்ப ஆயத்தமாகிறோம். இந்திய சந்தைக்காக பொருட்கள் தயாராகின்றன. இது ஒரு முக்கியமான திருப்பம். இதை சீராக செய்ய நமக்கு இன்னமும் இரண்டு தசாம்சங்கள் ஆகலாம்.பரவாயில்லை.

எகனாமிக் டைமிஸில் சி.கே. பிரகலாத் “டாடா நேனோ” மாதிரியான பிற விஷயங்களின் மீதான ஒரு பார்வையினை வைக்கிறார். அவரின் Fortune at the Bottom of the Pyramid ஒரு முக்கியமான மாற்றுப் பார்வையினை முன் வைக்கிற புத்தகம். டாடா குழுமத்திற்கு அவர் ஆலோசகர். அவரின் ஆலோசனையின் பேரில் தான் ஜிஞ்சர் ஹோட்டல் வந்தது.

டாடா நேனோ, ஜிஞ்சர் ஹோட்டல்,அரவிந்தன் அரவிந்த் கண் மருத்துவமனை, இந்திய செல்பேசி துறை, இணைய சேவை போன்றவைகள் முக்கியமான திருப்புமுனைகள். மிகவும் குறைந்த விலையில், தரமான, மக்களின் வாங்குதல் சக்திக்கு உள்ளே அடங்கக்கூடிய பொருட்களையும், சேவைகளையும் சந்தைப்படுத்தினால், அதன் பிரதிபலன்கள் பல மடங்கு போகக்கூடியவை. இந்திய தொலைப்பேசி துறை மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. ரூ.16க்கு ஒருவரிடம் பேச தலைப்பட்ட நாம், இன்றைக்கு 10 பைசா அளவிற்கு பேசிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவின் செல்பேசி துறை உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறை. இவ்வளவு பொருளாதார மந்தங்கள் நிலவிய போதிலும், செல்பேசி துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவின் செல்பேசி வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறார்கள்.

வெறுமனே முதலாளித்துவம் (Capitalism) என்பது போய், இன்றைக்கு சமூக முதலாளித்துவம் (Social Capitalism) என்பது குறைவாக, ஆனால் தீர்க்கமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. தொழில் நடத்துவது வெறும் லாபத்திற்காக மட்டுமே என்கிற பழைய முதலாளித்துவ சிந்தனை கொஞ்சம் கொஞ்சமாக விலக தொடங்கியிருக்கிறது. சமூக தொழில்முனைவோர்கள் (Social Entrepreneurs) என்றழைத்துக் கொள்ள விரும்பும் ஒரு பகுதியினர், சமூகத்தின் பல பகுதிகளில் பரவ ஆரம்பித்து இருக்கிறார்கள்.

வழக்கமான தன்னார்வல நிறுவனங்கள் என்றழைக்கப்படும் நிறுவனங்களுக்கு பெரியதான தொலைநோக்கு பார்வைகள் கிடையாது. அவர்கள் இன்னமும் அன்பளிப்பினை வைத்துக் கொண்டு காலத்தினை ஒட்டுகிறார்கள், இது ஒரு குறைப்பார்வை. முதலாளித்துவத்தின் மிக அடிப்படையான விஷயம், லாபம், அந்த லாபம் எப்படி கிடைக்குமென்றால், தரமான பொருள்/சேவையினை, குறைவான விலையில் அளிப்பது. அந்த நோக்கத்தையும், தன்னார்வ நிறுவனத்தினை சமூக நலனையும் காக்டெயிலாக்கினால் வரும் கலவை தான் இன்றைக்கு மெதுவாக பரவியிருப்பது. இது ஒரு ஆரோக்கியமான விஷயம்.


சென்னை சாந்தோம் கடற்கரை. கடந்த மூன்று மாதங்களாக சன் டிவியில் ஞாயிறு மாலை போடப்படும் டப்பா படங்களை தவிர்ப்பதற்காகவே என்னுடைய தங்கை மகளை கூட்டிக் கொண்டு, அலையில் காலாற நடக்கிறேன். எல்லா வகையான மக்களும், காலை அலை நனைப்பதை விரும்புகிறார்கள் என்று தோன்றுகிறது. என் தங்கை மகளின் மிக முக்கியமான பொழுதுபோக்கை இப்போது ஞாயிறு மாலை, கடலலையில் தொப்பலாக நனைவது. நிற்பது, ஒடுவது, குதிப்பது, பேரலைகள் வரும்போது கைப்பற்றி தடுமாறுவது என உப்புத் தண்ணீர் உள்ளே போக விளையாடுகிறாள்.

சென்னை கடற்கரை ஒரு முக்கியமான ரிலீப் பாயிண்ட். புல்லாங்குழல் விற்பவர்கள் ஏர் டெல்லின் சிக்னேச்சர் ட்யூனை வாசிக்கிறார்கள்.என் காலத்தில் ஏதாவது சினிமா பாட்டு தான் புல்லாங்குழலில் ஹம் செய்யப்படும். ரங்கராட்டினம், குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடல், மாங்காய், சுண்டல், பஜ்ஜி, வறுத்த சோளம், பானிப்பூரி என சகலமும் ரூ.10-15க்குள் ஆகிறது. தண்ணீர் பாக்கெட் காலையில் ரூ.1 ஆகவும், மாலையில் ரூ.1.25 - 1.50 ஆகவும் இருக்கிறது.Discretionary Pricing. எல்லாவகையான மக்களுக்கும் கடலின் மீது ஒரு காதல் இருக்கிறது. குழந்தைகள், பெண்கள், ஆண்கள், வயதானவர்கள் என எல்லாரும் அலையில் கால் நனைக்கிறார்கள். மிரள்கிறார்கள். கூட்டமாக சிரிக்கிறார்கள். கொஞ்சம் தைரியமான பெண்கள், சுடிதார் நனைய உட்காருகிறார்கள். ஆண்கள், காலாடை சகிதம் ”சீன்” காட்டவாவது கொஞ்சமாய் கடலுக்குள் போகிறார்கள். ஒரு மணிக்கு ஒரு தடவை குதிரையில் வரும் போலீஸ்காரர்கள், மக்களை உள்ளே செல்லாமல் இருக்குமாறு எச்சரிக்கிறார்கள்.

சின்ன குழந்தைகள் வால்ஸ் ஐஸ்கீரிம் குச்சி ஐஸ் சாப்பிட்டு, மணலில் வீடு கட்டி, அந்த குச்சியினை கொடி கம்பம் போல் மேலே செருகுகிறார்கள். காதலர்கள் துப்பட்டா சகிதம், முத்தமிட்டுக் கொள்கிறார்கள். மணலில் நிறைய பாஸ்ட் புட் சென்டர்கள். வஞ்சிரம் மீன் (பெரியது) ரூ.60க்கு காரசாரமாய் கிடைக்கிறது. காரினுள் பியரிடித்து விட்டு, மேல்தட்டு மக்கள் சிக்கன் நூடுல்ஸும், மீனுமாய் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பொருளீல்லாத, பெண் கிடைக்காத கும்பல்கள், வட்டமாக உட்கார்ந்து கொண்டு “ங்கோத்தா, போன வாரம் என் பிகரை ஒருத்தன் ஒரம் கட்டிட்டான். அவனை எப்படியாவது கழட்டிருன்னும்டா” என பேசிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது வட்டமாய் உட்கார்ந்து கொண்டு அவர்களுக்கு மட்டும் கேட்குமளவிற்கு கெட்ட வார்த்தை கானா பாடுகிறார்கள். இளந்தாய்மார்கள் குழந்தையினை பார்ப்பதும், கணவன் எங்கே பார்க்கிறான் என்று கண்காணிப்பதுமாக இருக்கிறார்கள். பெரியவர்கள் வாக்கிங் போகிறார்கள். அவர்களின் சிரிப்பிலும், அலைகள் கால் நனைக்கும்போது விரியும் குழந்தைகளின் கன்னக்குழிகளிலும் தான் நிஜமான சந்தோஷத்தினை பார்க்க முடிகிறது.

சென்னை மாதிரியான தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருக்கும் ஒரு மெட்ரோபொலிஸில் குழந்தைகளுக்கு விளையாட சரியான இடங்கள், வாய்ப்புகள் இல்லை. சதா போகோவும், ஜெட்டெக்சும் பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகள், ப்ளே ஸ்டேஷனில் வீடியோ கேம் விளையாடும் குழந்தைகள், அப்பாவின் மடிக்கணினியில் விளையாடும் குழந்தைகள் என எல்லா வகையுமான குழந்தைகளை கடந்த ஆறு ஆண்டுகளாக மிக நெருக்கமாக பார்த்து வருகிறேன். இன்றைய குழந்தைகளுக்கு physical விளையாட்டுகள் என்பதே எதுவுமில்லை.

நான் எல்லா இடங்களிலும் விளையாடி இருக்கிறேன். இன்றைக்கும் பீச் கிரிக்கெட் என்றழைக்கப்படும் கடற்கரை மணலில் டென்னிஸ் பாலில் ஆடும் கிரிக்கெட்டினை கர்ம சிரத்தையாக ஞாயிறு காலை ஆடி வருகிறேன். நான் நடு ரோட்டில், மொட்டை மாடியில், சுடுகாட்டில், மூத்திர சந்தில், கால்வாய் ஒரங்களில், கொண்டித்தோப்பு போலீஸ் லைன் பிள்ளையார் கோயில் முன்னாடி இருக்கும் மைதானமென்று சொல்லமுடியாத ஒரு மைதானத்தில் என எல்லா இடங்களிலும் விளையாடி இருக்கிறேன். விளையாட்டு பதின்ம பருவத்தில் மிக முக்கியம், படிப்பை விட.

நகரமயமாக்குதலின் மிக முக்கியமான இழப்பு குழந்தைகளின் விளையாட்டு என்று தோன்றுகிறது. இன்றைக்கு இருக்கக்கூடிய ஒற்றை குழந்தை மனநிலையில், பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு போகக் கூடிய சூழலில், ஒரு குழந்தையின் இயற்கையான விளையாட்டுத்தனம் மழுங்கடிக்கப்படுகிறது. என்னுடைய சட்டையிலெலெலாம் இங்க் கறை இல்லாமல் ஒரு நாளும் வீட்டிற்கு வந்ததில்லை. இன்றைய குழந்தைகள் பென்சில், ரப்பர் தொலைத்தாலோ, வெளியே போய்விட்டு வீட்டுக்கு வரும் வழியில் டூவீலரில் ஒற்றை செருப்பினை தொலைத்தாலோ அந்த குழந்தை வாங்கும் வசவுகள் சொல்லி மாளாது. நாம் எல்லோரும், நம் அடுத்த சந்ததியினருக்கு சேர்த்து வைக்கிறோம், சேர்த்து வைக்கிறோம் என்று பணத்தினை குறியாக கொண்டு ஒடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த மாதிரியான சின்னச் சின்ன சந்தோஷங்கள் தான் இன்னமும் வாழ்க்கையினை அர்த்தமுள்ளதாகவும், சுவாரசியமாகவும் மாற்றுவதாக படுகிறது.

ஐம்பது வயதில் நீங்கள் சாதித்து எல்லாம் பெரியதாக தோனாது. மைலாப்பூர் கற்பாங்காம்பாள் மெஸ்ஸின் கதம்ப சாதத்திற்கும், கடற்கரையின் உப்பு தோயந்த மக்காசோளத்திற்காகவும் உடலும், மனதும் ஏங்க ஆரம்பிக்கும். காசோ, பணமோ, அதிகாரமோ, பெண்ணோ,பொரு்ளோ அன்றைக்கு பெரியதாக தோன்றாது என்று தோன்றுகிறது. வாழ்வின் சுவை என்பது பெரிய வெற்றிகளில் இல்லை. சின்னச் சின்ன சந்தோஷங்களிலும், குட்டி தோல்விகளிலும் தான் இருக்கிறது. Simple Living is Better Living.


ராஜா ஜேசுதாஸ் செல்லையா. வயது 87. ஏப்ரல் 7ஆம் தேதி மறைந்து போனார்.

யாரிவர்?

சினிமா நடிகரோ, அரசியல்வாதியோ, சமூக சேவகரோ, உள்ளூர் தாதாவோ, தொழிலதிபரோ கிடையாது. அவர் ஒரு பொருளாதார நிபுணர். 2007-இல் பத்ம விபுஷன் பெற்றவர். நரசிம்மராவ் தலைமையிலான ஆட்சியில், இன்றைய பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சராக இருந்து 1991-இல் இந்தியாவின் பொருளாதார அமைப்பினை உலகமையமாக்க செய்ய அமைக்கப்பட்டிருந்த குழுவில் ராஜா செல்லையா ஒரு முக்கியமானவர்.

ராஜா செல்லையா தான் இன்றைக்கு ஒரளவிற்கு சுலபமாக இருக்கக்கூடிய இந்திய வரிச்சட்டங்களின் பிதாமகர். லைசன்ஸ் ராஜ்ஜியத்தில் இஷ்டப்படிக்கு எழுதப்பட்டிருந்த வரிச்சட்டங்களை, தனி நபர் குழு அமைத்து, அதனை மொத்தமும் படித்து, மாறி வரக்கூடிய உலகச் சூழலுக்கு ஏற்றாற் போல, மாற்றிய பெருமை ராஜா செல்லையாவைதான் சேரும். செல்லையாவின் அறிக்கை தான் மன்மோகன் சிங் பல்வேறு வரி ரீதியிலான சீர்திருத்தங்களை கொண்டு வர உதவியது.

கஸ்டம்ஸ் வரி 200% இருந்ததை குறைத்தது; 40% மட்டுமே தனியார் மற்றும் நிறுவனங்களின் உச்சக்கட்ட வரியாக இருக்கும் என்று நிர்ணயித்தது; 200-300% சில பொருட்களுக்கு இறக்குமதி வரி இருந்ததை சீரமைத்தது; மாட் வேட் என்றழைக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரியின் அடிப்படையினை நிர்மாணித்தது; சேவை வரி என்ற ஒன்றினை கொண்டு வந்தது (சேவை வரி தான் இன்றைக்கு இந்திய அரசுக்கு மிக அதிகப்பட்ச வருவாயினை தரக்கூடிய மறைமுக வரிவிதிப்பு) என அவரின் பங்களிப்பினால் தான் இன்றைக்கு 2009-இல் பா.ஜ.க குறைந்தபட்சம் 3 இலட்சம் வரைக்கும் வருவாய்க்கு வரி கிடையாது என தேர்தல் மேனிபெஸ்டோ கொடுப்பது வரை வந்திருக்கிறது.

1978-இல் எல்.கே. ஜா தலைமையில் அமைக்கப்பட்ட மறைமுக வரி சீரமைப்பு கமிட்டியில் உறுப்பினராக இருந்தவர் ராஜா செல்லையா. பின்பு திட்ட கமிஷனில் மன்மோகன் சிங் 1990 ஜனவரி வரை துணை சேர்மனாக இருந்தபோது, அக்கமிஷனின் உறுப்பினராக இருந்தவர். அவரின் புத்தகங்கள், முக்கியமாக Towards Sustainable Growth - Essays in Fiscal and Financial Sector Reforms in India, Oxford University Press (1996) இந்திய உலகமயமாக்கலின் மிக முக்கியமான ஆரம்பகால ஆவணம். அவரின் Aspects of the Black Economy in India, National Institute of Public Finance and Policy, New Delhi, 1985 புத்தகம் தான் கிட்டத்திட்ட 15 வருடங்களுக்கு பிறகு அப்போதைய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது, கருப்பு பணத்தினை எவ்வித கேள்வியும் கேட்கப்படாமல் டிக்ளேர் செய்ய அனுமதிக்கப்படும் என்கிற திட்டத்திற்கு வழிகாட்டி.

1976-இல் டெல்லியில் அவர் தேசிய பொது நிதி மற்றும் திட்ட அமைப்பினை (National Institute of Public Finance and Policy) உருவாக்கினார். 1995-இல் சென்னை பொருளாதார பள்ளியினை (Madras School of Economics) உருவாக்கினார். இந்திய வரி விதிப்பின் அடுத்த கட்டம் தேசிய பொருட்கள் மற்றும் சேவை வரி (Goods and Services Tax), அடுத்த நிதியாண்டிலிருந்து அமுலுக்கு வரும். அதை பார்க்க ராஜா செல்லையா இருக்க மாட்டார்.

நான் 1992-95 பொருளாதாரம் படித்த போது என்னுடைய இந்திய பொருளாதார பாடத்திற்கு சிபாரிசு செய்யப்பட்டது ராஜா செல்லையாவின் புத்தகங்கள்தான். ஒழுங்காக மார்க் எடுத்து கட்-ஆப்பில் தேறியிருந்தால், டெல்லி பொருளாதார பள்ளியில் படித்து, மத்திய வங்கியிலோ அல்லது ஐக்கிய நாடுகள் அமைப்பிலோ பணியாற்றிக் கொண்டிருப்பேன். ஆனால், அப்போது அவர் சென்னை பொருளாதார பள்ளியினை உருவாக்கியது எனக்கு தெரியாமல் போனது. இங்கேயாவது படித்திருக்கலாம். கிட்டத்திட்ட கல்லூரி படிப்பு முடித்து 14 வருடங்கள் கழித்து மீண்டும் நிதி/பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் எதையாவது படிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ராஜா செல்லையாவின் இறப்பு அதனை உறுதிப்படுத்திவிட்டது. இனி படிக்கலாம் என்று இருக்கிறேன்.

இந்த வார கார்ட்டூன்


நன்றி: டைம்ஸ் ஆன்லைன்

April 08, 2009

சனிமூலை - 005

நடந்து முடிந்த G-20 மாநாட்டில் ஆரவாரமாக $1 டிரில்லியன் டாலர்கள் உலக பொருளாதாரத்தினை மந்த சூழலிருந்து விடுவிக்க அறிவிக்கப்பட்டது.ஒபாமா வந்தார். பேசினார். கை குலுக்கினார். சிரித்தார். போட்டோ எடுத்துக் கொண்டார். போய்விட்டார். அவர் உள்நாட்டு பிரச்சனை அவருக்கு. தேசியவாதம் (State Protectionism) இருக்கக்கூடாது என்று ஒன்று சேர முடிவெடுத்தார்கள். அவரவர் நாட்டுக்கு போய் அதனை மறுதலிப்பார்கள் அல்லது வேறுவிதமாக தேசியவாதத்தினை உட்புகுத்துவார்கள்.

இதற்கிடையில் சீனா திடீரென ஞானோதயம் பெற்று அமெரிக்க டாலர் உலக கரன்சியாக இருக்கக்கூடாது. அதற்கு மாற்றாக ஐ.எம்.எப்பின் அதிகாரத்தினை பயன்படுத்தி ஒரு புதிய கரன்சியினை உலக கரன்சியாக அறிவிக்கவேண்டும் என்று ஒரு குண்டினை தூக்கிப் போட்டிருக்கிறது. அமெரிக்க டாலர் உலக கரன்சியாக இருப்பதால் தான் அமெரிக்க பெட்ரல் ரிசர்வும், அரசாங்கமும் எவ்விதமான லஜ்ஜையும் இல்லாமல், கேட்பவர்களுக்கு எல்லாம் அச்சடித்து கொடுத்து, அமெரிக்க டாலரினை வெறும் பேப்பர் கரன்சியாக மாற்றியிருக்கிறார்கள். புஷ் கண்ட புண்ணியம் இது தான். உள்நாட்டு செலவுகள், போர்கள், கேணத்தனமான முதலீட்டு திட்டங்கள், சப்-பிரைமில் வாரி இறைத்த பணம் என்று ’பிரிண்டர் கண்ட இடமெல்லாம் டாலர்’ என்று குதியாட்டம் போட்டிருக்கிறார்கள். இடதுசாரிகள் மற்றும் கம்யுனிச நாடுகள் இதையே தான் 30 வருடங்களாக வாய் கிழிய கத்திக் கொண்டிருந்தன. ஹ்யூகோ செவிஸ் சாவெஸ் (வெனிசூலா) தன் நாட்டின் பெட்ரோல் அந்நிய விற்பனையை யூரோவினை முன்வைத்து செய்தார். ஈரானும் பெட்ரோல் விற்பனையை யூரோவுக்கு மாற்றி இருக்கிறது. ரஷ்யர்கள் டாலராலாலும், யூரோவோடும் சரிவிகித உறவோடு இருக்கிறார்கள். பா.ராகவன் எழுதிய ‘ஆயில் ரேகை’ புத்தகத்தில் இந்த டாலர் உலக கரன்சியாக முன்வைக்கப்பட்டிருப்பதன் பின்புலத்தினை அரசல்புரசலாக சொல்லியிருப்பார்.

உலகிற்கு அமெரிக்க டாலர் தவிர்த்த ஒரு உலக கரன்சி வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகளுமில்லை. ஆனால் எப்போது என்பது தான் கேள்விக் குறி. இன்றைய சூழ்நிலையில் டாலர் தவிர்த்த உலக கரன்சி என்றால், இரண்டாம் நிலையில் இருப்பது யூரோ தான் (26%), மூன்றாவது ஜப்பானிய யென் (8%). ஆனால் இவற்றில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. சீனா தொடர்ச்சியாக தன்னுடைய கரன்சியினை (ரென்பி) செயற்கையாக மேலெழும்ப விடாமல் வைத்திருக்கிறது. இந்தியா ரூபாய்க்கு அந்த நிலையில்லை. அதனால் தான் அமெரிக்க டாலருக்கான மதிப்பு ரூ.43லிருந்து ரூ.52 போய், இப்போது ரூ.50.xx இல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. சந்தையினை பொறுத்தே நம் ரூபாயின் மதிப்பு மாறும். ஆனால், பிரச்சனை சீனாவிடம் இருக்கிறது.

மிகக் குறைந்த விலையில் பொருட்களை தயாரித்து, தன்னுடைய நாட்டு நாணயத்தின் மதிப்பை செயற்கையாக குறைத்து, அதன் மூலம், அமெரிக்காவி்ல் விற்று 2000-2008 கொள்ளை லாபம் பார்த்தார்கள். சம்பாதித்த லாபத்தினை அமெரிக்க அரசாங்க பாண்டுகளிலேயே முதலீடு செய்தார்கள். இதனால் கிட்டத்திட்ட டிரில்லியன் டாலர் கணக்கில் சீன பணம் அமெரிக்காவில் இருக்கிறது. சீனா அதை முன்வைத்து, உலகின் முண்ணனி வல்லரசு நிலைக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறது. உலக கரன்சி வேண்டும் என்பதன் மூலம் அமெரிக்காவிற்கு ஒரு செக் வைக்கலாம், மற்றும் தன் பணம் அமெரிக்காவில் இருந்தும், உலக “நன்மைக்காக” உலக கரன்சி கேட்கிறார்கள் என்கிற பெருமிதத்தையும் பெறலாம் என்பது மாதிரியான வழிகளில் யோசித்து கொண்டிருக்கிறார்கள் போல.

இப்போதைக்கு உலக கரன்சி என்பது எல்லாம் ஏட்டுச் சுரைக்காய். அமெரிக்க டாலர் தான் இன்னும் பல வருடங்களுக்கு உலக கரன்சியாக இருக்கப்போகிறது, அதன் பல குறைபாடுகளுடன்.

எந்நேரத்தில் சனிமூலை என்று பெயரிட்டேனோ, போன வார இறுதியில் ஒரு நண்பரோடு திருநள்ளாறு சனிஸ்வரன் கோவிலுக்கு போக வேண்டிய ஒரு அன்புத் தொல்லை. நண்பர் வேறு வாஸ்து படி, சனிமூலை என்று பெயர் வைத்தால், சனிஸ்வரன் அவனாகவே அழைப்பான், நீங்கள் போனீர்கள் என்றார். ஒரு சனி, இன்னொரு சனியினை எதற்கு பார்க்க போக வேண்டும் என்பது நான் அவரை கேட்காத கேள்வி.

தமிழகத்தினை இன்று வரை நான் முழுமையாக பார்த்ததில்லை. ரயிலில் போவது என்பதே அரிதாகி போனது. பறந்து கொண்டுதான் இருக்கிறேன். இந்த நிலையில் காரில் சிதம்பரம், மாயவரம், சீர்காழி, காரைக்கால் என ஒன்றரை நாள் சூறாவளி சுற்றுப்பயணம் அதுவும் வார இறுதியில் என்றவுடன் மறுக்க மனமில்லை. காரில் தமிழகத்தினுள் போவது ஒரு அலாதியான அனுபவமாக இருந்தது. வெட்கமாக இருந்தாலும், எனக்கு மும்பாய் தெரிந்த அளவிற்கு தமிழகம் தெரியாது என்பது தான் உண்மை. அதே இந்தவருடமாவது களைய முயல்கிறேன்.

திருநள்ளாறு. சனிஸ்வரன் கோயிலில் அபிஷேகமும், அர்ச்சனையும். 21/2 மணி நேரம் தரையில் நான் உட்கார்ந்ததேயில்லை. ஆனால் வேறுவழியில்லை. சுற்றியுள்ளவர்கள் பக்திமயமாக இருக்கும் போது, நான் மட்டும், சுவரில் வரைந்திருந்த நளன் கதை ஒவியங்களை பார்த்து கொண்டிருந்தேன். பிரகாரம் சுற்றி அம்சமாக வரைந்திருந்தார்கள். நளன் கதையில் நான் பரிதாபப்பட்டது, நளனுக்கோ, தமயந்திக்கோ இல்லை, ருது பர்ணனுக்கு. பாவம், கெஸ்ட் ரோல் கொடுக்கப்பட்ட நாயகன் போல மொத்த கதையிலும் அவர் வந்து போய்விட்டார். கோயிலில் மற்ற குருக்களோடு பேசிக் கொண்டிருந்தேன். கோயிலின் தங்கமூலாம் பூசிய கலசங்களை லக்‌ஷ்மி மிட்டல் கொடுத்தாராம். சனிஸ்வரன்க்கும் இரும்புக்கும் சாஸ்திரத்தில் நிறைய தொடர்புகள் இருக்கிறது என்று சொன்னார்கள். சென்னை எப்போது வந்தாலும், திருநள்ளாறு வராமல் போகமாட்டார், வாராவாரம் அவர் பெயரில் அபிஷேகமும், அர்ச்சனையும் நடத்தி, பிரசாதங்கள் இனனபிற லண்டனுக்கு போகிறதாம். Interesting.

தெரிந்தவர் ஒருவர் மூலமாக ஒரு கனபாடிகளை ஒரங்கட்டி தான் மேற்சொன்ன வேலைகள் நடந்தது. கனபாடிகள் என்று சொன்னது சும்மாயில்லை. நிஜமாகவே அவர் “கன” பாடிகள். ஆறடி இரண்டு அங்குல உயரமும், 42-44 இடுப்பளவும் கொண்டு சன்னதியில் நின்றால், அவரை தவிர விக்கிரகத்தையே டெலஸ்கோப் கொண்டுதான் தேடவேண்டும். ’ஆஜானுபாகுவான’ என்கிற தமிழ்வார்த்தைக்கு உதாரணம் தெரியாமல் எட்டாம் வகுப்பிலிருந்து தவித்துக் கொண்டிருந்தேன். அந்த வருத்தத்தை கனபாடிகள் போக்கி விட்டார். அர்ச்சனை முடிந்து வெளியே வந்தவுடன் கூப்பிட குரல் தான் அட்டகாசம் “சாமி தரிசனம் முடிச்சுட்டு வந்தா சாத்துக்குடி ஜூஸ் சாப்பிடணும்னு ஐதீகம் இருக்கு சார்” என்று 3 சாத்துக்குடி ஜூஸ் விற்பவர்கள் அழைத்தார்கள். இப்போது என்னுடைய சந்தேகம் சாமி மீதல்ல. ஐதீகத்தீன் மீது.

தமிழ் சினிமாவின் வீச்சு எவ்வளவு பெரிது என்பது தமிழகத்தில் பயணம் செய்யும் போது தான் தெரிகிறது. சீர்காழியில் ஒரு ஆண்களின் சலூன் கடை பெயர் பலகையில், சிநேகா சிரித்து கொண்டிருக்கிறார். ஸ்ரேயா - சரவணா ஸ்டோர்ஸின் தங்க மாளிகை விளம்பரத்தின் படங்கள் ஊரெல்லாம் இருக்கின்றன. சரவணா ஸ்டோர்ஸின் ஐ.பி ஸ்ரேயா போஸ்டர் இல்லை போலிருக்கிறது. ‘அருந்ததீ’, ‘அயன்’ இரண்டு படங்கள் தான் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் நிறைந்திருக்கின்றன. சிதம்பரம் ‘வடுகநாதன் டிடிஎஸ்”ஸில் அனுஷ்காவின் பெரிய போஸ்டர் இருக்கிறது. அம்மணியினை “இரண்டு” படத்தின் ”மொபலைலா” பாடலில் பார்த்த போதே ஒரு ரவுண்டு வரும் சாத்தியங்கள் தெரிந்தது.’அருந்ததீ’யில் அனுஷ்காவின் கண்கள் சாலையில் போகிற வருகிறவர்களேயே பார்த்துக் கொண்டு இருக்கிறது. கடலூர், சிதம்பரம், சீர்காழி, காரைக்கால் வரை ‘அம்மா’ ‘அய்யா’ பேனர்கள்தான் அதிகமாக இருக்கிறது. அன்புமணி ராமதாஸினை எவ்வளவு மோசமாக வரையமுடியுமோ அவ்வளவு மோசமாக வரைந்து, அதற்கு கீழே பத்து பதினைந்து அமைப்பாளர்கள் பெயர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறது.

குட்டி, குட்டி ஊர்களின் பெயர்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது. “காத்திருப்பு” “பூம்பாழை” “வல்லம்படுகை”. அரசாங்கம் தரும் இலவச வேளாண்மை மின்சாரத்தில் பல கான்கீரிட் வீடுகளில் சன் டைரக்ட் டி.டி.எச் ஆண்டெனா. எல்லா குட்டியூர்களிலும் தமிழக அரசின் “வாழ்ந்து காட்டுவோர் சங்கம்” என்றொரு பெயர்ப்பலகை பார்த்தேன். “வாழ்ந்து காட்டுவோர் சங்கம்” என்றால் என்ன ?யாருக்காவது தெரியுமா? எல்லா கிராமங்களிலும் ஒரு “கீற்று மண்டி” கட்டாயமாக இருக்கிறது. சாப்பாட்டு கடைகளில் ‘புரோட்டா’ என்று எழுதியிருக்கிறார்கள். சென்னையில் அது ‘பரோட்டா’. எது சரியான உச்சரிப்பு ?

திருநள்ளாறு முடிந்து, வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வந்தால், தேர் நகர் உலா போய் இருக்கிறது என்று சொன்னார்கள். நண்பர் அபராத காணிக்கை மட்டும் செலுத்திவிட்டு கிளம்பி ஞாயிறு இரவு சென்னை வந்து சேர்ந்தோம். மேல்மருவத்தூர் தாண்டி சாப்பிட அமர்ந்த இடத்தில் “தமிழ் முரசு” படிக்க கிடைத்தது. ராமநாதபுரத்தில் திராவிட கட்சியின் சார்ப்பாக ஜே.கே.ரித்திஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். சனிஸ்வரன் தன் வேலையை தமிழ்நாட்டில் ஆரம்பித்து விட்டான் என்று தோன்றுகிறது.

இந்த வார ஜோக்

முதல் முறையாக ஒரு சர்தார் அமிர்தசரஸிலிருந்து பம்பாயிற்கு விமானத்தில் போனான். அவனுடைய நண்பர்கள் எல்லாம் விமானம் பறப்பது எப்படி என்பது பற்றியெல்லாம் விரிவாக எடுத்துச் சொன்னார்கள். ஏக குஷி அவனுக்கு.

பம்பாயில் இறங்கியபின் அவன் கோவமாக அவன் நண்பர்களுக்கு போன் போட்டான்.

“நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள், இந்த விமானம் பறக்கவேயில்லை. நான் உள்ளே போய் உட்கார்ந்த போது இது சாலையில் சென்று கொண்டிருந்தது. கொஞ்சம் நேரம் வெளியில் பார்த்துவிட்டு தூங்கிவிட்டேன். நான் மீண்டும் முழித்து பார்க்கும்போது அதே போல சாலையில் போய் கொண்டிருந்தது. பம்பாய் வந்துவிட்டது என்று அறிவித்தார்கள். இந்த டிரைவர் பறக்க பயந்து போய், தரை வழியாகவே என்னை பம்பாய் கொண்டு வந்துவிட்டான்.”

April 03, 2009

சனி மாறி புதன் :)

தவிர்க்கமுடியாத பயணங்கள் இருப்பதால், இந்த வார பத்தி, புதன்கிழமை வெளிவரும். வாசகர்கள் மன்னிக்க.

March 28, 2009

சனிமூலை - 004



மேலே உள்ள படத்தை கிளிக்கினால் பெரியதாக தெரியும். ஒட்டு மொத்த ”நிதி கெட்ட கேட்டையும்” படம் வ்ரைந்து பாகங்களை குறித்துள்ளார்கள். Infographics என்றழைக்கப்படும் வகையறாவில் நான் சமீபத்தில் மிகவும் ரசித்த படமிது.


எம்.ஐ.டி உலகின் மிக முக்கியமான இடம்.யிலிருந்து வரும் டெக்னாலஜி ரெவியுவினை தொடர்ச்சியாக படித்து வருகிறேன். இந்த எம்.ஐ.டி, குரோம்பேட்டை ஸ்டேஷன் தாண்டின எம்.ஐ.டி அல்ல. மசாசூசேட்ட்ஸ் இன்ஸ்ட்டியுட் ஆப் டெக்னாலஜி. பல கண்டுபிடிப்புகள் கண்டறிய தூண்டுகோலான கல்வி நிறுவனம். கல்வி நிறுவனம் என்பதை விட மிகப் பெரிய ஆராய்ச்சி கட்டிடம் என்பது தான் பொறுத்தமான வார்த்தையாக இருக்கமுடியும்.

எம்.ஜ.டியிலிருந்து டெக்னாலஜி ரிவியு(Technology Review) என்கிற ஒரு இதழ் வருகிறது. இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது. கிட்டத்திட்ட 5 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இல்லாவிடினும், விட்டுவிட்டாவது படித்து வருகிறேன். அவர்கள் வருடாவருடம் ஒரு லிஸ்ட் வெளியிடுவார்கள் ”10 முக்கியமான தொழில்நுட்பங்கள்” அதில் இந்த வருடம் முக்கியமானது சோலார் பவர். சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிப்பது.

இது உண்மையிலேயே ரொம்ப பழசு. 1960களில் ஆரம்பித்து இன்றைக்கும் தொடர்ச்சியாக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. போட்டோ வொல்வோட்டிக் செல்கள் எஸ்.எம்.எஸ் மொழியில் ”பிவி செல்ஸ்” என்றழைக்கப்படும் செல்களை சை-பை படங்களில் பார்த்திருக்கலாம். இந்தியாவில் மோசர் பெர் நிறுவனம் தொழிற்சாலை போட்டு தயாரித்து கொண்டிருக்கிறது. கடைசியாக கேட்டதில் 2013 வரைக்கும் அவர்களின் ஆர்டர் புக் நிரம்பி வழிகிறது. மாற்று / சுத்த / பசுமை மின்சாரம் (Alternative Energy / Clean Energy / Green Energy ) என்று வகைவகையாக அழைக்கப்படும் முயற்சிகள் குளோபல் வார்மிங் காலக்கட்டத்தில் ஒரு cult ஸ்டேடஸுக்கு வந்துவிட்டது. முக்கியமான விஷயம் மாற்று எரிசக்தி விஷயத்தில், மூலப்பொருட்கள் இலவசமாக கிடைக்கும். The raw material and running cost of procurement is near zero. அது அலைகளோ, காற்றோ, அருவியோ, சூரியஒளியோ இன்னபிறவோ. அல் கோர் இதை படமாக்கி, எல்லாரையும் பயமுறுத்தி ஆஸ்கார் தட்டிக் கொண்டு போய்விட்டார்.

சூரியயொளி மின்சாரம் என்பது உலக விஞ்ஞானிகளின் மிகப்பெரிய கனவு. மற்ற எல்லா இயற்கை வழிகளை விட, சூரியயொளி வஞ்சனையில்லாமல் அமெரிக்காவிலிருந்து அம்பாசமுத்திரத்தின் குக்கிராமம் வரை நீக்கமற நிறைந்திருக்கிறது. மாற்று மின்சார வழிகள் என்று சொல்லப்படும், நீர், காற்று, மாட்டுச்சாணம் எல்லாவற்றிலும் இருக்கக்கூடிய பிரச்சனை அதன் மூலப்பொருட்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே கிடைக்கக்கூடியது. இப்போதைய பிவிசெல்ஸ்களின் விலையதிகம். இன்னொரு பிரச்சனை அதனை அரசாங்கமும், வீடு கட்டும் ரியல் எஸ்டேட் காரார்களும் புறக்கணிப்பது.

போன வார பிஸினஸ் லைனில், ஒரு பழைய கட்டுரை ஒன்றினை மறு வெளியீடு செய்திருந்தார்கள். இந்தியாவின் மொத்த எரிபொருள், மின்சார தேவையில் 33% சூரியஓளியிலிருந்தே எடுத்துக் கொள்ள முடியும் என்று புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன.

இந்த பொருளாதார மந்தத்தினை அறிவுள்ள அரசாங்கங்கள் அற்புதமாக பயன்படுத்திக் கொள்ளலாம். நாட்டின் கட்டமைப்பு மற்றும் எரிசக்தி தன்னிறைவினை அடுத்த மூன்றிலிருந்து ஐந்தாண்டு காலக்கட்டத்துக்குள் உலகத்தரத்துக்கு இணையாக கொண்டு வந்துவிடலாம்.

சென்னையில் 365நாளில் 325 நாள் கன்னா பின்னாவென்று வெயிலடிக்கும். ஆனால் அது பெங்களூரில் குறைவு. பெங்களூரில் சூரியஒளியில் இயக்கும் தண்ணீர் ஹீட்டர்கள் வாங்கினால், அரசு அதற்கு மானியம் தருகிறது. சென்னையில் அது இல்லை. இதற்கு முன்பான அரசில் எப்படி மழைநீர் சேகரிப்பு கட்டாயப்படுத்தப்பட்டு நடைமுறைப் படுத்த பட்டதோ, அதே போல சூரியஒளியில் இயங்கும் பல்வேறு பொருட்களை சென்னை மாதிரியான சூடு பிரதேசத்தில் கட்டாயமாக்கப்படவேண்டும் என்று தோன்றுகிறது. அது நடக்கும் வரையில், நாம் சூரிய ஒளியினை துணி காய போடவும், ஜவ்வரிசி வடாம், வத்தல் பிழியவும் தான் உபயோகப்படுத்தி கொண்டிருக்கமுடியும்.



”தூக்கு மேடை பஞ்சு மெத்தை. தென்றலை தீண்டியதில்லை. தீயினை தாண்டியிருக்கிறேன்” என்று வசனம் பேசாத குறையாய், ஒரு வழியாய் ரத்தன் டாடா இந்த வார ஆரம்பத்தில் டாடாவின் நேநோ - ஒரு இலட்சரூபாய் காரினை அறிமுகப்படுத்தி விட்டார். ஏபரலில் மூன்று வாரங்களில் புக்கிங் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு இலட்ச ரூபாய்க்கு கார் என்பது உலக ஆட்டொமொபைல் வரலாற்றில் நிச்சயமாக ஒரு சாதனை. டாலரில் கணக்குப் போட்டால் வெறுமனே $2000 தான் வருகிறது. முதன்முறையாக ஒரு காரினை ஆன்லைனில் புக் செய்ய முடியும். டாடா நேனோ சர்வ நிச்சயமாக ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களுக்கு உண்டான வரவேற்பினைப் போல, மிக அதிக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

மிக சாதுர்யமாக அப்ளிகேஷன் பார்முக்கு ரூ.300, முழு புக்கிங்கிற்கு 75,000+ என கணக்குப் போட்டு வேலை செய்திருக்கிறார்கள். டாடா மோட்டார்ஸ் குறைந்தது 5 இலட்சம் மக்கள் இந்த முதல் பங்கீட்டில் பங்குபெற முயற்சிப்பார்கள் என்று கணக்கு போட்டிருக்கிறது. முதல் தவணையில் 50000 கார்கள் மட்டுமே பெறமுடியும், அதுவும் கணிணி தேர்ந்தெடுக்கும் ஒரு பட்டியலிலிருந்து. இந்த மாதிரியான முன்மாதிரிகள் இதற்கு முன்பு இந்திய ஆட்டோமொபைல் துறையில் இல்லை. 10 இலட்சம் மக்கள் பங்கு கொண்டால், டாடா குழுமத்திற்கு குறைந்தது ரூ.950 கோடிகள் கிடைக்கும் என்று கணக்கிட்டுள்ளார்கள். பொருளாதார மந்த சூழ்நிலை மிகுந்த நேரத்தில் ரூ.950 கோடிகள் என்பது அருமையான விஷயம். யார் இந்த திட்டங்களை வகுத்தார்களோ, அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். மிக சாமர்த்தியமான வேலை.

இந்த மாதிரியான ப்ரொடக்ட் இன்னோவேஷன்களை தொடர்ச்சியாக செய்தாலேயொழிய, நாம் பெருமளவில் உலக சந்தையினை பிடிக்க இயலாது. சேவை ரீதியிலான இன்னோவேஷன்களை நாம் தொடர்ச்சியாக நாம் மென்பொருள் துறையில் செய்து கொண்டு வருகிறோம். பொருள்ரீதியான இன்னோவேஷன்களும் முக்கியம். பின்லாந்து என்கிற ஒரு நாடு இன்றைக்கு நோக்கியா என்கிற ஒற்றை செல் நிறுவனத்தின்மூலம் தான் பலபேருக்கு தெரியும்.


மூன்று சம்பந்தமில்லாத விஷயங்கள்
  1. இந்த வருடம் வரும் சூரிய கிரகணம் (ஜூலை 22, 2009) வானியலில் மிக முக்கியமான விஷயம். இந்தியாவில் இந்தமுறை பல நகரங்களில் இது முழுமையாக தெரியும். இதற்கடுத்து இந்தமாதிரியான ஒரு முழு கிரகண பார்வை இந்தியாவில் 2114இல் தான் கிடைக்கும். அதற்குள் இந்த பத்தி எழுதுபவனின் கதை முடிந்துவிட்டிருக்கும்.
  2. மத்திய ரிசர்வ் வங்கியின், கிரெடிட் கார்டுகளுக்கான செயல்முறையில் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான விஷயம்."The font size of the Most Important Terms and Conditions (MITS) should be minimum Arial -12". நமக்கு கொடுக்கும் பேப்பரில் ப்ரிண்டாகி இருப்பது ஏரியல்-5 இல்
  3. ஒரே ஒரு ஆசிரியரை மட்டுமே கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை 2002-03 இல் 2% இருந்தது. 2007-08இல் 10% உயர்ந்திருக்கிறது. 2004க்கு பின் நம்முடைய கல்விக்கான செலவீனம் குறைந்துக் கொண்டே வருகிறது
இந்த வார கவிதை

புத்தரின் போதனைகள்
வாசித்து மூட
பக்கங்களுக்கிடையில் சிக்கியிறந்தது
எறும்பு.