சனி மூலை

சனிதோறும் ஒரு பத்தி

March 10, 2011

சனிமூலை - 012

Disclaimer: நான் மருத்துவன் கிடையாது. கீழே இருப்பதைப் படித்து, உங்கள் மருத்துவரோடு ஆலோசனை செய்து இதை தேர்ந்தெடுங்கள்.

StayFree சானிடரி நாப்கினின் விளம்பரம் ஒரு அபத்தக் களஞ்சியம். பெண் ராணுவத்தில் சேர ஆசைப்படுகிறார். அம்மா உடனே, மாதவிலக்கு வந்தால் என்ன செய்வாய் என்று கவலைப்படுகிறார். ஸ்டேப்ரீ இருக்க கவலையேன் என்று முடிகிறது. மாதர் சங்கங்கள், வுமன்-லிப்வாதிகள் எல்லாம் இதையெல்லாம் கண்டுக்கொள்ளவே மாட்டார்கள் போல. இதைவிட கவலைப் பட விஷயங்களே இல்லையா. ஆனால், அவர்களுக்கான குறிக்கோள் ரஜினி பெண்ணை எப்படியெல்லாம் வசைபாடினார் என்று பி.எச்.டி செய்வது. நிற்க.

இனி நான் சொல்லப்போவது சனாதனவாதிகளுக்கு ஒப்பானது அல்ல. பெண்களுக்கான பிரத்யேக, அந்தரங்கமான உடல்ரீதியான சமாச்சாரங்களில் நுழைவதற்காக ‘பத்வா’ போடுங்கள். கவலையில்லை.

மாதவிலக்கு என்பது பெண்களுக்கான இயற்கை வரம். போனவாரம் லைப்செல் நிறுவனம், மாதவிலக்கில் வெளியேறும் ரத்தத்திலிருக்கும் ஸ்டெம் செல்கள், போன் மேரோவை (bone marrow)விட வலுவானவை. பல்வேறு விதமான எதிர்கால வியாதிகளிலிருந்து பெண்களைக் காபாற்ற வல்லவை என ஆய்ந்து, அதை சேகரிக்க ப்ளான் எல்லாம் போட்டு விட்டார்கள். டைப் 1 நீரிழிவு, பார்கின்சன், இதய அடைப்பு, மல்டிப்பிள் ஸெலோரிஸிஸ், தண்டுவடச் சிகிச்சை போன்ற பிரச்சனைகளுக்கு மாதவிலக்கு ரத்த ஸ்டெம் செல்கள் பயன்படும் என்று கண்டறிந்திருக்கிறார்கள். இதன் பலன்கள் முக்கியமானவை. லிசா ரே-வை இப்போது ப்ராண்ட் அம்பாசிட்டாராக போட்டிருக்கிறார்கள்.

தீட்டு என்று ஒதுக்கி வைத்த காலமெல்லாம் போய், தீட்டானது தான் எதிர்கால பாதுகாப்பு என்கிற நிலை வந்துவிட்டது. 60 வயது வரையிலுமான சேகரிப்புக்கு ரூ.50000. தவணை முறையில் 12 மாதங்களுக்கு ரூ.4,200 என்று தளத்தில் போட்டிருக்கிறார்கள்.

பெண்கள், பெண்களைப் பெற்ற ஆண்கள் இந்த மாதிரியான அறிவியல்பூர்வமான விஷயங்களுக்கு செலவு செய்யுங்கள். பெண்களுக்கு சேர்பது என்றாலே நகையும், கல்யாணச் செலவும் என்கிற சிந்தனையிலிருந்து கொஞ்சம் வெளிவந்து இதையும் செய்யலாம். இதை செய்தால், எதிர்காலத்தில் வரக்கூடிய உடல்ரீதியான பிரச்சனைகளிலிருந்து உங்கள் பெண்ணை பாதுகாக்க முடியும். இதை விட்டு விட்டு, மஞ்சள் நீராட்டு விழா, பூப்படைதல் போன்றவற்றில் மட்டன் பிரியாணிக்கு அடித்துக் கொண்டால் ஒன்றும் சொல்வதற்கில்லை.



ஆஸ்கர் விருது விழாவில் இன்செப்ஷனுக்கு பெரிய விருதுகள் கிடைக்காமல் போனது வருத்தமே. அந்த வருத்தத்தினை பாஸ்ட் கம்பெனியின் ”மாற்று ஆஸ்கர்” [Slideshow] ஈடு கட்டிவிட்டது. சினிமாவில் அறிவியல், கணிதம், நுட்பம் என்கிற வகையில் இன்செப்ஷன் மிக முக்கியமான படம். கனவுகளுக்குள் புகுந்து எண்ணங்களை விதைத்து, திசை திருப்பும் திருடன் என்கிற ஒற்றை வரி சுவாரசியமான விஷயம். மீதியை படத்தைப் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் ஒரு மார்க்கமான ஆள். இன்செப்ஷனுக்கு முந்தியப் படமான டார்க் நைட்’டில் (The Dark Knight) வரும் எதிர் நாயகர் ஜோக்கர். ஜோக்கரின் முக்கியமான செயல் ’கேம் தியரி’யை முன்வைத்து நாயகனான பாட் மேனை மிரட்டுவது. இரண்டு ஆட்கள். இருவர் எடுக்கப்போகும் முடிவுகளும் இருவருக்கும் முன்கூட்டியே தெரிந்தால், இருவரும் தங்களுடைய சுயலாபத்துக்காக என்ன முடிவு எடுப்பார்கள் என்பது தான் இந்த சமன்பாடு. இதை இரண்டு கப்பலில் (கைதிகள் ஒரு பக்கம். பொதுமக்கள் ஒரு பக்கம்) வெடிகுண்டு வைத்து யார் முதலில் அழுத்துகிறார்கல், பேட்மேன் எப்படிக் காபாற்றுகிறார் என்பதெல்லாம் படத்தினைப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள். கேம் தியரி பற்றித் தெரிந்துக் கொள்ள இங்கே போங்கள் அல்லது A Beautiful Mind படம் பாருங்கள். நாஷ் சமன்பாடு (?!) (Nash Equilibrium) என்பது சுவாரசியமான கட்டமைப்பு. ஜான் நாஷ் சொன்னதை தான் நோலன் ஜோக்கருக்கு பொருத்தியிருப்பார். சொல்லவந்தது, இந்த மாதிரியான முன்னேறிய அறிவியல், கணிதவியல், பொருளியல் தெரிவுகளை/சமன்பாடுகளை ஒரு திரைப்பட இயக்குநர் தன் படத்தில் சரியாய் பயன்படுத்துவது தான்.

அதேப்போல, இன்செப்ஷனிலும், நோலன் பென்ரோஸ் படிக்கட்டுகள் என்கிற கணிதவியல் தோற்ற உருவெளியினை (optical illusion) பயன்படுத்தியிருக்கிறார். சதுர அமைப்பில் அமைக்கப்பட்ட தோற்ற உருவெளி அமைப்புகள். இதில் ஏற ஆரம்பித்தால், முடிவில்லாமல், நீங்கள் மேலேப் போய்க் கொண்டே இருப்பீர்கள். முடிவிலாப் பயணம் என்பது மாதிரி. கனவுகளில் நாம் காணும் நிகழ்வுகள், நிகழ்காலத்தை விட மெதுவாக நகருபவை. அவற்றில் லாஜிக் குறைவாக இருக்கும். முடிவில்லாத ஒரு பயணத்தை நோக்கிப் போய்க் கொண்டேயிருப்போம். இதை காட்சி ரூபமாக சொல்ல, நோலன் தேர்ந்தெடுத்தது தான் பென்ரோஸ் படிக்கட்டுகள்.



அப்பா மகன் கணிதவியல் நிபுணர்கள் லயோனல் பென்ரோஸ் & ரோஜர் பென்ரோஸ் 1958ல் வரைந்தது இது. இதை முப்பரிமாணத்தில் செய்வது கடினம். வயர்டு இதழில் இதுப் பற்றிய கட்டுரை இருக்கிறது. இதை விரிவாய் படிக்காத ஒரு திரை இயக்குநனால் யோசிக்கவே முடியாது. தமிழ் சினிமாவின் சாபக்கேடு விரிவாய் படிப்பதற்கு பதில், விரைவாய் ஹீரோ வீட்டு வாசலில் கால்ஷீட்டுக்கு கால்கடுக்க ...................

இது தான் விஷயம். ஒரு கடினமான ஆராய்ச்சி சமாச்சாரத்தினை ஒரு அக்மார்க் கமர்ஷியல் படத்தில் சரியாய் புகுத்தி, அதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் தான் ஒரு சிறந்த இயக்குநனின் தேடலும், சமூகப் பார்வையும் முக்கியமாய் சாமர்த்தியமும் இருக்கிறது. இதை விடுத்து, நல்லப் படம் எடுக்கிறேன் பேர்வழி என்று தாத்தா செருப்பு மாட்டுவதை 10 நிமிடங்கள் காட்டுவதற்குப் பெயர் கலைப்படமல்ல; மொக்கைத்தனம். அந்த வகையில், தமிழில் ஷங்கர் முக்கியமானவர். ’எந்திரனி’ல் சிட்டி, சேரியில் இருக்கும் ரவுடிகளோடு காந்தப்புலத்தினைப் பயன்படுத்தி அரிவாள்களை பிடுங்குவது முக்கியமான காட்சி. எத்தனையோ அறிவியல் ஆசிரியர்கள் சேப்டி பின்னையும், காந்தத்தையும் பயன்படுத்தி கற்றுக் கொடுத்ததை விட, இது எளிதில் மக்களைப் போய் சேரும். மற்றப்படி, வாத்தியார் சொல்வதுப் போல ‘தமிழ்சினிமா ஒரு பூட்ட கேஸ்’



2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு அங்கே இங்கே என்று நீண்டு, இப்போது தேர்தல் பேரமாக மாறிவிட்டது. ஆனால், இதை விட சீரியசான விவாதம் அமெரிக்காவில் ஒடிக் கொண்டிருக்கிறது. ராஜ் ரத்தினம் என்கிறவர் நடத்திய கேலியான் நிறுவனம் insider trading செய்த சமாச்சாரத்திற்காக மன்ஹாட்டன் கோர்ட்டில் வைத்து விசாரிக்கப்படுகிறார். அவர் கூதல் செய்ததாக சொல்லப்படும் தொகை என்னவோ, இந்திய அளவில் ஜுஜுப்பி வெறும் $45மில்லியன் (200-210 கோடிகள்). இதை இங்கே ஒரு தொகுதியின் செயலாளாரேக் கூட செய்யும் சாத்தியங்கள் உண்டு. விஷயம் அதுவல்ல. இந்த வழக்கு சார்ந்து அவர்கள் விசாரிக்கும் ஆட்கள். அதில் ஒருவர் ரஜத் குப்தா.

போன வாரம் மார்ச் 1ல், ரஜத் குப்தாவின் மீது அமெரிக்க SEC வழக்குத் தொடர்ந்திருக்கிறது. ரஜத் குப்தா, இந்தியாவின் உலக அடையாளம். மெக்கென்சி & கோவின் தலைவரான முதல் இந்தியர். 62 வயது. ஹார்வர்ட் படிப்பு. உலகளாவிய மெக்கென்சியின் தலைவர் (1994-2003). இந்தியாவின் பெரும்பாலான கமிட்டிகளில் தலைவர். ஹைதராபாத்தின் இந்திய வணிகப் பள்ளியின் (Indian School of Business - ISB/Hydrabad)கமிட்டி உறுப்பினர். இப்போது அமெரிக்க அரசாங்கம் கேள்விக் கேட்கிறது. இந்தியாவில் மன்மோகன்சிங்/மாண்டேக் சிங் அலுவாலியா அமைக்கும் எல்லா கார்ப்பரேட்-குழுக்களிலும் ரஜத் குப்தாவின் பெயர் இல்லாமல் இருக்காது. அவர் மீதான குற்றச்சாட்டு, வாரன் பப்பெட் கோல்ட்மென் சாக்ஸ் கீழேப் போகும்போது $5 பில்லியன் கடன்பத்திரமாக தருவேன் என்று உள்ளே போர்ட் ரூம் கான்பரென்ஸ் காலில் சொன்னதை, கால் முடிந்தவுடன், அதே லைனிலிருந்து ராஜ்ரத்தினத்துக்கு சொன்னது. அதன்மூலம் ராஜ்ரத்தினம் கோல்ட்மென் சாக்ஸ் பங்குகளை சந்தையில் வாங்கி, பின் விற்று காசுப் பார்த்தார் (insider information).

இந்த வழக்கினை விஷயம் தெரிந்த வால் ஸ்ட்ரீட் நிபுணர்கள் மிகக் கூர்மையாகக் கவனிக்கிறார்கள். ரஜத் குப்தா இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று தெரிந்தவுடன், ப்ராக்டர் & கேம்பள் போர்டிலிருந்து விலகினார். போனவாரம், அவர் வகித்துவந்த அமெரிக்கன் ஏர்லென்ஸின் தாய் நிறுவனத்தின் போர்ட்டிலிருந்தும் விலகினார். இதை கண்டறிந்தது தான் சுவாரசியம். கிட்டத்திட்ட ராஜரத்தினத்தில் செல்பேசிக்கு அழைப்பு வந்த அத்தனை எண்களையும் ஒரு டேட்டா பேஸில் போட்டு, குடாய்ந்து எடுத்து, பிற விஷயங்களோடுப் பொருத்தி, இந்தக் குற்றச்சாட்டினை நிறுவியிருக்கிறார்கள்.

மேலே சொன்னது தான் விஷயம். இங்கே ஊழல் என்று எதுவும் நடக்கவில்லை. ஒரு நிறுவனத்துக்குள் நடக்கும் சங்கேத பரிவர்த்தனைகளை வெளியே சொல்லி, அதன் மூலம் இன்னொருவர் பயனடைந்தார் என்பது தான் குற்றச்சாட்டு. வெறும் விஷயம் சொன்னதற்கே இத்தனை ஆராய்ச்சி, நிறுவுதல், நிபுணர்களோடு கலந்து ஆலோசித்தல் என நீள்கிறது. இங்கே காதிருக்கும் எல்லோரும் நீரா ராடியாவும், கனிமொழியும் என்னப் பேசினார்கள் என்பதைக் கேட்டிருந்தாலும், சிபிஐ தன் எஜமானர்களின் தலையாட்டல்களுக்காகவும், அரசியல் பேரங்களுக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறது. India Everywhere!

இந்த வார வீடியோ

மூன்று வருடங்கள் தேடி கடைசியில் கண்டுபிடித்த ஸ்பெடர்மேன் காமிக்ஸின் ஒரிஜினல் இண்ட்ரோ.

February 25, 2011

சனிமூலை - 011

சீட்டுக் கிழித்தப்பின் சிக்கனமாய் இந்தியில்
கூட்டம் தலையெண்ணிக் குர்னாம்சிங்க் ஒட்டச்
சமொசாவும் கெட்டிலில் சாயுமாய் நாயர்
விமானம் பறக்குது பார்.
[ராயர் காபி கிளப் - இரா.முருகன் - பக்கம் 22]

சில ஆருடங்கள் பொய்த்துப் போவதில் எல்லாருக்கும் சந்தோஷமே. தக்காண ஏர்லைன்ஸ் பற்றி முருகன் எழுதியது மேலே. டெக்கான், கிங்பிஷர் ரெட்டாகி, மல்லையா கிங்பிஷர் ப்ராண்டையை அடகு வைத்து ரூ.2000 கோடி வாங்கி, வெட்டியாய் என்.டி.டி.வி குட் டைம்ஸ் நடத்தி, வருடக் கடைசியில் ’ராம் வாக்’கி, அசத்தல் அழகிகளாக எடுத்து, ஹவாயில் ஷூட் செய்து, காலண்டர் செய்து, விநியோகித்து, மால்களின் உயர்தர சலூன்களில், முலைக்காம்புகள் மட்டும் தெரியாமல், மற்றெல்லாம் தெரிய போஸ் கொடுக்கும் சுந்தரிகளை முடிவெட்டும் போது ஒரக்கண்ணால் கற்பழித்து, ரூ.300 மொய் எழுதி, வெளியே வந்தால் சென்னை வெயில் சுள்ளென்று முறைக்கிறது.

ஏர் ஏஷியா திருச்சி - கோலாம்பூர் விமானத்தில், கை முறுக்கு விற்காததுதான் பாக்கி. குறைவிலை விமானச் சேவைகள், கார்ப்பரேஷன் சாக்கடை கொசுக் குடும்பம் மாதிரி பரவி, இன்றைக்கு முழுச் சேவை விமான சேவைகளே குறைவிலை விமானச் சேவைகளோடு கட்டி தொழில் நடத்தவேண்டிய கட்டாயம். பொருளாதாரமும், பிஸினஸ் மாடல் மாற்றங்களும் எல்லாவற்றையும் மாற்றிவிடும். இதை வைத்துக் கொண்டு, ஜெர்க்கடிக்க Clayton Christensen-இன் Innovation Dillemma & Innovation Solution படிக்கலாம். Disruptive Innovation என்பதை தெரிந்துக் கொண்டால், மீட்டிங்களில் ஜல்லியடித்து, ஸ்ட்ராடஜி குழுவில் இணைந்து, ப்ரோமோஷன் வாங்கி, பேங்க் பாலன்ஸ் பெருக்கி, பின்னாளில் way back in 2010, i was the head of என்று விர்ட்சுவல் சுவர்களில் பேரன்களோடு கொஞ்சலாம். இப்போதைக்கு, நாஸ்ட்ராடாமஸ் இதை ஏற்கனவே சொன்னார் என்று சொல்லும் கும்பல் இணையத்தில் இருக்கும்; அவர்களோடு போய் சேர்ந்துக் கொள்ளலாம்.



முபாரக் ‘முபாரக்’ சொல்லாமல் ஒடிப் போனார். மக்கள் வெள்ளம், பிரமிடுகளை மறைத்தது என்று எதாவது தமிழ் தினசரியில் எழுதியிருப்பார்கள். கடாபி யார் மீது பழிப் போடலாம் என்று நாளொரு நியுஸும், பொழுதொரு பாமுமாய் எண்ணெய்க் கிணறுகளை நாசம் பண்ணத் திட்டம் போடுகிறார். லிபியர்கள் ரோட்டுக்கு வந்து கண்டதையெல்லாம் எரிக்கிறார்கள். துனிசியாவிலும், அல்ஜீரியாவிலும் பிரச்சனைகள். சுதந்திரம் என்பதின் எல்லைகள் என்னவென்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் இடதுசாரிகள், அறிவுஜீவிகள், ஆளுங்கட்சி எதிர்ப்பாளர்கள் எல்லாம், எகிப்தில் நடந்தது இந்தியாவிலும் நடக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். சிரிப்பதா, அழுவதா தெரியவில்லை. எகிப்தின் வெற்றிக்குப் பின், எல்லாரும் தாங்களும் சுதந்திரமடைந்தால் சுபிட்சமாகிவிடுமோம் என்கிற கனவில் அல்லாஹூ அக்பர் கோஷத்தோடு, கொடிப் பிடிக்கிறார்கள்.

எங்களுடைய பக்கத்து ஊரிலும் இப்படித்தான் நடந்தது. தீர்க்கமான ஒருவர் தன் மக்களுக்காக, சண்டைப் போட்டு, பிரித்து வாங்கிக் கொண்டு லிபரல் இஸ்லாமிய தேசமாக்க முயற்சித்தார். அவர் மண்டையைப் போட்டு, பின் வந்தவர்கள் அப்பம் பிடுங்கின கதையாய் முயற்சித்து, ராணுவத்தின் கீழ்ப் போய், இன்று வரைக்கும் விளங்காமலேயே வாழ்ந்துக் கொண்டிருக்கிறது - பாகிஸ்தான். சர்தாரிகள் எதற்கும் ஜவாப்தாரிகள் இல்லை போலும். கோர்ப்பசேவின் பெத்ரோஸ்ய்கா-யும், பின் தூங்குமூஞ்சி எல்ஸ்டினின் கட்டற்ற சுதந்திரமும், அலிகார்ஜ்களின் (Oligarch)பங்குப் போடலும், பின்னால் அலிகார்ஜ்கள் பிடிக்காத கே.ஜி.பியிலிருந்து வந்த விளாதிமிர் புதினின் இரும்பு கரமும், ஜால்ரா மெடவடேவும் - அன்றிலிருந்து இன்று வரை ரஷ்யாவில் ’சுதந்திரம்’ படும் பாட்டை யாரும் கண்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. எகிப்தின் கோஷம் முபாரக் ஒழியவேண்டும். ஒழிந்தபின் என்ன? யாரும் யோசித்தாகத் தெரியவில்லை. இப்போது கட்டுப்பாடு ராணுவத்தின் கீழிருக்கிறது. History hopefully not repeats itself.



கோவாவில் மகேஷ் பூபதி - லாரா தத்தா திருமணம் நடந்து முடிந்தது. லாரா தத்தாவை எப்படி உலக அழகியாக்கினார்கள் என்பது வரலாற்றுப் பிரச்சனை. ஒரு ஹிட் கூட எனக்கு தெரிந்து லாரா தத்தா இந்தியில் தரவில்லை. மொக்கை சல்மான் படங்களில் வந்ததுதான் ஒரே தகுதி. பாலிவுட் எப்படி இயங்குகிறது என்று புரியவே இல்லை. ஹ்ரித்திக் ரோஷன் வரும் ஒரு டிவி நிகழ்ச்சிக்கு எபிசோடுக்கு ரூ.2கோடி சம்பளமாம். திங்கள் முதல் வியாழன் வரை எல்லோரும், வெள்ளி முதல் ஞாயிறு வரை நடக்கும் யார் பார்ட்டிக்கு போக வேண்டும் என்கிற திட்டத்திலேயே இருப்பார்கள் போல. ரஜினி ரசிகர்களை நக்கலடிக்கும் அறிவுஜீவிகள் ஒரு எட்டு மும்பைக்குப் போய் வருதல் நலம்.

சரி தத்தாவுக்கு வருவோம். சுஷ்மிதா சென் - ஐஸ்வர்யா ராய் ஆண்டிகளுக்கு பின்னாடி வந்த அழகிகளில், டயானா ஹேடனுக்கு சற்று மேலே இருக்கிற ஒரேக் காரணத்தால் இந்தியில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஒரு வேளை திரையில் பார்க்காத வேறு தகுதிகள் இருக்கக்கூடும். லியாண்டரோடு டூ விட்டு, இப்போது தான் மீண்டும் சேர்ந்திருக்கிறார் மகேஷ் பூபதி. ஏற்கனவே மணமுறிவானவர். முதல் மணம் சென்னையைச் சேர்ந்த மாடல் ஸ்வேதா ஜெய்சங்கரோடு. இப்போது லாரா தத்தாவோடு. இந்த மாதிரி பிரபலங்கள் மணம் செய்தலும், பின் விலகுதலும் சாதாரணமாய் நடக்கிறது. மத்தியத்தர வர்க்கம் தான், திருமணங்களை செதுக்கிய சிற்பங்கள் மாதிரி நீண்டநாள் தாங்கும் சமாச்சாரமாய் பார்க்கிறது. pre-nupital agreement-டோடு தான் மோதிரமோ, தாலியோ மாற்றும் காலமிது. இணையாய் வாழ்ந்தால் சரி. ஸ்வெதா? அவருக்கும் ஒரு தொழிலதிபருக்கும் அதே போன வாரம் திருமணம் நடந்தது. நாராசமாய் கவுண்டமணியின் ‘தொழிலதிபர்’ கமெண்ட் நினைவுக்கு வந்துத் தொலைக்கிறது.



ட்வீட்டரில் ஏழை, ஏழ்மைப் பற்றி 4 வரி எழுதியதற்கு நண்பர்கள் பாய்ந்து விட்டார்கள். நண்பர் அனாதை ஆனந்தன் நியுயார்க் டைம்ஸ் சுட்டிக் கொடுத்து இந்தியாவில் குழந்தைகள் குறைச்சத்தோடு இருக்கிறது என்றார். இன்னும் சில நண்பர்கள், முதலாளித்துவ அடிவருடி என்றும், மாமல்லன் பொலிடிக்கல் கரெக்ட்னெஸுக்கு எதிர் இன்சென்சிடிவிடியா எனக் கேள்விக் கேட்டார். முதலில் இந்த ‘நான் கடவுள்’ செண்டிமெண்டிலிருந்து வெளியே வருவோம். நான் இந்தியாவில் ஏழைகள் இல்லையென்றோ, ஏழ்மையே இல்லையென்றோ சொல்லவில்லை. நாம் தேவையில்லாமல், ஏழ்மையை romanticize பண்ணிக் கொண்டிருக்கிறோம்.

துலாப்பாரத சாரதா ரேஞ்சுக்கு பீல் பண்ணத் தேவையில்லை. நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் 30 வருடங்களில் ஒரு பட்டினி சாவும் இல்லை. இந்தியாவில் சாப்பாடு போகாத இடங்களிலெல்லாம் செல்போனும், சாடிலைட் டிவியும் போய் விட்டது. வேலையில்லை என்று இன்று எந்த மெட்ரோவிலும் கதைவிட முடியாது. கொஞ்சம் கிராமப்பக்கம் போய்க் கேட்டால், NREGAவுக்குப் பிறகு, நடவுக்கு, அறுவடைக்கும் ஆட்கள் இல்லையென்று புலம்புகிறார்கள். பஜாஜ் பல்சரும், டிவிஎஸ் அபாச்சியும் செம்மண் சாலைகள் மிதித்து நாட்களாகின்றன. மார்க்சீயர்களும், அறிவுஜீவுகளும் தெருமுனைக் கூட்டங்கள் போட்டு எளிமையும், வளமையும் பற்றிப் பேசட்டும். எனக்கு என் ப்ளாஸ்மா டிவியும், கிரிக்கெட்டும், ரியால்டி ஷோக்களும் முக்கியம். கம்யுனிஸம் பேசும் காம்ரேட்டுகள், ரஷ்யாவைப் பாருங்கள். சீனாவைப் பாருங்கள். ரஷ்யர்களே லெனின்கிராடினை பீட்டர்ஸ்பர்காக மாற்றி மெக்டோனல்ட்ஸும், கேப் கடைகளுமாக மாற்றி விட்டார்கள். இதனால், இந்தியாவில் சுரண்டல் இல்லை; மொள்ளமாரித்தனமில்லை; இந்தியா ஒளிர்கிறது என்று அர்த்தமில்லை. மார்க்ஸியர்களும், மாவோயிஸ்டுகளும் போகாத இடங்களில் கூட மீடியா போய்விட்டது. இனி ஏழ்மையை அதுப் பார்த்துக் கொள்ளும்.

January 31, 2011

சனிமூலை - 010

பெங்களூரில் சந்திப்புகளுக்கு நடுவில், கொஞ்சம் படங்கள் பார்த்தேன். டிவிடியில் Inception, Changeling & மூவிஸ் நவ்-வில் Meet the Spartans. spoof வகையறா படம். இப்படி படம் வந்தாலேயொழிய டிவி சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், பேஜ் 3 ஜோக் பர்சானலிடிகளை இந்தியாவில் திருத்த முடியாது. சகட்டு மேனிக்கு எல்லா டிவி விஷயங்களையும் நக்கலடிக்கிறார்கள். அமெரிக்கன் ஐடோல், ரியால்டி ஷோ நீதிபதிகளின் கிளசரின் அழுகைகள், டீலா/நோ டீலா, வீடியோ கேம்ஸ், விளம்பரங்கள், பேண்டீஸ் போடாத லிண்சே லோகன், பிரிட்னி ஸ்பியர்ஸின் குடிப்போதை ஆட்டம் என சகலங்களின் நையாண்டி காக்டெய்ல். படத்தினை டிவிடியில் பார்த்தால் இறுதியில் வரும் I'll Survive காணத் தவறாதீர். 180 நிமிடங்கள் நான்-ஸ்டாப் நகைச்சுவை. நாயகி கார்மென் எலக்ட்ராவை, கொ.ப.செவாக நியமித்தால், ஒபாமா அடுத்த ரவுண்ட் வர சத்தியமாக வாய்ப்புகளிருக்கிறது. குயிக் கன் முருகனில், மேங்கோ டாலியா ரம்பா அழகாகவும், ஆழமாகவும் க்ளீவேஜ் காட்டுகிறார்.

டெக்னாமிக்ஸ் எழுத ஆரம்பித்து 4 மாதங்களாகப் போகிறது. வாராவாரம், ஆரவாரம். கொஞ்சம் taxing ஆக இருந்தாலும், சில பல ஷொட்டுகளோடு ஒடிக் கொண்டிருக்கிறது. பா.ராகவனுக்கு நன்றி. கூட்டுப்பதிவு மாதிரி இருந்தாலும், தமிழ் பேப்பரால் விஐபியானவர் அரவிந்தன் நீலகண்டன். நான் புத்தகக்காட்சியில் அள்ளுவதற்கு முன்பு, புக்வார்ம்ஸில் எல்லா புத்தகங்களையும் லாரியிலேற்றி கொண்டு சென்றுவிட்டார். நறநற. புத்தக்காட்சி சுவாரசியம். கொஞ்சம் புத்தகங்களும் நிறைய பேச்சுமாய் போனது. பபாஸி மட்டும் இதை நடத்தவில்லையென்றால், இன்னும் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது. தமிழ் பதிப்பகங்களுக்கு ஆங்கிலப் பதிப்பகங்கள் மேல் என்ன கோவமென்று தெரியவில்லை. கொஞ்சம் கடுப்போடே இருக்கிறார்கள். ஆங்கிலம் இன்னும் நிறைய `கார்`-ஆசாமிகளை கொண்டு வரும். தென்சென்னை நுனிநாக்கு ஆங்கில ஆட்கள் நிறைய வருவார்கள். அவர்கள் தப்பித் தவறி, தமிழ்ப் புத்தகங்களும் வாங்கலாம். லிங்குசாமி, விக்ரமன், பாலாஜி சக்திவேல், எஸ்.ரா, பாலகுமாரன் தென்பட்டார்கள். ப்ராங்பர்ட், டெல்லி, கொல்கத்தா மாதிரி பதிப்பகங்களுக்குள் வணிக சாத்தியங்கள், மொழிப்பெயர்ப்புகள், பிற டிஸ்டிரிப்பூயுஷன் சமாச்சாரங்கள் இங்கே நடக்கிறதா தெரியவில்லை. பத்ரிக்கே வெளிச்சம்.
கேள்வி: சம்பந்தா சம்பந்தமேயில்லாமல், எஸ்.எஸ்.சாந்த் & கோ மாதிரியான ஆட்கள் எல்லாம் கடைபரப்பும்போது, தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு எக்ஸ்போர்ட் பண்ணும் ப்ளாப்ட்(Blaft Publications) ஏன் வரவில்லை ? (வந்திருந்தால், சாருவின் சீரோ டிகிரி ஆங்கிலப்பதிப்பு 10,000 காப்பிகள் விற்றிருக்கும் அல்(ல)வா ;) )

How They Blew It - கோகன் பேஜ் என்கிற லண்டன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகம். 16 கோடீஸ்வரர்கள் எப்படி தங்களின் சொத்துக்களை சீரழித்து, வீணடித்து, நாசமாகி தெருவுக்கு வந்தார்கள்; நாடு மாறி ஒளிந்தார்கள்; தற்கொலை செய்துக் கொண்டார்கள் என்பதை விரிவாக அலசும் புத்தகம். சுவாரசியமான நடை. தொழில் முனைவோராக நீங்கள் இருந்தால், முதலில் ஒரு காப்பி வாங்கிப் படித்துவிடுங்கள். இது எப்படியெல்லாம் ஆடக்கூடாது என்பதற்கானப் புத்தகம். இதுப் போல இந்திய மொழிகளில் புத்தகம் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. ஒரு சுவாரசியத்துக்கு, எப்படி நூஸ்லி வாடியா, திருபாய் அம்பானியின் முன் காணாமல் போனார்; ப்ரீமியர் /ஸ்டாண்டார்டு மோட்டார்ஸ் 90களின் பிற்பகுதியில் கொரிய கார்களின் படையெடுப்பில் மறைந்துப் போனார்கள்; மைக்ரோலேண்ட் ஆரம்பித்து ஒரு காலத்தில், இந்தியாவின் மிகப்பெரிய இண்டர்நெட் தொழில்முனைவோராக இருந்த பிரதீப் கர் என்னவானார்; ஹோம் ட்ரேட் என்னாவானது மாதிரியான உள்ளூர் சமாச்சாரங்களின் பின்னிருக்கும் கதைகள், விஷயங்களும், விஷமங்களும் நிறைந்தவை. புனைவுகளை விட இம்மாதிரியான நிஜங்கள் சுவாரசியமானவை. இன்னும் லோக்கலாக, ரமேஷ் கார்ஸ், அனுபவின் தேக்கு மரத்திட்டங்கள், ஸ்டெர்லிங் குழுமத்தின் வீழ்ச்சி எனத் தேட ஆரம்பித்தால், திரில்லர் ரேஞ்சுக்கு நிஜக்கதைகள் கிடைக்கும். The first billion is the hardest - T.Boone Pickens. அமெரிக்காவின் ஆயில் பில்லியனர்களில் ஒருவர். சொந்தக்கதை. நியுயார்க் டைம்ஸ் பெஸ்ட்செல்லர். ஆயில் சண்டைகளின் பின்னாடியிருந்து எழுதப்பட்டிருக்கும் புத்தகம். அமெரிக்கா தேசப்பக்தி தலையெடுத்தாலும், சுவாரசியமான இன்னொரு புத்தகம்.

தினந்தந்தியில் ஷாருக்கான் தன்னுடைய ரெட் சில்லிஸ் நிறுவனத்தினை சந்தையில் பட்டியிலிடப்போவதாகப் படித்தேன். பொழுதுப்போக்கு, கேளிக்கை நிறுவனங்களை சந்தையில் பட்டியிலிடுவது என்பது நம்மூரிலிருந்து தான் ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். ஜி.வி.பிலிம்ஸ் தான் முதல் நிறுவனமாய் இருக்கலாம் (அல்லது முக்தா ஆர்ட்ஸா ?) ஜி.வி. பிலிம்ஸ் விசுவை வைத்து ஜெயலலிதா காலக்கட்டத்தில் ஒரு படமெடுத்தார்கள். ஒரே போதனை நெடியோடு இருக்கும். வெங்கடேஸ்வரன், மைக்கேல் ஜாக்ஸன் பின்னால் போய், கெட்டு, சீரழிந்து, தூக்கில் தொங்கினார். அப்புறம் ஜி.வி.பிலிம்ஸ் கிட்டத்திட்ட ஒரு தசாம்சம் கழித்து டாக்சி எண் 9211 என்கிற இந்திப் படத்தினை ரீமேக்கினார்கள். இப்போது என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. நெட்பிலிக்ஸ் on-demand movies இப்போது கொண்டுவருகிறது. இதை எனக்குத் தெரிந்து 5-6 வருடங்களுக்கு முன்பே இந்தியப் படங்களுக்கு செய்ய இருப்பதாக ஜி.வி.பிலிம்ஸ் சொன்னது. இதற்கு அடுத்து வந்து சீரழிந்த நிறுவனம், பென்டாஃபோர். வாத்தியார் இருந்த மீடியா டிரீம்ஸில் `பாரதி` மாதிரியான ஒரு படம் எடுக்கமுடிந்தது. அளவுக்கு மீறிய வளர்ச்சித்திட்டங்களினாலும், அகலக்காலினாலும் அவர்களும் வீணாய் போய், `மாயாஜால்` அரங்கோடு ஒரங்கட்டினார்கள். பிரமிட் நடராஜனும், சுவாமிநாதனும் சேர்ந்து ஆரம்பித்த பிரமிட் சாய்மிரா அதற்கு பின்னாடி இந்த லிஸ்டில் சேர்ந்தது. சுவாமிநாதன் செபியை டகால்டித்த குற்றத்திற்காக, ட்ரேட் செய்யக்கூடாது என்று ஒரங்கட்டப்பட்டார். நடராஜன், சேர்மன் எமிரிட்டஸா ஒதுங்கி, த்ன்னுடைய பங்குகளை விற்றுவிட்டு வெளியேறினார். ஊரெங்கும் அவர்கள் லீஸ் எடுத்த திரையரங்குகள் சில சமயம் பேனாவாலும், பல சமயம் போன் காலாலாலும், சன் பிக்சர்ஸுக்கு போனது. ஜி.வி.பிலிம்ஸ், பென்டாஃபோர், பிரமிட் சாய்மீரா மாதிரி இல்லாமல், கெளதம் வாசுதேவ் மேனன் (இந்த மலையாளிகள் ஏன் இன்னும் ஜாதிப்பெயரை பின்னால் கட்டிக் கொண்டு அலைகிறார்கள் ?) லண்டன் எய்ம்`ல் (AIM - Alternative Investment Market) தன்னுடைய போட்டான் கதாஸை (Photon Kathas) பட்டியிலிட்டிருக்கிறார். எய்மில் லிஸ்ட்டான இந்திய கேளிக்கை நிறுவனங்களின் ட்ராக் ரிக்கார்டு இதுவரை மோசமாகதான் இருக்கிறது. கெளதம் அந்த மித்தை உடைப்பாரா என்று பார்க்கவேண்டும். மணிரத்னம் மெட்ராஸ் டாக்கிஸை தனி நிறுவனமாக வைத்திருக்கிறார். ஷங்கர் எஸ் பிக்சர்ஸுக்கான காசினை IDBI-யில் கடன் வாங்கி, வட்டி கட்டி, படம் போண்டியானால், எந்திரன் மாதிரி ஒரு மெகா ஹிட் செய்து கடன் அடைக்கிறார். ஒருவேளை ஏஜிஎஸ்ஸோ, ரெட் ஜெயிண்டோ, க்ளவுடு நைனோ பின்னாளில் பட்டியிலிடலாம்.*

`மயிலை திருவிழா`வின் கடைசி நாளில் கொஞ்சம் சுற்றினேன். மாமிகளின் கோலங்கள், ரங்கராடினம், கர்நாடக சங்கீத ஹாங் ஒவர், "can you pass on that குழிப் பணியாரம். the other stall கேழ்வரகு அடை was awesome" என்கிற மாதிரியான இங்கிதமிழில் பேச்சு, தெருவோர குடைமிளகாய் பஜ்ஜி என கலவையாய் போனது. முன்பு மோர், கதம்ப சாதமெல்லாம் கொடுத்தார்கள். நான் பார்க்கும்போது இல்லை. இந்த மாதிரி திருவிழா ஏன் திருவல்லிக்கேணியிலோ, திருவொற்றியூரிலோ, புரசைவாக்கத்திலோ நடக்கமாட்டேன்ங்கிறது ? சென்னை சங்கமம் இந்த முறை, தியேட்டர் கிடைக்காத நல்லப் படம் போல, வந்ததும், போனதும் தெரியவில்லை. இந்த மாதிரி நடத்துவதற்கு பதிலாக, யாரேனும் முன் வந்து, நாட்டார் கலைகளையும் இன்ன பிற செவ்வியல் கலைகளையும் பேக்கேஜ் செய்து Cirque de Soleil மாதிரி செய்தால் அட்டகாசமா இருக்கும். சோசியல் எண்டர்ப்ரைசுகளுக்கான ஈக்விட்டி துட்டும், நிறைய நேரமும் இருந்தால் நானே செய்வேன். இல்லை. இப்போதைக்கு, முத்துசாமியோ, அனிதா ரத்னமோ முயற்சிக்கலாம். அலாயன்ஸ் ப்ரான்ஸும், போர்ட் பவுண்டேஷனும் கூடவருவார்கள். தமிழாசிரியர்கள் தமிழைக் கொன்றது மாதிரி, கூத்துக்கலை வாத்தியார்கள் அடம்பிடிக்காமல் அதை ஜனரஞ்சகப் படுத்த முன்வந்தால், கலையும் பரவலாகும். கல்லாவும் நிரம்பும். கலைஞர்களுக்கும் முழுவயிறு நிறையும். இதற்கும் ம.க.இ.க நடத்தும் கலை இரவையும் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். பிலிம்ஸ் டிவிஷன் படங்களை ஆக்‌ஷன் கொப்பளிக்கும் உன்னதப் படங்கள் என்று நம்மை, ம.க.இ.க சொல்லவைத்து விடுவார்கள்.

இந்த வார லிஸ்ட்

காதுக்கு: ஐய்யயோ நெஞ்சு அலையுடி (ஆடுகளம்), வந்தனமய்யா வந்தனம் (ஈசன்) (யார் குரல் இது?)
கண்களுக்கு: `ஒத்தச் சொல்லால` பாடலில், தனுஷ் லுங்கியினை வரிந்து கட்டிக் கொண்டு ஆடும் impromptu மாதிரியாக தென்படும் ஆட்டம் (Well done, டான்ஸ் மாஸ்டர் தினேஷ்)
மூளைக்கு: Meatball Sundae by Seth Godin

* சன் பிக்சர்ஸ், சன் குழுமத்தின் ஒரு அங்கம். சன் குழுமம் பட்டியிலிடப்பட்ட நிறுவனம். சன் பிக்சர்ஸ் தனியாக இன்னும் சந்தையில் இல்லை. வரவும் வராது என்று தோன்றுகிறது.

June 18, 2009

சனிமூலை - 009

இந்தியாவின் பணவீக்கம் முதல்முறையாக -1.61% குறைந்திருக்கிறது. ஏற்கனவே பணவீக்கம்(Inflation)/பண இளைப்பு(Deflation) பற்றி பார்த்திருந்தோம். உடனே வந்த கேள்விகள், பண இளைப்பு இன்னமும் பெருகுமா? என்ன ஆகும்?

உண்மையில், இந்த பண இளைப்பு தற்காலிகமே. நிரந்தரமாக இருக்காது. கச்சாப் எண்ணெயின் விலை $70/பேரல் ஒடிக் கொண்டிருக்கிறது. இந்தியா கச்சா எண்ணெயினை பெருவாரியாக இறக்குமதி பண்ணும் தேசம். அதனால் நம் அன்னிய செலவாணி அதிகம். அதனால் எல்லா பொருட்களின் விலையும் கொஞ்சம் ஏறும். மீண்டும் பணவீக்கத்திற்கு உள்ளே வருவோம். முரளி தியோரா அமைச்சராக பொறுப்பேற்ற போது சந்தை விலையிலேயே பெட்ரோல் பொருட்களின் விலை இருக்கும் என்று ஜபர்தஸ்தாக அறிக்கையெல்லாம் விட்டார். உண்மையில், இந்தியா மாதிரி ஒரு நாட்டில் மான்யம் இல்லாமல் பெட்ரோல்/டீசல் விற்கமுடியாது.ஆந்திரா/ராஜஸ்தான்/அஸ்ஸாம்/வட கிழக்கு மாநிலங்களில் பெருவாரியாக ஏதாவது ஒரு கண்டுபிடிப்பு நடந்து, பகவான் நம்மை ரட்சித்தாலேயொழிய, நாம் அரபு நாடுகள் இல்லாமல் குடித்தனம் நடத்த முடியாது.

பங்கு சந்தை எதிர்ப்பார்த்ததைப் போலவே இறங்கிக் கொண்டிருக்கிறது.பட்ஜெட் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. ஆகவே சந்தையின் இறக்க விகிதங்கள் அதிகமாகவும், ஏற்றங்கள் குறைவாகவும் இருக்கும். ஆனால் இந்த டூபாக்கூர் பண இளைப்பு என்கிற ஒரு விஷயத்தினை வைத்துக் கொண்டு ஒரு லாபியே வட்டி விகிதத்தினை குறைக்க சொல்லும். இவ்வளவு நிதிநிலை சீர்கேடுகள் உலகமெங்கும் நடந்தாலும், இந்தியா பெரிய அளவில் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு மொத்த இந்தியாவும், மத்திய வங்கியின் முன்னாளைய கவர்னர் ஒய்.வி.ரெட்டிக்கு கடமைப்பட்டிருக்கிறது. எவ்வளவோ மேலிடத்து அழுத்தங்கள் வந்த போதிலும், தொடர்ச்சியாக கருமமே கண்ணாயினர் வகையறா அவர். அவரால் தான் இன்னமும் நாம் நிலையாய் நிற்க முடிகிறது.

சமீபத்தில் மத்திய வங்கி சத்தமே போடாமல் சில விஷயங்களை சொல்லியிருக்கிறது. ஒரு லட்ச ரூபாய் காசோலைகள் மே.1 முதல் உயர் மதிப்பு (High Value) காசோலையாக கணக்கிலெடுக்கப்பட மாட்டாது. 5 லட்சம் தான் இப்போதைக்கு உயர் மதிப்பு. இதுவும் செப்-அக்டோபரில் 10 இலட்சமாக மாறும். அடுத்த ஏப்ரல் 2010இல் உயர் மதிப்பு காசோலை என்கிற ஒரு வகையறாவே இருக்காது. மத்திய வங்கி வெகு தீவிரமாக தேசிய மிண்-பண மாற்ற முறையினை (National Electronic Funds Transfer(NEFT) ) வங்கிகளுக்கும், வாக்காளர்களுக்கும் பரப்ப முயன்று கொண்டிருக்கிறது.

நான் ஒரு ஆன்லைன் வங்கிவாசி.NEFT மற்றும் RTGS - Real Time Gross Settlement போன்றவற்றினை பயன்படுத்துபவன் என்கிற முறையில், இம்முறைகள் பெரும்பாலான பணரீதியான கேடுகளை நிராகரிக்கும். கூடுமானவரை 25000 ரூபாய்க்கு மேல் எவ்விதமான கொடுக்கல் வாங்கலாய் இருந்தாலும் NEFT வழியாக செய்யுங்கள். ஒரே நாளில் அல்லது முழு 24 மணிநேரத்திற்குள் பணம் மாறிவிடும். ஒரு லட்சத்திற்கு மேலென்றால் RTGS செய்யுங்கள். அடுத்த 10 நிமிடங்களுள் மாறிவிடும். பல அலைச்சலகள், செலவுகள், போன்கள், பேரங்கள், வாக்குவாதங்கள் மிச்சம். 2015க்குள் காசோலைகள் வழக்கொழிந்துவிடும் என்பது என் தனிப்பட்ட எண்ணம்.


போன வாரம் ஒரு உடுப்பி ஒட்டலில் என் ஆர்டரினை கொடுத்து விட்டு, தேமே என்று விட்டத்தினை பார்த்து கொண்டு, உட்கார்ந்த நேரத்தில், “ஏன் சார் தோனி இப்படி சொதப்பறான்” என எதிரில் இருப்பவர் பேச ஆரம்பித்தார். இந்தியாவில், முன்பின் தெரியாத ஆட்களிடம் பேச வேண்டிய கட்டாயங்கள் வந்தால், நீங்கள் பேசும் முதல் மூன்று விஷயங்களில், இந்த மூன்று விஷயங்கள் இல்லாமல் இருக்காது - அரசியல், சினிமா, கிரிக்கெட்.

வாத்தியார் கிரிக்கெட் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.ஐபிஎல் பார்க்காமல், டி20 பற்றி எழுதாமல் போய்விட்டாரே என்கிற வருத்தம் எனக்கு எப்போதுமுண்டு. இந்தியா நல்ல பீமபுஷ்டி பயில்வான்களாக போய் லண்டனில் இறங்கி, ஒமக்குச்சி நரசிம்மன் போல் உதைப்பட்டு ஊர் வந்து சேர்ந்தார்கள். கிரிக்கெட், சினிமா, அரசியல் என்கிற மூச்செயல்கள் தான் இந்தியாவை ஆளுகின்றன.

கதைசொல்லியே வளர்ந்த/வாழ்ந்த பரம்பரை நம்முடையது. அதனாலேயோ என்னமோ, இன்னமும் நாடகத்தனமான தமிழ் திரைப்படங்கள் வெற்றி பெருகிறது. நாம் தமன்னாவில் ஐக்கியமானால், ஜெனிலியாவினை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது மும்பாய். கிரிக்கெட் வீரர்கள் நடிகைகளுடன் தொடர்பு. அரசியலுக்கும் பாலிவுட்டிற்கும் இருக்கும் சம்பந்தம். மேட்ச் பிக்சிங். கிரிக்கெட் வீரர்கள், நடிக/நடிகைகள் அரசியலில் இறங்குவது (அசாரூதின், ஜெயப்பிரதா, சத்ருஹன் சின்ஹா, நெப்போலியன்). சினிமாவினிற்குள் / கிரிக்கெட்டிற்குள் அரசியல் செய்வது என எப்படிப்போட்டு கலக்கினாலும் கிடைக்கும் சுவையான காக்டெய்ல், இந்தியாவில் சினிமா.அரசியல்.கிரிக்கெட்.

தோனியின் கொடும்பாவி எரித்த கையோடு, “தேகா துஜை, தேக்கா முஜை” என ஷாருக்கான்/தீபிகா படுகோனின் பரந்த மார்புகளையும், உயரமான கால்களையும் பார்த்துக் கொண்டே, அரசியல்வாதிகளை சலூனில் திட்டிக் கொண்டே டீக்கு ஆர்டர் கொடுக்கும் அற்புதர்கள் நாம். எல்லா மனிதர்களுக்குள்ளும் இருக்கும் ஜெனடிகல் கோடில், இந்தியர்களுக்கென்றே சில தனித்துவமான ஜீன்கள் இருக்கலாம் என்பது பரவலான அபிப்ராயம். அமெரிக்க/ஐரோப்பிய விஞ்ஞானிகள் அதற்கு வேண்டுமானால் வேறு பெயர் வைத்து இருக்கலாம். ஆனால், அதன் உண்மையான பெயர் - இந்தியன் ஜீன்.


சென்னையின் மின்வெட்டுகள் பற்றிய கதைகள் ஏராளம். போன வாரம் இரவில் இதே போல மின்சாரம் திடீரென பிடுங்கப்பட்டது. நடுநிசி 2.00 மணி இருக்கலாம். பால்கனியில் கொஞ்ச நேரம். உலாத்தல் கொஞ்ச நேரம். சிந்தனைகள் கொஞ்ச நேரமென காலம் ஒடிக் கொண்டிருந்த போது, பக்கத்து அடுக்கக்த்தில் போன் அடித்தது.

நள்ளிரவு 2.30-3.00 மணிக்கு போன் அடித்தால் அது ஏறக்குறைய துர்செய்தியாக தான் இருக்க வேண்டும். ஒரு துர்செய்தி சொல்லப்படும் நேரத்தில், ஒரு பார்வையாளானாய் இருப்பதன் துரதிர்ஷ்டம் போல் வேறெதுவுமில்லை. எவ்விதமான உதவியும் செய்ய வாய்ப்பில்லாமல், வெறுமனே, இருளில் சில அதிர்ச்சிகரமான நினைவுகளையும், அழுகைகளையும் கேட்பது போன்ற ஒரு பயங்கரம் எதுவுமில்லை. யாருக்கு என்ன ஆயிற்று, யாரோடு யார் உறவு என்கிற எவ்விதமான அடிப்படை தகவல்கள் கூட இல்லாமல் போனாலும், நள்ளிரவு போன்கள் ஒரு விதமான நிச்சயமற்ற தன்மையினை தொடர்ச்சியாக நினைவுறுத்திக் கொண்டிருக்கின்றன.


இந்த வார ஏடாகூட கேள்வி

டிவிட்டரில் ஏற்பட்ட செய்திகள் தான் ஈரானின் தேர்தல் குறித்த கேள்விகளை மறுபரிசீலனை செய்ய வைத்தன என மேற்கத்திய ஊடகங்கள் தொடர்ச்சியாக சொல்லி வருகின்றன. ஏகப்பட்ட புள்ளிவிவரங்கள், மேப்புகள், கிராப்கள் வேறு. அமெரிக்காவின் காலனியாதிக்க முயற்சிகளில் முறியடிக்கப்படாத தேசங்களில் ஈரானும் ஒன்று. இப்போது கேள்வி, நவீன சமூக இணைய ஊடகங்கள் ஒரு நாட்டுக்கு எதிரான அரசியலை பரப்ப உபயோகப்படுத்தப்படுகிறதா? சி.ஜ.ஏவின் தொடர்ச்சியான மாற்று முயற்சிகளில் இப்போது டிவிட்டரும், பேஸ்புக்கும் சேர்ந்திருக்கிறதா? (காரணம்: பாரக்ஒபாமா என்கிற டிவீட்டருக்கான தொடர்பாளர்களை பாருங்கள். ஒபாவின் வெற்றிக்கு இணைய ஊடகங்கள் எவ்விதமான முன்னேற்பாடினை கொடுத்தன என்பது வரலாறு)

June 13, 2009

சனிமூலை - 008

நடுவில் ஆறு வாரங்களாக காணவில்லை. எழுதவில்லையே என்று நிறைய பேர் கேள்வி கேட்டார்கள். யாரும் மடல் அனுப்பவில்லை. பிஸியாக இருந்தேன், இல்லை மூடு இல்லை என்றெல்லாம் எழுதலாம். ஆனால் உண்மையில், நானெடுத்து எழுதுவதற்கு தோதான செய்திகள் எதுவும் அமையவில்லை என்பது தான் உண்மை.


பங்குச்சந்தை எகிறுகிறது. என்.டி.டி.வி ப்ராபிட், சி.என்.பி.சி டிவி 18 எல்லாம், கிராப்கள் காண்பிக்கிறார்கள். ஒரு பெரிய புள்ளி விவர புயலே தாக்கிக் கொண்டிருக்கிறது. டைம்ஸ் ஆப் இந்தியாவில் அங்கலேஷ் அய்யர், மத்திய வங்கியின் வெளிநாட்டு முதலீடு டேட்டாவினை வைத்துக் கொண்டு வாரத்துக்கு ஒரு பில்லியன் டாலர்கள் இந்தியாவுக்கு வருகிறது என்று கீபோர்ட்டிலேயே குதிக்கிறார். தினமும் எதாவது ஒரு அமைச்சர் புதிய திட்டங்கள், மானியங்கள், சலுகைகள் பட்ஜெட்டில் வரும் என்று டீசர் கொடுக்கிறார்கள்.

காங்கிரஸ் பெருபான்மை பலத்தோடு வென்றாலும், வென்றது. அவரவர்கள் கொடுக்கும் பில்ட்-அப்புகளுக்கு அளவேயில்லாமல் போய்விட்டது. மன்மோகன் சிங் ஆட்சியமைப்பார் என்று சொன்ன விடனேயே 2000 புள்ளிகள் ஏறி மே.18 அன்று பங்குச்சந்தைக்கு விடுமுறை. டாட்.காம் காலத்தில் ஆலன் கீரின்ஸ்பேன், இதற்கு ஒரு அழகான வார்த்தை சொல்லியிருப்பார்.Irrational exuberance.இந்தியாவில் அதுதான் நடக்கிறது இப்போது.

அடிப்படை விஷயங்களில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாத போது, இம்மாதிரியான ஜீபும்பா வேலைகள் எந்தளவிற்கு சாத்தியம் என்று யாரும் யோசித்தாற்போல தெரியவில்லை. பணவீக்கம் குறைந்திருக்கிறது, சுழிக்கு அருகாமையில் வந்து விட்டோம் என்று நாளிதழ்கள் சொல்கின்றன. அப்படியென்றால், ஏறின பொருட்களின் விலை இறங்கியிருக்க வேண்டுமே? ஏன் இறங்கவில்லை? வேலை வாய்ப்புகள் அதிகரித்து இருக்க வேண்டுமே? அது நடக்கவில்லையே? ஏன் ? உண்மை நிலவரம் என்னவென்றால், எல்லா முன்னேறி வரும் நாடுகளுக்கும் இப்போது பணம் வெள்ளமாய் பாய்கிறது. இந்த பணம், அமெரிக்கா அச்சடித்த பணம். எவ்விதமான பின்விளைவுகளின் பாதிப்புகளையும் பற்றி கவலைப்படாமல், தாராளா தொண்டியாய், அமெரிக்கா டாலரை அச்சடித்து கொண்டு, ஜி.எம்மையும், செத்துப் போன வங்கிகளையும் வாங்கிக் கொண்டிருக்கிறது. பொருளாதார பாஷையில் இதற்கு “quantitative easing" என்று பெயர். இதன் விளைவு 2012க்கு பின்னால் தெரியும். இப்போது அதன் பாதகங்கள் புரியாது.

இந்த மாதிரி அச்சடித்து புழக்கத்துக்கு விடும்போது, முதலில் எல்லாம் செளஜன்யமாக தான் இருக்கும். அதிக பணப்புழக்கத்தினால், மீண்டும் பணவீக்கம் ஏற தொடங்கும். ஏனெனில், இது கடினமாய் உற்பத்தியினை பெருக்குவதால் உள் வரும் பணமல்ல. இது Easy Money. பவர்பாயிண்ட், எக்செஸ் தாள்களில் போடப்பட்ட ப்ரொஜக்‌ஷன்களை அடிப்படையாகக் கொண்டு உள் வரும் பணம். அதனால் தான். ஐ.எம்.எப். 400 டன் தங்கத்தினை சர்வதேச சந்தையில் இறக்கும் என்று தெரிந்தாலும், தங்கத்தின் விலை ஏறிக் கொண்டிருக்கிறது. கடந்த 45 நாட்களில் $1000/oz தொட்டு தொட்டு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறது.

நிஜம் என்னவென்றால், மந்த நிலையின் பாதிப்பு இனிமேல் தான் அதிகமாகும். வளர்ந்த நாடுகளின் உற்பத்தி குறையும். மக்கள் வேலையில்லாமல் திண்டாடுவார்கள். இப்போது ஒடிக் கொண்டிருப்பது சந்தை மொழியில் Bear market rally.இதனை இதே நிலையில் தாக்கு பிடிப்பது கடினம். உங்களைச் சுற்றி பார்த்தாலே, டிவி சேனல்கள் நம் காதில் எவ்வளவு பெரிய மாலையினை போட்டு நமக்கு மங்களம் பாட முயற்சிக்கிறார்கள் என்று தெரியும். இதில் தரகர்களுக்கு தான் லாபம். இதன் மூலம், ஒட்டு மொத்தமாக, நாம் எல்லாரும் மண்ணுக்குள் போகப் போகிறோம் என்கிற பெஸிமிஸ்ட் பார்வையல்ல.

நம் பயங்கள் குறைந்திருக்கின்றன. நிறுவனங்கள் இனிமேல் தங்களுடைய சேவை தேவைகள்/உற்பத்தி கீழே போகாது என்று நம்புகின்றனர்.வலிமையான அரசு. பொங்கும் பங்குச்சந்தை. பரவலான உள்ளூர் சந்தை என்று பல காரணிகள் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கின்றன.

ஜிம் ரோஜர்ஸ், சொரோஸ் போன்ற விற்பனர்களின் பார்வையில், இந்தியாவும் சீனாவும் தான் இந்த மந்த நிலையிலிருந்து வெளிவரும் முதலிரு நாடுகளாக இருக்கும் என்று சொல்கிறார்கள். ப்ரிக் நாடுகளில் இந்தியாவும், பிரேசிலும் தான் முதலிடத்தினை பிடிக்க ஒடிக் கொண்டிருக்கின்றன.

ஆக இந்த நம்பிக்கை தான் வாழ்க்கை. இப்போதைக்கு உங்களின் பர்ஸினை கெட்டியாக பிடித்திருங்கள்.


தொழில் நிமித்தமாக 2-3 வாரங்களுக்கு முன்பு, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான தயாரிப்பாளாரான “ஆஸ்கார்” ரவிச்சந்திரனை சந்தித்தேன். மனிதர் மிக மிக சாதாரணமாக இருக்கிறார். டிவி சீரியல் நடிகர்களே ஹோண்டா சிட்டியும், ஹுண்டாய் ஆக்செண்ட்டுமாய் செட்டுக்கு வருகையில், வெறுமனே ஒரு i10 வைத்திருக்கிறார். ஒரு லீ டீ சர்ட், சாதாரண ஜீன்ஸ் என உள்ளே வந்தார்.

ஆழ்வார்பேட்டை அனுமார் கோயில் காலையில் போகவில்லை, அதனால் பரிகாரமாக 500 சுற்றுகள் சுற்றிவிட்டு வந்தேன், அதான் லேட்டு என்று தன்னிலை விளக்கம். மனிதருக்கு அசாத்திய கடவுள் நம்பிக்கை. கார் வைத்திருப்பதே திருப்பதி போவதற்கு தான் என்கிற தொனியிலான விளக்கத்தினை இப்போது தான் கேட்கிறேன். ஆஸ்கார் பிலிம்ஸ் ஒரு தனி நபர் கார்ப்பரேஷன். ரவிச்சந்திரனோடு அவர் சகோதரர்கள் எல்லாரும் பங்குதாரர்களே. 85% படங்கள் வெற்றிப் படங்கள்.

ரவிச்சந்திரன் எடுப்பது தான் இறுதி முடிவு. பல நடிகர்கள், இயக்குநர்கள் பற்றியெல்லாம் பேசி கொண்டிருந்தோம். ரவிச்சந்திரனின் முதல் சினிமா நுழைவு வேலூரில் “வானம்பாடி” படத்தினை 37வது தடவையாக எடுத்து திரையரங்கத்தில் போட்டது. அவர் போட்ட ஒரு வாரம் செம கல்லா. அங்கிருந்து ஆரம்பித்து, இன்றைக்கு ஜாக்கி சானை வைத்து ஒரு படமெடுக்கிறார் - 6 மொழிகளில் வர இருக்கிறது. இது தாண்டி, முருகதாஸ் நன்றிக் கடனுக்காக “ரமணா”வினை ஹிந்தியில் இவருக்காக இயக்குகிறார். இன்னமும் இரண்டு படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன. மிக அபூர்வமாக இவ்வளவு பணமிருந்தும் [தசாவதாரம் சம்பாதித்தது 200 கோடிகள்] மிக மிக down-to-earth ஆக இருக்கும் ஒரு நபரினை இப்போது தான் பார்க்கிறேன். வழக்கமாக ரஜினிக்கு தான் இம்மாதிரியான வர்ணணைகள் பொருந்தும்.

மிக எளிமையாக இருக்கும் அவரின் வியாபார யுக்திகள், நேற்றைய சாண்டோ சின்னப்பா தேவரினை நினைவுப் படுத்துகின்றன. ஒரு தனி நபர் என்கிற முறையில், ரவிச்சந்திரன் மிக நல்லவர். ஆனால் நிறுவனம் என்கிற வகையில் ஆஸ்கார் ஒரு பெரிய பெயிலியர்.


இந்த வார செய்கைகள்

படித்தது: பா.ராவின் “பிரபாகரன்: வாழ்வும் மரணமும்”
பிடித்தது: வோடாபோன் விளம்பரத்தில் வரும் சூசூக்கள்(Zoozoo)
கேட்டது: “என்னடா பாண்டி, இன்னா பண்ண போறே” இளையராஜாவின் ரஸ்டிக் குரலில் “வால்மீகி” பாடல்
பார்த்தது: திருவல்லிக்கேணி ரத்னா கபேயில் ”கடவுள் பாதி.மிருகம் பாதி” ஜெகன்
பங்கேற்றது: கிழக்கு மற்றும் Fundsindia.com இணைந்து நடத்திய "பேரங்கள் மற்றும் ரிவார்டு பாயிண்டுகள்” கலந்துரையாடல்
வாங்கியது: ரிச்சர்ட் தேலரின் “Nudge: Improving Decisions about Health,Wealth and Happiness
முணுமுணுப்பது: ”இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை” - டி.ஆர். மகாலிங்கம்
வெறுப்பது: இன்னமும் anyindian.com-இல் “விதுர நீதி” புத்தகம் இல்லாமலிருப்பது
கொலை வெறியோடு இருப்பது: சென்னையில் ஓடும் ஆட்டோக்கள்

April 17, 2009

சனிமூலை - 007

என்னுடைய வீட்டில், என்னுடைய நெருங்கிய வட்டாரங்களில் நான் தான் தங்க வழிகாட்டி. தங்குவதற்கான வழிகாட்டி அல்ல. தங்கத்திற்கான.

தங்கம். இந்திய பெண்களின் இன்றியமையாத இன்னொரு விஷயம். கல்லூரி படிக்கும் போது கலந்து கொண்ட ஒரு தெலுகு கல்யாணத்தில் உலாத்திய பெண்களோடு, அந்த மண்டபத்தினை ஹை-ஜாக் பண்ணியிருந்தால், வடகிழக்கு மாநிலத்தில் ஏதேனும் ஒரு மாநிலத்தின் பாதி பட்ஜெட்டினை ஒப்பேத்தியிருக்கலாம். பெண்கள் மட்டுமல்லாமல், தாதாக்கள், அரசியல்வாதிகள், டூபாக்கூர் தொழிலதிபர்கள் போன்ற ஷோ பேர்வழிகளுக்கான முக்கியமான சமாச்சாரம்.

வழிகாட்டி என்றால், எப்போது தங்கம் ஏறும், எப்போது தங்கம் இறங்கும் என்று ஒரளவுக்கு சொல்லக்கூடிய திறமை கொஞ்சுண்டு ஒட்டிக் கொண்டிருக்கிறது. இதை திறமை என்று சொல்வதை விட, இது உலக சந்தைகளை தொடர்ச்சியாக பார்த்து கொண்டிருப்பதால் ஏற்படக்கூடிய அடிப்படை அறிவு. இனி தங்கம் ஏறுமா ? ஏறாதா?

இனி தங்கம் இறங்கும். ஜி-20 மாநாட்டில் உலக தலைவர்கள் ஐ.எம்.எப்பின் இருப்பிலிருந்து 400 டன் தங்கத்தினை விற்க சொல்லியிருக்கிறார்கள். காற்றில் கணக்குப் போடாதீர்கள். ஒரு டன் தங்கம் இன்றைய விலையில் ஜஸ்ட் ரூ.144 கோடி மட்டுமே. 400 டன் எவ்வளவு என்பதை கணக்குப் போட்டு ஈனோ குடிக்காதீர்கள். அது நமக்கு தேவையில்லை. இந்தியா ஒரு தங்க இறக்குமதி நாடு. நாம் தொடர்ச்சியாக தங்கத்தினை இறக்குமதி செய்து கொண்டே இருப்போம். ஆனால் பிப்ரவரி, மார்சில் ஒரே ஒரு கிராம் தங்கம் கூட இறக்குமதி செய்யவில்லை. மாறாக, விலை கூடியவுடன், புத்திசாலியான நம்மாட்கள், தங்கத்தினை விற்க ஆரம்பித்தார்கள். முட்டாள் ஐரோப்பிய நாடுகள், ஏறும் தங்கம் தான், நிதி சீர்குலைவு, பொருளாதார மந்தநிலைக்கு எதிரான மாற்று என்று நினைத்து வாங்க ஆரம்பித்தார்கள். இந்தியா மற்றும் மத்திய கிழக்கினை தவிர வேறு யாரும் ஆபரண தங்கத்தினை தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதில்லை. ஆக இந்தியா வாங்கவில்லையென்றால், உலகமெங்கும் தங்கம் காற்று வாங்கும்.

மேலும், இந்த எவரெஸ்ட் உயரத்திற்கு காரணம், மத்திய வங்கிகள் உலகெங்கிலும், நிதி சீர்குலைவு ஏற்பட்டவுடன், உஷார் பத்ரி ரைடாக, தங்கத்தினை வாங்கி முடக்கி விட்டார்கள். அதனால் வரத்து குறைந்தது. தேவை அதிகம், ஆனால் சப்ளே குறைவு என்றால் அது சிம்பள் பொருளாதார வீக்கத்தினை உண்டாக்கும். சவரன் 8000ரூபாய்க்கு போய் கொண்டிருந்தது கடந்த ஒன்றரையாண்டுகளில் உயர்ந்து 12-13,000க்கு எகிறியதற்கு இது தான் காரணம். இப்போதைய நிலையே கூட இன்னமும் உயர்நிலையில் தான் இருக்கிறது. கொஞ்ச காலம் போனால் வாங்கும் நிலைக்கு வரும்.

இப்போதைக்கு, தங்கம் வாங்க வேண்டுமென்ற எண்ணங்கள் இருந்தால், கொஞ்ச காலம் ஐபிஎல்லும், உலக டி-20 கிரிக்கெட்டும் பார்த்து முடித்துவிட்டு ஜி.ஆர்.டிக்கு வண்டியினை எடுங்கள்.






கண்கள் பனித்தன. இதயம் நெகிழ்ந்தது. இது அரசியல் வசனமில்லை. சமீபத்தில் ஒரு புத்தகம் படித்தவுடன் ஏற்பட்ட உணர்வுகள்.

2008-இன் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த ஒரு தோழி என்னிடத்தில் கொடுத்த புத்தகம் தான் இது. Sadako and the Thousand Paper Cranes by Eleanor Coerr சிறிய குழந்தைகளுக்கான புத்தகம். சடாகோ என்கிற ஒரு குட்டிப்பெண்ணின் உண்மைக்கதை. குட்டியாய் 80 பக்கங்கள். ஆனால் அது உண்டாக்கிய அதிர்வுகள் ஏராளம்.

சசாகி சடாகோ ஜப்பானில் 1943ல் பிறந்து 1955-இல் தன்னுடைய பன்னிரண்டு வயதில் ஹிரோஷிமாவில் போட்ட அணுகுண்டால் ஏற்பட்ட கதிர்வீச்சால் உயிர் இழந்த குழந்தை. வாழ்க்கையில் ஒட்டப்பந்தய வீராங்கனையாக வேண்டும் என்று நினைத்த பெண். அவளுடைய தோழி சிசுகோ. கதிர்வீச்சின் பாதிப்பால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, சிசுகோ அவளுக்கு ஒரு தங்க பேப்பரானாலான ஒரு கொக்கினை செய்து கொடுத்தாள். ஒரிகமி என்பது மிகப் பிரபலமான ஜப்பானிய கலாச்சார பொழுதுபோக்கு. பேப்பரில் பல உருவங்களை ஒரிகமியில் செய்ய முடியும். ஆயிரம் கொக்குகள் ஒரு நோயாளி செய்தால், வலி, வேதனை, வியாதி எல்லாம் பறந்துவிடும் என்பது ஒரு ஜப்பானிய ஐதீகம்.

வெகு சூட்டிகையாக, ஒடியாடிக் கொண்டிருந்த சடாகோ, சடாலென மருத்துவமனையில் படுத்தப் படுக்கையாக ஆனாள். ஆனாலும், நம்பிக்கை தளராமல், பேப்பரில் கொக்கு செய்வது எப்படி என்று கற்றுக் கொண்டு, தொடர்ச்சியாக கொக்கு செய்ய ஆரம்பித்தாள். அக்டோபர் 25, 1955இல் சடாகோ இறந்து போனாள். அவள் இறக்கும்போது அவள் செய்த மொத்த கொக்குகளின் எண்ணிக்கை 644. அவளின் வகுப்பிலிருந்த குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து மீதமிருக்கிற 356 கொக்குகளை செய்து அவளோடு புதைத்தார்கள். கணக்கு சரியாக போனது - ஆயிரம் கொக்குகள்.

அவள் இறந்த பிறகு அவளின் வகுப்பு நண்பர்கள் அவள் மருத்துவமனையில் இருந்தபோது நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள், அவளின் டைரி போன்றவற்றினை தொகுத்து ‘ககோஷி (Kakoshi)' என்ற பெயரில் வெளியிட்டார்கள். ஜப்பானில் இருக்கும் எல்லா குழந்தைகளும் சேர்ந்து நிதி திரட்டி, 1958-இல் அவளின் சிலையினை ஹிரோஷிமா அமைதி பூங்காவில் திறந்தார்கள். சடாகோவின் சிலையின் கீழ் இன்றும் ஆகஸ்ட் -6இல் எல்லோரும் பேப்பர் கொக்குகளை வைக்கிறார்கள். அது அமைதி தினமாக அனுசரிக்கப்படுகிறது.சடாகோவின் சிலையின் கீழே இந்த வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

This is our cry,
this is our prayer;
peace in the world.

போர் என்பது மிக மோசமான விஷயம். இந்தியாவில் கற்பிக்கப்படும் வரலாறு இன்னமும், “இவர் அவரை போரில் வீழ்த்தினார்” “அவர் இவரை போரில் வெற்றிக் கொண்டு, சாம்ராஜ்யத்தினை விரிவு செய்தார்” என்கிற அளவில் தான் கற்றுக் கொடுக்கப்படுகிறது. வெற்றி என்பது எது என்று அசோகனுக்கு ஒரு புத்த பிட்சு சொன்னது வெறுமனே ஸ்டேஜ் ட்ராமா போட தான் உதவியிருக்கிறது. வரலாற்றினை இன்னமும் நாம் சரியாக கற்றுக் கொள்ளவில்லை அல்லது கற்றுக் கொடுக்கத் தெரியவில்லை என்பது தான் இன்றைக்கும் மேலோங்கியிருக்கிறது. வெற்றி என்பது அடுத்தவரின் தோல்வியிலிருந்து வருவதல்ல. அது உள்ளிருந்து வருவது. தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்வது. தன்னை தொடர்ச்சியாக பரிசோதனைக்கு உட்படுத்தி, அதிலிருந்து பாடம் கற்பது. அனுபவங்களை உள்ளிழுப்பது. அடுத்தவரை கொல்வதல்ல.

தமிழகத்தில் இருக்கக்கூடிய பதிப்பகங்கள் யாராவது இதன் உரிமம் பெற்று தமிழில் வெளியிடலாம். குழந்தைகளுக்கு ஏற்றாற் போல நடை. பெரிய எழுத்து புத்தகம். பென்குவின்புட்னம் என்கிற நியுயார்கில் இருக்கும் ஒரு பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது.



RPG குழுமத்திலிருந்து Open என்கிற ஒரு ஆங்கில பத்திரிக்கை வரத் தொடங்கியிருக்கிறது. இந்தியா டுடே, அவுட்லுக், வீக் போன்றவைகளின் தளத்திலேயே இதுவும் இருக்கிறது. கீழே குறிப்பிடுள்ள மேற்கோள் ’ஒபன்’ பத்திரிக்கையின் முதல் இதழில் வந்த கட்டுரையில் வந்தது. இந்தியாவில் இணைய இணைப்பு அதிகமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் பேப்பரில் அச்சடித்து வரும் பத்திரிக்கைகளுக்கு விளம்பரங்கள் வாங்குவதில் சில பல ஆபத்துகள் இருக்கின்றன. இந்த நிலையில் RPG குழுமம் இப்பத்திரிக்கையினை தொடங்கியிருப்பது பாராட்டத்தகுந்த விஷயம்.

இதே மாதிரி முந்தாநாள் ’பாரிஸ்தா’வில் உட்கார்ந்து கொண்டு பொழுது போகாமல் முன்னால் உட்கார்ந்திருந்த பெண்ணினைப் பார்த்துக் கொண்டே (டார்க் புளு ஜீன்ஸுக்கு பிங் குர்தா, நன்றாக இருந்தாலும், ஏதோ ஒன்று குறைந்தது போல தோன்றியது) இந்தியா டுடே புரட்டினால், மிருணாள் சென் பற்றி ஒரு செய்தி வந்திருந்தது. ரித்விக் கட்டக், மிருணாள் சென் கடைசியாக சத்யஜித் ரே என்கிற வரிசையில் தான் நான் ஆரம்பகாலத்தில் படங்கள் பார்த்தேன்.

வங்காள திரை பிதாமகர்கள் வரிசையில் மிருணாள் சென்னுக்கு ஒரு தனியிடமிருக்கிறது. அடுத்த மாதம் நடக்க இருக்கும் கான்ஸ் திரை விழாவில் திரையிட சென்னின் 1970களின் கல்கத்தாவினை பிண்ணணியாகக் கொண்ட மூன்று படங்களை கேட்டிருந்தார்கள். இண்டர்வியு, கல்கத்தா 71 மற்றும் படாதிக். ஆனால் அந்த படங்களின் பிரிண்ட் படு மோசமாக இருந்ததால் கைவிடப்பட்டது. வெறுத்துப் போய் “நான் சாகும் போது, என் படங்களும் மறைந்து போகும்” என புலம்பி தள்ளியிருக்கிறார். இது ஒரு மகா மோசமான விஷயம்.

மே.வங்காளத்திலிருந்து வந்து பாலிவுட்டினை கலங்கடித்து கொண்டிருக்கும் பிபாசா பாசு, சுஷ்மிதா சென், ரீயா சென் போன்றவர்களில் ஆரம்பித்து பல்வேறு நபர்கள் வங்காள சினிமாவிற்கு கடமைப்பட்டுள்ளார்கள். இது தவிர, தேசிய பட வளர்ச்சி கார்ப்பரேஷனுக்கு இதை விட வேறு என்ன வேலை இருக்க முடியும்? அமிதாப் பச்சனின் மெழுகு சிலையினை ஹாங்காங்கில் வைப்பதற்கு காட்டும் அக்கறையில் அரை பங்காவது, நம்மிடையே இன்னமும் இருக்கும் திரைச்சிற்பிகளை காப்பதில் நமக்கில்லை. நல்ல வேளையாக, தமிழ்நாட்டினை திரையுலகம் கடந்த 40 ஆண்டுகளாக ஆண்டு வருவதால், ஜி.என்.செட்டி சாலையில் போட்டிருக்கும் மேம்பாலத்திற்கு, கலைவாணர் மேம்பாலம் என்று பெயர் வைத்திருக்கிறோம். இல்லையென்றால் என்.எஸ்.கே என்றால் பட்டணம் பொடி பெயரா என்று நாளைய சந்ததியினர்கள் கேட்பார்கள்.

இந்தியர்களான நமக்கு நம்முடைய பாரம்பரியத்தினை காப்பதில் இருக்கும் அலாதி அக்கறை சொல்லி மாளாது. இந்தியாவின் எல்லா மியுசியங்களும் காலியாக இருக்கும். பள்ளிக் குழந்தைகளின் செலவு குறைவான கல்விச்சுற்றுலா தலமாக தான் பிரபலப் படுத்தியிருக்கிறோமே தவிர அதன் முக்கியத்துவத்தினை உணர்த்தியதுப் போல தெரியவில்லை. வங்காள சினிமாவினை நேசிப்பவர்கள் யாராவது இருந்தால் புத்ததேவ் பட்டாச்சார்யா / மம்தா பானர்ஜி வகையறாக்களில் யாராவது ஒருவரிடம், தாகூர் மாதிரியான ஒரு ஆள் இன்னமும் உங்களூரில் உயிரோடு இருக்கிறான், அவனை சரியான பாதுகாத்து வையுங்கள் என்று பெங்காலியில் உரக்கச் சொல்லுங்கள்.

இந்த வார மேற்கோள்

நஸ்ரூத்தின் ஷா "ஒபன்” பத்திரிக்கையில் கலைப்படங்கள் எடுப்பதுப் பற்றி
“sign me up, borrow funds from NFDC claiming to make realistic cinema, use indoor shots to save money, producer and I split the remaining cash"

April 11, 2009

சனிமூலை - 006

வேளச்சேரி கான்கார்ட் மோட்டார்ஸில் டாடா நானோ பார்க்க கியு நிற்கிறது. நல்ல விஷயம்தான். இந்த மாதிரி ஒரு பொருளுக்கான கியுக்களை ஆப்பிளின் ஸ்டோர்களில் ஒவ்வொரு மேக் கருத்தரங்கு முடிந்தவுடன் அறிவிக்கப்படும் புது பொருளுக்காக பார்க்க முடியும். “ஹமாரா பஜாஜ்”-க்கு பிறகு, ஒட்டு மொத்த இந்தியாவும் ஒரு வாகனத்திற்காக முண்டியடிப்பது டாடா நேனோவாகதான் இருக்க முடியும்.

டாடா நேனோ வெறுமனே ஒரு வாகனமாக பார்க்க முடியாது. இதை ஒரு புது தலைமுறையாக பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது. 1991-இல் இந்தியா பொருளாதார சீரமைப்பினை ஆரம்பித்து 17 வருடங்கள் ஆன நிலையில், இது இரண்டாம் கட்ட சீரமைப்பின் ஆரம்பமாக தோன்றுகிறது.

1992-இல் நாம் உலக நிறுவனங்களை இந்தியாவுக்குள் அனுமதித்தோம். அன்னிய பொருட்களை இஷ்டத்திற்கு உபயோகப் படுத்தினோம்.2009-இல் இந்தியாவிலிருந்து உலகத்திற்கு பொருட்களை அனுப்ப ஆயத்தமாகிறோம். இந்திய சந்தைக்காக பொருட்கள் தயாராகின்றன. இது ஒரு முக்கியமான திருப்பம். இதை சீராக செய்ய நமக்கு இன்னமும் இரண்டு தசாம்சங்கள் ஆகலாம்.பரவாயில்லை.

எகனாமிக் டைமிஸில் சி.கே. பிரகலாத் “டாடா நேனோ” மாதிரியான பிற விஷயங்களின் மீதான ஒரு பார்வையினை வைக்கிறார். அவரின் Fortune at the Bottom of the Pyramid ஒரு முக்கியமான மாற்றுப் பார்வையினை முன் வைக்கிற புத்தகம். டாடா குழுமத்திற்கு அவர் ஆலோசகர். அவரின் ஆலோசனையின் பேரில் தான் ஜிஞ்சர் ஹோட்டல் வந்தது.

டாடா நேனோ, ஜிஞ்சர் ஹோட்டல்,அரவிந்தன் அரவிந்த் கண் மருத்துவமனை, இந்திய செல்பேசி துறை, இணைய சேவை போன்றவைகள் முக்கியமான திருப்புமுனைகள். மிகவும் குறைந்த விலையில், தரமான, மக்களின் வாங்குதல் சக்திக்கு உள்ளே அடங்கக்கூடிய பொருட்களையும், சேவைகளையும் சந்தைப்படுத்தினால், அதன் பிரதிபலன்கள் பல மடங்கு போகக்கூடியவை. இந்திய தொலைப்பேசி துறை மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. ரூ.16க்கு ஒருவரிடம் பேச தலைப்பட்ட நாம், இன்றைக்கு 10 பைசா அளவிற்கு பேசிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவின் செல்பேசி துறை உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறை. இவ்வளவு பொருளாதார மந்தங்கள் நிலவிய போதிலும், செல்பேசி துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவின் செல்பேசி வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறார்கள்.

வெறுமனே முதலாளித்துவம் (Capitalism) என்பது போய், இன்றைக்கு சமூக முதலாளித்துவம் (Social Capitalism) என்பது குறைவாக, ஆனால் தீர்க்கமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. தொழில் நடத்துவது வெறும் லாபத்திற்காக மட்டுமே என்கிற பழைய முதலாளித்துவ சிந்தனை கொஞ்சம் கொஞ்சமாக விலக தொடங்கியிருக்கிறது. சமூக தொழில்முனைவோர்கள் (Social Entrepreneurs) என்றழைத்துக் கொள்ள விரும்பும் ஒரு பகுதியினர், சமூகத்தின் பல பகுதிகளில் பரவ ஆரம்பித்து இருக்கிறார்கள்.

வழக்கமான தன்னார்வல நிறுவனங்கள் என்றழைக்கப்படும் நிறுவனங்களுக்கு பெரியதான தொலைநோக்கு பார்வைகள் கிடையாது. அவர்கள் இன்னமும் அன்பளிப்பினை வைத்துக் கொண்டு காலத்தினை ஒட்டுகிறார்கள், இது ஒரு குறைப்பார்வை. முதலாளித்துவத்தின் மிக அடிப்படையான விஷயம், லாபம், அந்த லாபம் எப்படி கிடைக்குமென்றால், தரமான பொருள்/சேவையினை, குறைவான விலையில் அளிப்பது. அந்த நோக்கத்தையும், தன்னார்வ நிறுவனத்தினை சமூக நலனையும் காக்டெயிலாக்கினால் வரும் கலவை தான் இன்றைக்கு மெதுவாக பரவியிருப்பது. இது ஒரு ஆரோக்கியமான விஷயம்.


சென்னை சாந்தோம் கடற்கரை. கடந்த மூன்று மாதங்களாக சன் டிவியில் ஞாயிறு மாலை போடப்படும் டப்பா படங்களை தவிர்ப்பதற்காகவே என்னுடைய தங்கை மகளை கூட்டிக் கொண்டு, அலையில் காலாற நடக்கிறேன். எல்லா வகையான மக்களும், காலை அலை நனைப்பதை விரும்புகிறார்கள் என்று தோன்றுகிறது. என் தங்கை மகளின் மிக முக்கியமான பொழுதுபோக்கை இப்போது ஞாயிறு மாலை, கடலலையில் தொப்பலாக நனைவது. நிற்பது, ஒடுவது, குதிப்பது, பேரலைகள் வரும்போது கைப்பற்றி தடுமாறுவது என உப்புத் தண்ணீர் உள்ளே போக விளையாடுகிறாள்.

சென்னை கடற்கரை ஒரு முக்கியமான ரிலீப் பாயிண்ட். புல்லாங்குழல் விற்பவர்கள் ஏர் டெல்லின் சிக்னேச்சர் ட்யூனை வாசிக்கிறார்கள்.என் காலத்தில் ஏதாவது சினிமா பாட்டு தான் புல்லாங்குழலில் ஹம் செய்யப்படும். ரங்கராட்டினம், குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடல், மாங்காய், சுண்டல், பஜ்ஜி, வறுத்த சோளம், பானிப்பூரி என சகலமும் ரூ.10-15க்குள் ஆகிறது. தண்ணீர் பாக்கெட் காலையில் ரூ.1 ஆகவும், மாலையில் ரூ.1.25 - 1.50 ஆகவும் இருக்கிறது.Discretionary Pricing. எல்லாவகையான மக்களுக்கும் கடலின் மீது ஒரு காதல் இருக்கிறது. குழந்தைகள், பெண்கள், ஆண்கள், வயதானவர்கள் என எல்லாரும் அலையில் கால் நனைக்கிறார்கள். மிரள்கிறார்கள். கூட்டமாக சிரிக்கிறார்கள். கொஞ்சம் தைரியமான பெண்கள், சுடிதார் நனைய உட்காருகிறார்கள். ஆண்கள், காலாடை சகிதம் ”சீன்” காட்டவாவது கொஞ்சமாய் கடலுக்குள் போகிறார்கள். ஒரு மணிக்கு ஒரு தடவை குதிரையில் வரும் போலீஸ்காரர்கள், மக்களை உள்ளே செல்லாமல் இருக்குமாறு எச்சரிக்கிறார்கள்.

சின்ன குழந்தைகள் வால்ஸ் ஐஸ்கீரிம் குச்சி ஐஸ் சாப்பிட்டு, மணலில் வீடு கட்டி, அந்த குச்சியினை கொடி கம்பம் போல் மேலே செருகுகிறார்கள். காதலர்கள் துப்பட்டா சகிதம், முத்தமிட்டுக் கொள்கிறார்கள். மணலில் நிறைய பாஸ்ட் புட் சென்டர்கள். வஞ்சிரம் மீன் (பெரியது) ரூ.60க்கு காரசாரமாய் கிடைக்கிறது. காரினுள் பியரிடித்து விட்டு, மேல்தட்டு மக்கள் சிக்கன் நூடுல்ஸும், மீனுமாய் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பொருளீல்லாத, பெண் கிடைக்காத கும்பல்கள், வட்டமாக உட்கார்ந்து கொண்டு “ங்கோத்தா, போன வாரம் என் பிகரை ஒருத்தன் ஒரம் கட்டிட்டான். அவனை எப்படியாவது கழட்டிருன்னும்டா” என பேசிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது வட்டமாய் உட்கார்ந்து கொண்டு அவர்களுக்கு மட்டும் கேட்குமளவிற்கு கெட்ட வார்த்தை கானா பாடுகிறார்கள். இளந்தாய்மார்கள் குழந்தையினை பார்ப்பதும், கணவன் எங்கே பார்க்கிறான் என்று கண்காணிப்பதுமாக இருக்கிறார்கள். பெரியவர்கள் வாக்கிங் போகிறார்கள். அவர்களின் சிரிப்பிலும், அலைகள் கால் நனைக்கும்போது விரியும் குழந்தைகளின் கன்னக்குழிகளிலும் தான் நிஜமான சந்தோஷத்தினை பார்க்க முடிகிறது.

சென்னை மாதிரியான தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருக்கும் ஒரு மெட்ரோபொலிஸில் குழந்தைகளுக்கு விளையாட சரியான இடங்கள், வாய்ப்புகள் இல்லை. சதா போகோவும், ஜெட்டெக்சும் பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகள், ப்ளே ஸ்டேஷனில் வீடியோ கேம் விளையாடும் குழந்தைகள், அப்பாவின் மடிக்கணினியில் விளையாடும் குழந்தைகள் என எல்லா வகையுமான குழந்தைகளை கடந்த ஆறு ஆண்டுகளாக மிக நெருக்கமாக பார்த்து வருகிறேன். இன்றைய குழந்தைகளுக்கு physical விளையாட்டுகள் என்பதே எதுவுமில்லை.

நான் எல்லா இடங்களிலும் விளையாடி இருக்கிறேன். இன்றைக்கும் பீச் கிரிக்கெட் என்றழைக்கப்படும் கடற்கரை மணலில் டென்னிஸ் பாலில் ஆடும் கிரிக்கெட்டினை கர்ம சிரத்தையாக ஞாயிறு காலை ஆடி வருகிறேன். நான் நடு ரோட்டில், மொட்டை மாடியில், சுடுகாட்டில், மூத்திர சந்தில், கால்வாய் ஒரங்களில், கொண்டித்தோப்பு போலீஸ் லைன் பிள்ளையார் கோயில் முன்னாடி இருக்கும் மைதானமென்று சொல்லமுடியாத ஒரு மைதானத்தில் என எல்லா இடங்களிலும் விளையாடி இருக்கிறேன். விளையாட்டு பதின்ம பருவத்தில் மிக முக்கியம், படிப்பை விட.

நகரமயமாக்குதலின் மிக முக்கியமான இழப்பு குழந்தைகளின் விளையாட்டு என்று தோன்றுகிறது. இன்றைக்கு இருக்கக்கூடிய ஒற்றை குழந்தை மனநிலையில், பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு போகக் கூடிய சூழலில், ஒரு குழந்தையின் இயற்கையான விளையாட்டுத்தனம் மழுங்கடிக்கப்படுகிறது. என்னுடைய சட்டையிலெலெலாம் இங்க் கறை இல்லாமல் ஒரு நாளும் வீட்டிற்கு வந்ததில்லை. இன்றைய குழந்தைகள் பென்சில், ரப்பர் தொலைத்தாலோ, வெளியே போய்விட்டு வீட்டுக்கு வரும் வழியில் டூவீலரில் ஒற்றை செருப்பினை தொலைத்தாலோ அந்த குழந்தை வாங்கும் வசவுகள் சொல்லி மாளாது. நாம் எல்லோரும், நம் அடுத்த சந்ததியினருக்கு சேர்த்து வைக்கிறோம், சேர்த்து வைக்கிறோம் என்று பணத்தினை குறியாக கொண்டு ஒடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த மாதிரியான சின்னச் சின்ன சந்தோஷங்கள் தான் இன்னமும் வாழ்க்கையினை அர்த்தமுள்ளதாகவும், சுவாரசியமாகவும் மாற்றுவதாக படுகிறது.

ஐம்பது வயதில் நீங்கள் சாதித்து எல்லாம் பெரியதாக தோனாது. மைலாப்பூர் கற்பாங்காம்பாள் மெஸ்ஸின் கதம்ப சாதத்திற்கும், கடற்கரையின் உப்பு தோயந்த மக்காசோளத்திற்காகவும் உடலும், மனதும் ஏங்க ஆரம்பிக்கும். காசோ, பணமோ, அதிகாரமோ, பெண்ணோ,பொரு்ளோ அன்றைக்கு பெரியதாக தோன்றாது என்று தோன்றுகிறது. வாழ்வின் சுவை என்பது பெரிய வெற்றிகளில் இல்லை. சின்னச் சின்ன சந்தோஷங்களிலும், குட்டி தோல்விகளிலும் தான் இருக்கிறது. Simple Living is Better Living.


ராஜா ஜேசுதாஸ் செல்லையா. வயது 87. ஏப்ரல் 7ஆம் தேதி மறைந்து போனார்.

யாரிவர்?

சினிமா நடிகரோ, அரசியல்வாதியோ, சமூக சேவகரோ, உள்ளூர் தாதாவோ, தொழிலதிபரோ கிடையாது. அவர் ஒரு பொருளாதார நிபுணர். 2007-இல் பத்ம விபுஷன் பெற்றவர். நரசிம்மராவ் தலைமையிலான ஆட்சியில், இன்றைய பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சராக இருந்து 1991-இல் இந்தியாவின் பொருளாதார அமைப்பினை உலகமையமாக்க செய்ய அமைக்கப்பட்டிருந்த குழுவில் ராஜா செல்லையா ஒரு முக்கியமானவர்.

ராஜா செல்லையா தான் இன்றைக்கு ஒரளவிற்கு சுலபமாக இருக்கக்கூடிய இந்திய வரிச்சட்டங்களின் பிதாமகர். லைசன்ஸ் ராஜ்ஜியத்தில் இஷ்டப்படிக்கு எழுதப்பட்டிருந்த வரிச்சட்டங்களை, தனி நபர் குழு அமைத்து, அதனை மொத்தமும் படித்து, மாறி வரக்கூடிய உலகச் சூழலுக்கு ஏற்றாற் போல, மாற்றிய பெருமை ராஜா செல்லையாவைதான் சேரும். செல்லையாவின் அறிக்கை தான் மன்மோகன் சிங் பல்வேறு வரி ரீதியிலான சீர்திருத்தங்களை கொண்டு வர உதவியது.

கஸ்டம்ஸ் வரி 200% இருந்ததை குறைத்தது; 40% மட்டுமே தனியார் மற்றும் நிறுவனங்களின் உச்சக்கட்ட வரியாக இருக்கும் என்று நிர்ணயித்தது; 200-300% சில பொருட்களுக்கு இறக்குமதி வரி இருந்ததை சீரமைத்தது; மாட் வேட் என்றழைக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரியின் அடிப்படையினை நிர்மாணித்தது; சேவை வரி என்ற ஒன்றினை கொண்டு வந்தது (சேவை வரி தான் இன்றைக்கு இந்திய அரசுக்கு மிக அதிகப்பட்ச வருவாயினை தரக்கூடிய மறைமுக வரிவிதிப்பு) என அவரின் பங்களிப்பினால் தான் இன்றைக்கு 2009-இல் பா.ஜ.க குறைந்தபட்சம் 3 இலட்சம் வரைக்கும் வருவாய்க்கு வரி கிடையாது என தேர்தல் மேனிபெஸ்டோ கொடுப்பது வரை வந்திருக்கிறது.

1978-இல் எல்.கே. ஜா தலைமையில் அமைக்கப்பட்ட மறைமுக வரி சீரமைப்பு கமிட்டியில் உறுப்பினராக இருந்தவர் ராஜா செல்லையா. பின்பு திட்ட கமிஷனில் மன்மோகன் சிங் 1990 ஜனவரி வரை துணை சேர்மனாக இருந்தபோது, அக்கமிஷனின் உறுப்பினராக இருந்தவர். அவரின் புத்தகங்கள், முக்கியமாக Towards Sustainable Growth - Essays in Fiscal and Financial Sector Reforms in India, Oxford University Press (1996) இந்திய உலகமயமாக்கலின் மிக முக்கியமான ஆரம்பகால ஆவணம். அவரின் Aspects of the Black Economy in India, National Institute of Public Finance and Policy, New Delhi, 1985 புத்தகம் தான் கிட்டத்திட்ட 15 வருடங்களுக்கு பிறகு அப்போதைய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது, கருப்பு பணத்தினை எவ்வித கேள்வியும் கேட்கப்படாமல் டிக்ளேர் செய்ய அனுமதிக்கப்படும் என்கிற திட்டத்திற்கு வழிகாட்டி.

1976-இல் டெல்லியில் அவர் தேசிய பொது நிதி மற்றும் திட்ட அமைப்பினை (National Institute of Public Finance and Policy) உருவாக்கினார். 1995-இல் சென்னை பொருளாதார பள்ளியினை (Madras School of Economics) உருவாக்கினார். இந்திய வரி விதிப்பின் அடுத்த கட்டம் தேசிய பொருட்கள் மற்றும் சேவை வரி (Goods and Services Tax), அடுத்த நிதியாண்டிலிருந்து அமுலுக்கு வரும். அதை பார்க்க ராஜா செல்லையா இருக்க மாட்டார்.

நான் 1992-95 பொருளாதாரம் படித்த போது என்னுடைய இந்திய பொருளாதார பாடத்திற்கு சிபாரிசு செய்யப்பட்டது ராஜா செல்லையாவின் புத்தகங்கள்தான். ஒழுங்காக மார்க் எடுத்து கட்-ஆப்பில் தேறியிருந்தால், டெல்லி பொருளாதார பள்ளியில் படித்து, மத்திய வங்கியிலோ அல்லது ஐக்கிய நாடுகள் அமைப்பிலோ பணியாற்றிக் கொண்டிருப்பேன். ஆனால், அப்போது அவர் சென்னை பொருளாதார பள்ளியினை உருவாக்கியது எனக்கு தெரியாமல் போனது. இங்கேயாவது படித்திருக்கலாம். கிட்டத்திட்ட கல்லூரி படிப்பு முடித்து 14 வருடங்கள் கழித்து மீண்டும் நிதி/பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் எதையாவது படிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ராஜா செல்லையாவின் இறப்பு அதனை உறுதிப்படுத்திவிட்டது. இனி படிக்கலாம் என்று இருக்கிறேன்.

இந்த வார கார்ட்டூன்


நன்றி: டைம்ஸ் ஆன்லைன்