சனிதோறும் ஒரு பத்தி

Showing posts with label தங்கம். Show all posts
Showing posts with label தங்கம். Show all posts

June 13, 2009

சனிமூலை - 008

நடுவில் ஆறு வாரங்களாக காணவில்லை. எழுதவில்லையே என்று நிறைய பேர் கேள்வி கேட்டார்கள். யாரும் மடல் அனுப்பவில்லை. பிஸியாக இருந்தேன், இல்லை மூடு இல்லை என்றெல்லாம் எழுதலாம். ஆனால் உண்மையில், நானெடுத்து எழுதுவதற்கு தோதான செய்திகள் எதுவும் அமையவில்லை என்பது தான் உண்மை.


பங்குச்சந்தை எகிறுகிறது. என்.டி.டி.வி ப்ராபிட், சி.என்.பி.சி டிவி 18 எல்லாம், கிராப்கள் காண்பிக்கிறார்கள். ஒரு பெரிய புள்ளி விவர புயலே தாக்கிக் கொண்டிருக்கிறது. டைம்ஸ் ஆப் இந்தியாவில் அங்கலேஷ் அய்யர், மத்திய வங்கியின் வெளிநாட்டு முதலீடு டேட்டாவினை வைத்துக் கொண்டு வாரத்துக்கு ஒரு பில்லியன் டாலர்கள் இந்தியாவுக்கு வருகிறது என்று கீபோர்ட்டிலேயே குதிக்கிறார். தினமும் எதாவது ஒரு அமைச்சர் புதிய திட்டங்கள், மானியங்கள், சலுகைகள் பட்ஜெட்டில் வரும் என்று டீசர் கொடுக்கிறார்கள்.

காங்கிரஸ் பெருபான்மை பலத்தோடு வென்றாலும், வென்றது. அவரவர்கள் கொடுக்கும் பில்ட்-அப்புகளுக்கு அளவேயில்லாமல் போய்விட்டது. மன்மோகன் சிங் ஆட்சியமைப்பார் என்று சொன்ன விடனேயே 2000 புள்ளிகள் ஏறி மே.18 அன்று பங்குச்சந்தைக்கு விடுமுறை. டாட்.காம் காலத்தில் ஆலன் கீரின்ஸ்பேன், இதற்கு ஒரு அழகான வார்த்தை சொல்லியிருப்பார்.Irrational exuberance.இந்தியாவில் அதுதான் நடக்கிறது இப்போது.

அடிப்படை விஷயங்களில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாத போது, இம்மாதிரியான ஜீபும்பா வேலைகள் எந்தளவிற்கு சாத்தியம் என்று யாரும் யோசித்தாற்போல தெரியவில்லை. பணவீக்கம் குறைந்திருக்கிறது, சுழிக்கு அருகாமையில் வந்து விட்டோம் என்று நாளிதழ்கள் சொல்கின்றன. அப்படியென்றால், ஏறின பொருட்களின் விலை இறங்கியிருக்க வேண்டுமே? ஏன் இறங்கவில்லை? வேலை வாய்ப்புகள் அதிகரித்து இருக்க வேண்டுமே? அது நடக்கவில்லையே? ஏன் ? உண்மை நிலவரம் என்னவென்றால், எல்லா முன்னேறி வரும் நாடுகளுக்கும் இப்போது பணம் வெள்ளமாய் பாய்கிறது. இந்த பணம், அமெரிக்கா அச்சடித்த பணம். எவ்விதமான பின்விளைவுகளின் பாதிப்புகளையும் பற்றி கவலைப்படாமல், தாராளா தொண்டியாய், அமெரிக்கா டாலரை அச்சடித்து கொண்டு, ஜி.எம்மையும், செத்துப் போன வங்கிகளையும் வாங்கிக் கொண்டிருக்கிறது. பொருளாதார பாஷையில் இதற்கு “quantitative easing" என்று பெயர். இதன் விளைவு 2012க்கு பின்னால் தெரியும். இப்போது அதன் பாதகங்கள் புரியாது.

இந்த மாதிரி அச்சடித்து புழக்கத்துக்கு விடும்போது, முதலில் எல்லாம் செளஜன்யமாக தான் இருக்கும். அதிக பணப்புழக்கத்தினால், மீண்டும் பணவீக்கம் ஏற தொடங்கும். ஏனெனில், இது கடினமாய் உற்பத்தியினை பெருக்குவதால் உள் வரும் பணமல்ல. இது Easy Money. பவர்பாயிண்ட், எக்செஸ் தாள்களில் போடப்பட்ட ப்ரொஜக்‌ஷன்களை அடிப்படையாகக் கொண்டு உள் வரும் பணம். அதனால் தான். ஐ.எம்.எப். 400 டன் தங்கத்தினை சர்வதேச சந்தையில் இறக்கும் என்று தெரிந்தாலும், தங்கத்தின் விலை ஏறிக் கொண்டிருக்கிறது. கடந்த 45 நாட்களில் $1000/oz தொட்டு தொட்டு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறது.

நிஜம் என்னவென்றால், மந்த நிலையின் பாதிப்பு இனிமேல் தான் அதிகமாகும். வளர்ந்த நாடுகளின் உற்பத்தி குறையும். மக்கள் வேலையில்லாமல் திண்டாடுவார்கள். இப்போது ஒடிக் கொண்டிருப்பது சந்தை மொழியில் Bear market rally.இதனை இதே நிலையில் தாக்கு பிடிப்பது கடினம். உங்களைச் சுற்றி பார்த்தாலே, டிவி சேனல்கள் நம் காதில் எவ்வளவு பெரிய மாலையினை போட்டு நமக்கு மங்களம் பாட முயற்சிக்கிறார்கள் என்று தெரியும். இதில் தரகர்களுக்கு தான் லாபம். இதன் மூலம், ஒட்டு மொத்தமாக, நாம் எல்லாரும் மண்ணுக்குள் போகப் போகிறோம் என்கிற பெஸிமிஸ்ட் பார்வையல்ல.

நம் பயங்கள் குறைந்திருக்கின்றன. நிறுவனங்கள் இனிமேல் தங்களுடைய சேவை தேவைகள்/உற்பத்தி கீழே போகாது என்று நம்புகின்றனர்.வலிமையான அரசு. பொங்கும் பங்குச்சந்தை. பரவலான உள்ளூர் சந்தை என்று பல காரணிகள் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கின்றன.

ஜிம் ரோஜர்ஸ், சொரோஸ் போன்ற விற்பனர்களின் பார்வையில், இந்தியாவும் சீனாவும் தான் இந்த மந்த நிலையிலிருந்து வெளிவரும் முதலிரு நாடுகளாக இருக்கும் என்று சொல்கிறார்கள். ப்ரிக் நாடுகளில் இந்தியாவும், பிரேசிலும் தான் முதலிடத்தினை பிடிக்க ஒடிக் கொண்டிருக்கின்றன.

ஆக இந்த நம்பிக்கை தான் வாழ்க்கை. இப்போதைக்கு உங்களின் பர்ஸினை கெட்டியாக பிடித்திருங்கள்.


தொழில் நிமித்தமாக 2-3 வாரங்களுக்கு முன்பு, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான தயாரிப்பாளாரான “ஆஸ்கார்” ரவிச்சந்திரனை சந்தித்தேன். மனிதர் மிக மிக சாதாரணமாக இருக்கிறார். டிவி சீரியல் நடிகர்களே ஹோண்டா சிட்டியும், ஹுண்டாய் ஆக்செண்ட்டுமாய் செட்டுக்கு வருகையில், வெறுமனே ஒரு i10 வைத்திருக்கிறார். ஒரு லீ டீ சர்ட், சாதாரண ஜீன்ஸ் என உள்ளே வந்தார்.

ஆழ்வார்பேட்டை அனுமார் கோயில் காலையில் போகவில்லை, அதனால் பரிகாரமாக 500 சுற்றுகள் சுற்றிவிட்டு வந்தேன், அதான் லேட்டு என்று தன்னிலை விளக்கம். மனிதருக்கு அசாத்திய கடவுள் நம்பிக்கை. கார் வைத்திருப்பதே திருப்பதி போவதற்கு தான் என்கிற தொனியிலான விளக்கத்தினை இப்போது தான் கேட்கிறேன். ஆஸ்கார் பிலிம்ஸ் ஒரு தனி நபர் கார்ப்பரேஷன். ரவிச்சந்திரனோடு அவர் சகோதரர்கள் எல்லாரும் பங்குதாரர்களே. 85% படங்கள் வெற்றிப் படங்கள்.

ரவிச்சந்திரன் எடுப்பது தான் இறுதி முடிவு. பல நடிகர்கள், இயக்குநர்கள் பற்றியெல்லாம் பேசி கொண்டிருந்தோம். ரவிச்சந்திரனின் முதல் சினிமா நுழைவு வேலூரில் “வானம்பாடி” படத்தினை 37வது தடவையாக எடுத்து திரையரங்கத்தில் போட்டது. அவர் போட்ட ஒரு வாரம் செம கல்லா. அங்கிருந்து ஆரம்பித்து, இன்றைக்கு ஜாக்கி சானை வைத்து ஒரு படமெடுக்கிறார் - 6 மொழிகளில் வர இருக்கிறது. இது தாண்டி, முருகதாஸ் நன்றிக் கடனுக்காக “ரமணா”வினை ஹிந்தியில் இவருக்காக இயக்குகிறார். இன்னமும் இரண்டு படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன. மிக அபூர்வமாக இவ்வளவு பணமிருந்தும் [தசாவதாரம் சம்பாதித்தது 200 கோடிகள்] மிக மிக down-to-earth ஆக இருக்கும் ஒரு நபரினை இப்போது தான் பார்க்கிறேன். வழக்கமாக ரஜினிக்கு தான் இம்மாதிரியான வர்ணணைகள் பொருந்தும்.

மிக எளிமையாக இருக்கும் அவரின் வியாபார யுக்திகள், நேற்றைய சாண்டோ சின்னப்பா தேவரினை நினைவுப் படுத்துகின்றன. ஒரு தனி நபர் என்கிற முறையில், ரவிச்சந்திரன் மிக நல்லவர். ஆனால் நிறுவனம் என்கிற வகையில் ஆஸ்கார் ஒரு பெரிய பெயிலியர்.


இந்த வார செய்கைகள்

படித்தது: பா.ராவின் “பிரபாகரன்: வாழ்வும் மரணமும்”
பிடித்தது: வோடாபோன் விளம்பரத்தில் வரும் சூசூக்கள்(Zoozoo)
கேட்டது: “என்னடா பாண்டி, இன்னா பண்ண போறே” இளையராஜாவின் ரஸ்டிக் குரலில் “வால்மீகி” பாடல்
பார்த்தது: திருவல்லிக்கேணி ரத்னா கபேயில் ”கடவுள் பாதி.மிருகம் பாதி” ஜெகன்
பங்கேற்றது: கிழக்கு மற்றும் Fundsindia.com இணைந்து நடத்திய "பேரங்கள் மற்றும் ரிவார்டு பாயிண்டுகள்” கலந்துரையாடல்
வாங்கியது: ரிச்சர்ட் தேலரின் “Nudge: Improving Decisions about Health,Wealth and Happiness
முணுமுணுப்பது: ”இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை” - டி.ஆர். மகாலிங்கம்
வெறுப்பது: இன்னமும் anyindian.com-இல் “விதுர நீதி” புத்தகம் இல்லாமலிருப்பது
கொலை வெறியோடு இருப்பது: சென்னையில் ஓடும் ஆட்டோக்கள்

April 17, 2009

சனிமூலை - 007

என்னுடைய வீட்டில், என்னுடைய நெருங்கிய வட்டாரங்களில் நான் தான் தங்க வழிகாட்டி. தங்குவதற்கான வழிகாட்டி அல்ல. தங்கத்திற்கான.

தங்கம். இந்திய பெண்களின் இன்றியமையாத இன்னொரு விஷயம். கல்லூரி படிக்கும் போது கலந்து கொண்ட ஒரு தெலுகு கல்யாணத்தில் உலாத்திய பெண்களோடு, அந்த மண்டபத்தினை ஹை-ஜாக் பண்ணியிருந்தால், வடகிழக்கு மாநிலத்தில் ஏதேனும் ஒரு மாநிலத்தின் பாதி பட்ஜெட்டினை ஒப்பேத்தியிருக்கலாம். பெண்கள் மட்டுமல்லாமல், தாதாக்கள், அரசியல்வாதிகள், டூபாக்கூர் தொழிலதிபர்கள் போன்ற ஷோ பேர்வழிகளுக்கான முக்கியமான சமாச்சாரம்.

வழிகாட்டி என்றால், எப்போது தங்கம் ஏறும், எப்போது தங்கம் இறங்கும் என்று ஒரளவுக்கு சொல்லக்கூடிய திறமை கொஞ்சுண்டு ஒட்டிக் கொண்டிருக்கிறது. இதை திறமை என்று சொல்வதை விட, இது உலக சந்தைகளை தொடர்ச்சியாக பார்த்து கொண்டிருப்பதால் ஏற்படக்கூடிய அடிப்படை அறிவு. இனி தங்கம் ஏறுமா ? ஏறாதா?

இனி தங்கம் இறங்கும். ஜி-20 மாநாட்டில் உலக தலைவர்கள் ஐ.எம்.எப்பின் இருப்பிலிருந்து 400 டன் தங்கத்தினை விற்க சொல்லியிருக்கிறார்கள். காற்றில் கணக்குப் போடாதீர்கள். ஒரு டன் தங்கம் இன்றைய விலையில் ஜஸ்ட் ரூ.144 கோடி மட்டுமே. 400 டன் எவ்வளவு என்பதை கணக்குப் போட்டு ஈனோ குடிக்காதீர்கள். அது நமக்கு தேவையில்லை. இந்தியா ஒரு தங்க இறக்குமதி நாடு. நாம் தொடர்ச்சியாக தங்கத்தினை இறக்குமதி செய்து கொண்டே இருப்போம். ஆனால் பிப்ரவரி, மார்சில் ஒரே ஒரு கிராம் தங்கம் கூட இறக்குமதி செய்யவில்லை. மாறாக, விலை கூடியவுடன், புத்திசாலியான நம்மாட்கள், தங்கத்தினை விற்க ஆரம்பித்தார்கள். முட்டாள் ஐரோப்பிய நாடுகள், ஏறும் தங்கம் தான், நிதி சீர்குலைவு, பொருளாதார மந்தநிலைக்கு எதிரான மாற்று என்று நினைத்து வாங்க ஆரம்பித்தார்கள். இந்தியா மற்றும் மத்திய கிழக்கினை தவிர வேறு யாரும் ஆபரண தங்கத்தினை தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதில்லை. ஆக இந்தியா வாங்கவில்லையென்றால், உலகமெங்கும் தங்கம் காற்று வாங்கும்.

மேலும், இந்த எவரெஸ்ட் உயரத்திற்கு காரணம், மத்திய வங்கிகள் உலகெங்கிலும், நிதி சீர்குலைவு ஏற்பட்டவுடன், உஷார் பத்ரி ரைடாக, தங்கத்தினை வாங்கி முடக்கி விட்டார்கள். அதனால் வரத்து குறைந்தது. தேவை அதிகம், ஆனால் சப்ளே குறைவு என்றால் அது சிம்பள் பொருளாதார வீக்கத்தினை உண்டாக்கும். சவரன் 8000ரூபாய்க்கு போய் கொண்டிருந்தது கடந்த ஒன்றரையாண்டுகளில் உயர்ந்து 12-13,000க்கு எகிறியதற்கு இது தான் காரணம். இப்போதைய நிலையே கூட இன்னமும் உயர்நிலையில் தான் இருக்கிறது. கொஞ்ச காலம் போனால் வாங்கும் நிலைக்கு வரும்.

இப்போதைக்கு, தங்கம் வாங்க வேண்டுமென்ற எண்ணங்கள் இருந்தால், கொஞ்ச காலம் ஐபிஎல்லும், உலக டி-20 கிரிக்கெட்டும் பார்த்து முடித்துவிட்டு ஜி.ஆர்.டிக்கு வண்டியினை எடுங்கள்.






கண்கள் பனித்தன. இதயம் நெகிழ்ந்தது. இது அரசியல் வசனமில்லை. சமீபத்தில் ஒரு புத்தகம் படித்தவுடன் ஏற்பட்ட உணர்வுகள்.

2008-இன் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த ஒரு தோழி என்னிடத்தில் கொடுத்த புத்தகம் தான் இது. Sadako and the Thousand Paper Cranes by Eleanor Coerr சிறிய குழந்தைகளுக்கான புத்தகம். சடாகோ என்கிற ஒரு குட்டிப்பெண்ணின் உண்மைக்கதை. குட்டியாய் 80 பக்கங்கள். ஆனால் அது உண்டாக்கிய அதிர்வுகள் ஏராளம்.

சசாகி சடாகோ ஜப்பானில் 1943ல் பிறந்து 1955-இல் தன்னுடைய பன்னிரண்டு வயதில் ஹிரோஷிமாவில் போட்ட அணுகுண்டால் ஏற்பட்ட கதிர்வீச்சால் உயிர் இழந்த குழந்தை. வாழ்க்கையில் ஒட்டப்பந்தய வீராங்கனையாக வேண்டும் என்று நினைத்த பெண். அவளுடைய தோழி சிசுகோ. கதிர்வீச்சின் பாதிப்பால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, சிசுகோ அவளுக்கு ஒரு தங்க பேப்பரானாலான ஒரு கொக்கினை செய்து கொடுத்தாள். ஒரிகமி என்பது மிகப் பிரபலமான ஜப்பானிய கலாச்சார பொழுதுபோக்கு. பேப்பரில் பல உருவங்களை ஒரிகமியில் செய்ய முடியும். ஆயிரம் கொக்குகள் ஒரு நோயாளி செய்தால், வலி, வேதனை, வியாதி எல்லாம் பறந்துவிடும் என்பது ஒரு ஜப்பானிய ஐதீகம்.

வெகு சூட்டிகையாக, ஒடியாடிக் கொண்டிருந்த சடாகோ, சடாலென மருத்துவமனையில் படுத்தப் படுக்கையாக ஆனாள். ஆனாலும், நம்பிக்கை தளராமல், பேப்பரில் கொக்கு செய்வது எப்படி என்று கற்றுக் கொண்டு, தொடர்ச்சியாக கொக்கு செய்ய ஆரம்பித்தாள். அக்டோபர் 25, 1955இல் சடாகோ இறந்து போனாள். அவள் இறக்கும்போது அவள் செய்த மொத்த கொக்குகளின் எண்ணிக்கை 644. அவளின் வகுப்பிலிருந்த குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து மீதமிருக்கிற 356 கொக்குகளை செய்து அவளோடு புதைத்தார்கள். கணக்கு சரியாக போனது - ஆயிரம் கொக்குகள்.

அவள் இறந்த பிறகு அவளின் வகுப்பு நண்பர்கள் அவள் மருத்துவமனையில் இருந்தபோது நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள், அவளின் டைரி போன்றவற்றினை தொகுத்து ‘ககோஷி (Kakoshi)' என்ற பெயரில் வெளியிட்டார்கள். ஜப்பானில் இருக்கும் எல்லா குழந்தைகளும் சேர்ந்து நிதி திரட்டி, 1958-இல் அவளின் சிலையினை ஹிரோஷிமா அமைதி பூங்காவில் திறந்தார்கள். சடாகோவின் சிலையின் கீழ் இன்றும் ஆகஸ்ட் -6இல் எல்லோரும் பேப்பர் கொக்குகளை வைக்கிறார்கள். அது அமைதி தினமாக அனுசரிக்கப்படுகிறது.சடாகோவின் சிலையின் கீழே இந்த வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

This is our cry,
this is our prayer;
peace in the world.

போர் என்பது மிக மோசமான விஷயம். இந்தியாவில் கற்பிக்கப்படும் வரலாறு இன்னமும், “இவர் அவரை போரில் வீழ்த்தினார்” “அவர் இவரை போரில் வெற்றிக் கொண்டு, சாம்ராஜ்யத்தினை விரிவு செய்தார்” என்கிற அளவில் தான் கற்றுக் கொடுக்கப்படுகிறது. வெற்றி என்பது எது என்று அசோகனுக்கு ஒரு புத்த பிட்சு சொன்னது வெறுமனே ஸ்டேஜ் ட்ராமா போட தான் உதவியிருக்கிறது. வரலாற்றினை இன்னமும் நாம் சரியாக கற்றுக் கொள்ளவில்லை அல்லது கற்றுக் கொடுக்கத் தெரியவில்லை என்பது தான் இன்றைக்கும் மேலோங்கியிருக்கிறது. வெற்றி என்பது அடுத்தவரின் தோல்வியிலிருந்து வருவதல்ல. அது உள்ளிருந்து வருவது. தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்வது. தன்னை தொடர்ச்சியாக பரிசோதனைக்கு உட்படுத்தி, அதிலிருந்து பாடம் கற்பது. அனுபவங்களை உள்ளிழுப்பது. அடுத்தவரை கொல்வதல்ல.

தமிழகத்தில் இருக்கக்கூடிய பதிப்பகங்கள் யாராவது இதன் உரிமம் பெற்று தமிழில் வெளியிடலாம். குழந்தைகளுக்கு ஏற்றாற் போல நடை. பெரிய எழுத்து புத்தகம். பென்குவின்புட்னம் என்கிற நியுயார்கில் இருக்கும் ஒரு பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது.



RPG குழுமத்திலிருந்து Open என்கிற ஒரு ஆங்கில பத்திரிக்கை வரத் தொடங்கியிருக்கிறது. இந்தியா டுடே, அவுட்லுக், வீக் போன்றவைகளின் தளத்திலேயே இதுவும் இருக்கிறது. கீழே குறிப்பிடுள்ள மேற்கோள் ’ஒபன்’ பத்திரிக்கையின் முதல் இதழில் வந்த கட்டுரையில் வந்தது. இந்தியாவில் இணைய இணைப்பு அதிகமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் பேப்பரில் அச்சடித்து வரும் பத்திரிக்கைகளுக்கு விளம்பரங்கள் வாங்குவதில் சில பல ஆபத்துகள் இருக்கின்றன. இந்த நிலையில் RPG குழுமம் இப்பத்திரிக்கையினை தொடங்கியிருப்பது பாராட்டத்தகுந்த விஷயம்.

இதே மாதிரி முந்தாநாள் ’பாரிஸ்தா’வில் உட்கார்ந்து கொண்டு பொழுது போகாமல் முன்னால் உட்கார்ந்திருந்த பெண்ணினைப் பார்த்துக் கொண்டே (டார்க் புளு ஜீன்ஸுக்கு பிங் குர்தா, நன்றாக இருந்தாலும், ஏதோ ஒன்று குறைந்தது போல தோன்றியது) இந்தியா டுடே புரட்டினால், மிருணாள் சென் பற்றி ஒரு செய்தி வந்திருந்தது. ரித்விக் கட்டக், மிருணாள் சென் கடைசியாக சத்யஜித் ரே என்கிற வரிசையில் தான் நான் ஆரம்பகாலத்தில் படங்கள் பார்த்தேன்.

வங்காள திரை பிதாமகர்கள் வரிசையில் மிருணாள் சென்னுக்கு ஒரு தனியிடமிருக்கிறது. அடுத்த மாதம் நடக்க இருக்கும் கான்ஸ் திரை விழாவில் திரையிட சென்னின் 1970களின் கல்கத்தாவினை பிண்ணணியாகக் கொண்ட மூன்று படங்களை கேட்டிருந்தார்கள். இண்டர்வியு, கல்கத்தா 71 மற்றும் படாதிக். ஆனால் அந்த படங்களின் பிரிண்ட் படு மோசமாக இருந்ததால் கைவிடப்பட்டது. வெறுத்துப் போய் “நான் சாகும் போது, என் படங்களும் மறைந்து போகும்” என புலம்பி தள்ளியிருக்கிறார். இது ஒரு மகா மோசமான விஷயம்.

மே.வங்காளத்திலிருந்து வந்து பாலிவுட்டினை கலங்கடித்து கொண்டிருக்கும் பிபாசா பாசு, சுஷ்மிதா சென், ரீயா சென் போன்றவர்களில் ஆரம்பித்து பல்வேறு நபர்கள் வங்காள சினிமாவிற்கு கடமைப்பட்டுள்ளார்கள். இது தவிர, தேசிய பட வளர்ச்சி கார்ப்பரேஷனுக்கு இதை விட வேறு என்ன வேலை இருக்க முடியும்? அமிதாப் பச்சனின் மெழுகு சிலையினை ஹாங்காங்கில் வைப்பதற்கு காட்டும் அக்கறையில் அரை பங்காவது, நம்மிடையே இன்னமும் இருக்கும் திரைச்சிற்பிகளை காப்பதில் நமக்கில்லை. நல்ல வேளையாக, தமிழ்நாட்டினை திரையுலகம் கடந்த 40 ஆண்டுகளாக ஆண்டு வருவதால், ஜி.என்.செட்டி சாலையில் போட்டிருக்கும் மேம்பாலத்திற்கு, கலைவாணர் மேம்பாலம் என்று பெயர் வைத்திருக்கிறோம். இல்லையென்றால் என்.எஸ்.கே என்றால் பட்டணம் பொடி பெயரா என்று நாளைய சந்ததியினர்கள் கேட்பார்கள்.

இந்தியர்களான நமக்கு நம்முடைய பாரம்பரியத்தினை காப்பதில் இருக்கும் அலாதி அக்கறை சொல்லி மாளாது. இந்தியாவின் எல்லா மியுசியங்களும் காலியாக இருக்கும். பள்ளிக் குழந்தைகளின் செலவு குறைவான கல்விச்சுற்றுலா தலமாக தான் பிரபலப் படுத்தியிருக்கிறோமே தவிர அதன் முக்கியத்துவத்தினை உணர்த்தியதுப் போல தெரியவில்லை. வங்காள சினிமாவினை நேசிப்பவர்கள் யாராவது இருந்தால் புத்ததேவ் பட்டாச்சார்யா / மம்தா பானர்ஜி வகையறாக்களில் யாராவது ஒருவரிடம், தாகூர் மாதிரியான ஒரு ஆள் இன்னமும் உங்களூரில் உயிரோடு இருக்கிறான், அவனை சரியான பாதுகாத்து வையுங்கள் என்று பெங்காலியில் உரக்கச் சொல்லுங்கள்.

இந்த வார மேற்கோள்

நஸ்ரூத்தின் ஷா "ஒபன்” பத்திரிக்கையில் கலைப்படங்கள் எடுப்பதுப் பற்றி
“sign me up, borrow funds from NFDC claiming to make realistic cinema, use indoor shots to save money, producer and I split the remaining cash"