சனிதோறும் ஒரு பத்தி

Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

March 13, 2009

சனிமூலை - 002

”நொர்நாட்டியம்” “எசலிப்பு” “குச்சி குத்தல்” “செம்போத்து பிடித்தல்” - இதற்கெல்லாம் பொருள் என்ன? விடை: கடைசியில்


போன வாரம் இரவு நண்பர் ஒருவர் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.அதில் இந்தியாவில் இருக்கும் தனியார் காப்பீடு நிறுவனங்களின் நஷ்ட தொகைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. அவர் அனுப்புவதற்கு இரண்டு நாளுக்கு முன்பு தான் அமெரிக்காவின் பெரிய காப்பீடு நிறுவனம், இன்னமும் கொஞ்சம் ஆக்சிஜன் அரசிடமிருந்து பெற்றிருக்கிறது.

அமெரிக்காவின் மிகப் பெரிய காப்பீடு நிறுவனமான AIG மீண்டும் அரசிடம் கெஞ்சி,கூத்தாடி $30பில்லியன் இடைக்கால நிவாரணமாக பெற்றிருக்கிறது. அமெரிக்க வங்கிகள், முதலீட்டு ஆணையங்கள், காப்பீடு நிறுவனங்கள் எல்லாமே கொடுத்து வைத்தவர்கள், தவறு “கொடுத்து கெட்டவர்கள்”. அமெரிக்க அரசும், ஒபாவின் பொருளாதார கவுன்சிலில் இருப்பவர்களும், மன்னராட்சியில் மக்களுக்கு தானம் கொடுக்கும் நல்லாட்சிப் போல வாரி கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். திறந்துவிடப்பட்ட அணைப் போல, ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு காபாற்றுதல் படலம் நடந்து கொண்டேயிருக்கிறது. ஜடாயுக்கு ராமர் மோட்சம் கொடுத்தது போல, ஒபாமா அமெரிக்கர்களுக்கு.

இப்போது பெரிய பிரச்சனை என்னவென்றால், நம் மக்கள் உச்சத்தில் இருக்கும்போது வந்த எல்லா தனியார் காப்பீடு நிறுவங்களிலும் முதலீடு செய்துவிட்டார்கள், AIG போல இதுவும் கவிழுமா என்பது தான் பில்லியன் டாலர் கேள்வி. இந்தியாவில் இருக்கக்கூடிய தனியார் நிறுவனங்கள் கவிழாது. நிம்மதியா.

ஏனெனில், இந்திய காப்பீடு நிறுவனங்கள் Insurance Regulatory and Development Authority of India வாய் கோணாமல் இருக்க IRDA என்று அழைக்கப்படுகிற இந்திய காப்பீடு கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சி ஆணையத்திற்கு கீழ் வருகிறது. IRDAவில் உறுப்பினராக இல்லாமல், இந்தியாவில் யாரும் தனியார் காப்பீடு நிறுவனத்தினை நடத்த முடியாது. IRDA பல முக்கியமான முடிவுகளை முன்வைத்திருப்பதால், அமெரிக்க நிறுவனங்கள் போல டெரிவேட்டிவ்களிலோ, கிரெடிட் டிபால்ட் ஸ்வேப்புகளிலோ(CDS) முதலீடு செய்ய முடியாது. அதனால், கவிழ்வதற்கான சாத்தியங்கள் மிக மிகக் குறைவு.

மேற்சொன்ன டெரிவேட்டிவ், CDS போன்ற வார்த்தைகள் படிக்கும்போதே மூளையில் பட்டாம்பூச்சி பறந்தால் மறந்துவிடுங்கள். வாரன் பஃபெட்டே இம்மாதிரியான விஷயங்களை மண்டையில் ஏற்றிக் கொள்வதில்லை. இப்போதைக்கு, இந்தியாவில் தனியார் காப்பீடு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தால் உங்கள் பார்மசியில் ’வேலியம்’ வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. நமீதாவோடு ஹவாயில் டூயட் பாடிக்கொண்டே கனவு காணுங்கள்.

இப்போதிருக்கும் பொருளாதார சூழ்நிலையில், மில்லியன், பில்லியன்கள் போய், டிரில்லியன்கள் பேசப்படுகின்றன. ”நீ என்னடா பிஸ்கோத்து, நாங்கெல்லாம் அந்த காலத்திலேயே டிரில்லியன் டாலரை தூக்கி கொடுத்தவங்கடா” என பின்னாளில், உங்கள் சந்ததியினரிடம் பீத்திக் கொள்ள இது பயன்படும்.



நண்பர் ஒருவரோடு இந்த வார ஆரம்பத்தில் பேசிக் கொண்டிருந்தேன். சுற்றுச்சூழல் விஷயங்களில் அவர் கெட்டிக்காரர். இப்போது, குறைந்த கட்டுமான வீடுகளை, மூங்கில் பின்புலத்தோடு ஒரிஸ்ஸாவில் ஒரு நதியோரம் மேற்கொண்டிருக்கிறார். அவர் சொன்ன ஒரு விஷயம் ப்ரீக்னாமிக்ஸ் தனமானது. பரீக்னாமிக்ஸ் தெரியவில்லையென்றால், பெரியதாக ஒன்றும் கெட்டுப் போகாது. சம்பந்தமேயில்லாத இரண்டுவிஷயங்கள் என்று நாம் நினைத்திருக்கும் விஷயங்களுக்கு இடையே ஒரு சம்பந்தமிருக்கும்.

கடந்த 300 ஆண்டுகளில், எங்கெங்கெல்லாம் மூங்கில் பூ பூத்ததோ, அங்கெல்லாம் பஞ்சமும், ப்ளேக்கும் வந்திருக்கிறது. மொட்டை தலைக்கும் முழங்காலும் முடிச்சா என்றால் இல்லை. விஷயம் கொஞ்சம் அறிவியல் பூர்வமானது.

மூங்கில் பூக்கள் எலிகளுக்கு பிடிக்கும். மூங்கிலில் பூ வந்தால், அத்தோடு மூங்கில் அறுவடை அங்கே காலி. மூங்கில் பூ எலியை பொறுத்தவரை வயாகரா மேட்டர். தின்னும் எலிகள் இஷ்டத்துக்கு இனப்பெருக்கம் செய்யும். மூங்கில் பூ தீர்ந்தவுடன், பக்கத்தில் இருக்கும் அறுவடை நிலங்களுக்கு இவை படையெடுக்கும். விளைப்பொருட்களையெல்லாம் தின்று தீர்க்கும். மக்கள் எலிகளை கொல்ல, பூச்சி மருந்தடிப்பார்கள், எலி பாஷாணம் கொடுப்பார்கள். தின்னும் எலிகள் செத்துப் போய், பாக்டீரியாக்கள் காற்றில் பரவி, மக்கள் மூச்சிலேறி, ப்ளேக் வந்து சாவார்கள். எலி தின்ன மிச்சத்தை வைத்துக் கொண்டு அறுவடை செய்ய முடியாது. பஞ்சம் வரும். மக்கள் கொத்து கொத்தாக குடிமாற்றம் செய்வார்கள்.

மூங்கில் பூ இப்படி தான் சமுக புரட்சியினை செய்துவருகிறது. இதை விட சமூக புரட்சியினை அரசியல்வாதிகள், ஒரே ஆளுக்கு 10 ரேஷன்கார்டுகள் கொடுத்து, பல இடங்களில் அவருக்கான குடும்பம், வாழ்க்கை வசதிகள் இருக்கிறது என சொல்லி சமூக புரட்சி செய்து வருகிறார்கள், அதெல்லாம் இயற்கையில் சேராது.



இந்தியாவில் ஒரு ரூபாய்க்கு என்ன வரும். ஒரே ஒரு ரூபாய்க்கு.

  • 2 அல்பென்லெய்பீ
  • டூவீலருக்கான காற்றடிக்கும் காசு
  • கடலையுருண்டை
  • பிச்சைக்கார தானம்
  • ஏர்டெல்லில் இந்தியா முழுக்க செல்பேசியில் ஒரு நிமிடம் பேச
  • கோவிலுக்கு வாசலில் செருப்பு விட
  • பட்டர் பிஸ்கேட்
  • ஆரம்பகால டெக்கான் குரோனிக்கல்
  • உண்டியல் காசு மற்றும்
  • வாய்க்கரிசி போட
கடைசியாக சொன்ன வாய்க்கரிசி தான் ஒரு ரூபாய்க்கு நடந்தது. சென்ற வாரத்தில், தமிழகத்தில் எங்கேயோ, ஒரு பரோட்டா கடைக்காரருக்கும், வாடிக்கையாளருக்கும் தகராறு. வாடிக்கையாளர் குடித்திருந்தார் போலிருக்கிறது. ஒரு ரூபாய் அவர் சாப்பிட்ட கணக்கில் தரவில்லை. கடைக்காரர் கேட்க, வாய் வார்த்தை தடிக்க, வாடிக்கையாளர், கடைக்காரரை கொன்று விட்டார். ஒரே ஒரு ரூபாய். எல்லார்க்கும், செத்தபின் ஒரு ரூபாயினை நெற்றியில் வைப்பார்கள். இவர் ஒரு ரூபாய் கேட்டதால் செத்து போனார். உயிரின் மதிப்பு அவ்வளவுதான்.

முதலாளித்துவ தேசங்கள் பணத்திற்காக செய்யும் கொலைகள் - விபத்துகள், இலங்கை, பாலஸ்தீனம், பெரும்பகுதி ஆப்ரிகா போன்ற இடங்களில், இப்போது சாதாரண மனிதர்களும் கொலைகளை சர்வசாதாரணமாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இனி ஒரு ரூபாயினைக் கூட உரிமையோடு கேட்டு வாங்கமுடியாது போலிருக்கிறது, உயிர் ஒரு ரூபாயினை விட ரொம்ப பெரிய விஷயம்.


“உவின்ஸ்லோவின் தமிழ் அகராதி 1862இல் வெளிவந்தது. இதில் “கும்பகோணம்” என்ற சொல்லுக்குப் பித்தலாட்டம் என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. இதே சொல்லை(1929) சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ் லெக்சிகனில் சேர்ப்பதற்கு பெரும் எதிர்ப்பு வந்திருக்கிறது. கடைசியில் சேர்க்காமல் விட்டு விட்டனர். தமிழ் லெக்சிகனின் பொறுப்பை ஏற்ற வையாபுரிப் பிள்ளை இது போன்ற சிக்கலைச் சந்திருக்கின்றார்.”
மேற் சொன்ன பேரா நான் சமீபத்தில் படித்த ஒரு புத்தகத்திலிருந்து எடுத்தது. தமிழ் அமீபாவுக்கு முன்னாடியான மொழி என்பது பேத்தல் என்பதில், தமிழ் படித்த பலபேருக்கு உண்மையாய் இருந்தாலும், மனக்கசப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் மொழி என்பது ஒரு அருமையான மொழி என்பதில் எவ்வித சந்தேகங்களுமில்லை.

’நாஞ்சில் நாடு’ என்றழைக்கப்படும் நாகர்கோயில், கன்னியாகுமரியில் ஒரு தமிழ் இருக்கிறது. தமிழ்நாட்டின் மாவட்டங்கள் தோறும் ஒரு தமிழ் இருக்கிறது. சென்னைக்கு சென்னை தமிழ், மதுரை தமிழ், கோயமுத்தூர் தமிழ் என ஒவ்வொரு 100 கிமீட்டருக்கும் தமிழ் சொற்கள், அதன் பொருள், உச்சரிப்பு என மாறிக் கொண்டேயிருக்கிறது. வடிவேலு தமிழ் சினிமாவுக்கு கொடுத்தது நகைச்சுவையோ, இல்லையோ, கண்டிப்பாக “மதுர தமிழின்” பல வார்த்தைகள். அந்தவகையில் நாஞ்சில் நாடு என்றழைக்கப்படும் நாகர்கோயில் / கன்னியாகுமரியில் புழங்கும் தமிழில் சில வார்த்தைகள் தான் மேற்சொன்னது

  • நொர்நாட்டியம் - சிக்கலான, கஷ்டமான, செய்யமுடியாது
  • எசலிப்பு - பிணங்குதல்; வேண்டியவர்கள் இருவரும் சண்டை போடுதல்
  • குச்சி குத்தல் - கர்ப்பத்தை கலைத்தல்; எருக்கலஞ் செடிக்குச்சியை கர்ப்பமாண பெண்ணின் குறிக்குள் குத்தல்
  • செம்போத்து பிடித்தல் - திருட்டுத்தனமாக பெண்ணுடன் தொடர்பு கொள்ளுதல்
நாட்டார் வழக்காற்றியல் என்கிற துறை பெயரை கேட்டாலே, பாதி பேருக்கு, நாட்டாருக்கும், மளிகைக் கடை நாடாருக்கும் ஏதோ உறவிருக்கிறது என்கிற அளவில் தான் நம்முடைய வட்டார ரீதியான தமிழறிவு நமக்கிருக்கிறது. ”நாஞ்சில் வட்டார வழக்கு சொல்லகராதி” (தமிழினி வெளியிடு, அ.கா.பெருமாள்) என்கிற புத்தகத்திலிருந்து எடுத்தது தான் மேலே குறிப்பிடப்பட்டது.

அ.கா.பெருமாளின் கடுமையான உழைப்பு புத்தகம் முழுவதும் தெரிகிறது. என்னதான் நாம் எல்லோரும் தமிழில் பேசினாலும், ஒரு வட்டாரத்தில் பேசும் தமிழும், அதன் சொற்களுக்கான பொருளும் அதை நாம் புரிந்து கொள்வதும் சிரமமான விஷயம். இந்த நிலையில்,தமிழை நமக்கே மறு அறிமுகம் செய்வது போல சில வார்த்தைகள் அச்சு அசலாக இருக்கின்றன. தமிழின் வளம் பற்றி கவலைப்படுபவர்களுக்கு இப்புத்தகம் ஒரு eye opener. இதில் வரும் தெம்மாடி, தெண்டி போன்ற வார்த்தைகள் நாம் மலையாளத்துக்கு கடன் கொடுத்தவை.

புதிய வார்த்தைகளை, கலை-அறிவியல் அகராதிகளில் தேடி மண்டை காய்வதற்கு முன், அவர்கள், சில காலம், இம்மாதிரியான சொல்லகராதிகளில் தேடினால் பல வார்த்தைகள் கிடைக்கலாம். எசலிப்பு என்பது ஒரு அருமையான வார்த்தை - Friendly Fights, disturbances, issues போன்றவற்றுக்கு இதனை பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு ஆங்கிலத்தில் Boardroom battle என்கிற ஒரு பதம் இருக்கிறது. அதற்கு ஈடான பதமாக ”எசலிப்பு” தெரிகிறது. போர்ட் ரூமில், எல்லாம் தெரிந்தவர்கள் தான். ஆனாலும், அவரவரகளின் கருத்திற்க்கேற்ப பிணக்குகள் வெளிப்படும்.

தமிழ் மொழி வளரவேண்டுமானால், வட்டார வழக்கினை பொது வழக்காக கற்றுக் கொடுத்தல் அவசியம். இது தெரியாமல், தமிழ்ப் படத்திற்கு, தமிழில் பெயர் வைத்தால் மட்டும் தமிழ் நன்றாக வளர்ந்து வீ.ஆர்.எஸ் வாங்காது.

இந்த வார கார்ட்டூன்

ஆர்.கே.லக்‌ஷ்மன் - Everlasting Truth (டைம்ஸ் ஆப் இந்தியாவிலிருந்து)


பிற்சேர்க்கை

ராபர்ட் லுட்லம் செத்துப் போய்விட்டாராம். பெயரை நான் சரியாக சொல்லவில்லையாம். அதனால், இப்போதைக்கு போன வாரத்திய விஷயத்தினை ஆவி அமுதாவிடம் சொல்லி, லுட்லமின் ஆவியை உடலில் ஏற்றி அந்த விஷயத்தினை எழுத சொல்லலாம்.