சனிதோறும் ஒரு பத்தி

March 20, 2009

சனிமூலை - 003

பணவீக்கம் (Inflation) 0.44% குறைந்தது என்று எல்லா ஊடகங்களும் கொண்டாடாத குறையாக முன்பக்கத்தில் வெளியிட்டு இருந்தன. ஆனாலும், நாம் சாப்பிடும் அரிசியின் விலை ஏறி தான் இருக்கிறது. இது எப்படி சாத்தியமாகும் ? இதற்கும் இந்திய குடிமகனுக்கும் என்ன சம்பந்தம் ?

முதலில் இந்தியாவில் பணவீக்கம் எப்படி கணக்கிடப்படுகிறது என்பது தெரியாமல் வெறுமனே நம்பரை வைத்துக் கொண்டு ஜல்லியடிப்பது முறையற்றது. இந்திய பணவீக்க சதவிகித எண், வாராவாரம் வியாழக்கிழமை வெளியிடப்படும். ஒட்டுமொத்த விலை குறியீட்டளவு (Wholesale Price Index - WPI) அடிப்படையாக கொண்டு இந்த சதவிகிதம் கணக்கிடப்படும். WPI-ல் உணவுப் பொருட்களுக்கான ஒதுக்கீடு வெறும் 22% மட்டுமே. அதாவது 1% பணவீக்கம் என்று சொன்னால், அதை நிர்ணயிப்பதில் 0.22% உணவுப் பொருட்களுக்கு வரும். இது தாண்டி, இந்த குறியீட்டளவு ஒரு “அடிப்படை வாரத்தினை”(Base week) வைத்து, அன்றைக்கும், இன்றைக்கும் என்ன வித்தியாசம் என்கிற ஒப்பீட்டளவில் கணக்கிடப்படுகிறது. இந்த கணக்கீடு அடிப்படையே ஒரு தவறான அடிப்படை. அதைவிட மோசமான விஷயம், இதை கிரிக்கெட் ஸ்கோர் போல சம்பிரதாயத்துக்கு வாராவாரம் அறிவிப்பது.

பணவீக்கத்திற்கும், பங்குச் சந்தைக்குமான தொடர்பு அறுபட்டு ரொம்பநாள் ஆகிறது, நவம்பர் 2008க்கு பின், பணவீக்கம் குறைந்து கொண்டே வருகிறது. பணவீக்கம் குறைந்தால் பொருட்களின் விலையும் குறையவேண்டும். விலை குறைந்தால் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகரிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் அதிகரித்தால், நிறுவனத்துக்கு வருமானமும், லாபமும் அதிகரிக்கும். இதில் எதுவுமே நடக்கவில்லை. அதனால், பங்குச் சந்தை இன்னமும் 8000-9500 இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. பங்குச் சந்தை முன்னேறுமா என்று படுத்துக் கொண்டு விட்டத்தைப் பார்த்துக் கொண்டு காற்றில் வட்டங்கள் வரைவது இன்றைக்கு பிரபலமான விஷயம். நீங்களும் அந்த கூட்டத்தில் பங்கு பெற தொடர்ச்சியாக வணிக நாளிதழ்கள் படியுங்கள்.

குடிமகனுக்கும் பணவீக்கத்திற்குமான சம்பந்தமென்ன? ஏன் பணமெலிவு வரலாம் என்று சொல்கிறார்கள் என்பதற்கான அடிப்படையினை ஆராயலாம். ஒரு சாதாரண இந்தியனின் வருவாயில் மிக முக்கியமாக இடம்பெறுபவை நான்கு விஷயஙகள் - அடிப்படைப் பொருட்கள், போக்குவரத்து செலவுகள், சமூக செலவுகள், முதலீடுகள். அடிப்படைப் பொருட்கள் - அரிசி,பருப்பு முதல் மொபைல் ரீசார்ஜ் கூப்பன் வரைக்குமான விஷயங்கள். போக்குவரத்து செலவுகள் - டூவிலர்/காருக்கு பெட்ரோல் போடுவது முதல், ஊர் சுற்றுதல் செலவுகள். சமூக செலவுகள் - வாடகை, மின்சாரம், குழந்தையின் படிப்பு, கிரெடிட்காடுக்கு பணம் கட்டுதல் வரையிலான செலவுகள்.முதலீடுகள் - சிறுசேமிப்பில் ஆரம்பித்து, பரஸ்பர நிதி, காப்பீடு, வீட்டுக் கடன் வரைக்குமான விஷயங்கள்.

மேற்சொன்ன நான்கில் முதல் மூன்றில் பணவீக்கத்தின் நேரடி பாதிப்பு மிகக் குறைவு. அடிப்படைப் பொருட்களின் விலை உண்மையாக 20% ஏறியிருக்கிறது.ரூ.20-30க்குள் கிடைத்த நல்ல பச்சரிசி இன்றைக்கு ரூ.35-42க்குள்தான் கிடைக்கிறது. ஆக இதன் ஏற்றம் தவிர்க்க முடியாதது. பெட்ரோல், டீசல் வகையிலான பொருட்களின் விலை அரசால் கட்டுப்படுத்தப்படுகிறது. அதனாலேயே, நாம் இன்னமும் பெட்ரோல் உலகச்சந்தையில் $147 எட்டும்போது ரூ.50 கொடுத்து போட்டோம்.இப்போது $50க்குள் அடம்பிடித்துக் கொண்டிருக்கும்போது ரூ.45 கொடுத்து போட்டுக் கொண்டிருக்கிறோம்.ஆக, இதன் விலை பணவீக்கத்தோடு நேரடி தொடர்பானவையில்லை. சமூக செலவுகள் இப்போது பெரும்பாலானவர்களின் வீட்டில், அத்தியாவசியத்தினை தாண்டி குறைந்திருக்கின்றன. மூதலீடுகளும் மாறியிருக்கின்றன. ஆக, இது ஒரு நேர்மையான, நேரடியான கணக்கீட்டளவு என்பதற்கு எவ்விதமான முகாந்திரங்களுமில்லை. ஆனாலும், அரசுக்கு ஏதேனும் ஒரு குறியீட்டு எண் தேவைப்படுகிறது. அதை வைத்துக் கொண்டே மத்திய ரிசர்வ் வங்கி பல்வேறு விதமான முயற்சிகளை எடுக்க முயல்கிறது. உ-ம், வட்டி விகிதங்களை குறைத்தல்

மக்களுக்கு உள்ளூரே பயம் வந்து விட்டது. வளைகுடா நாடுகள், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள், இந்தியாவுக்கு அனுப்பும் தொகை(Inward remittance) 33% குறைந்திருக்கிறது என்று ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன. கேரளாவில் வளைகுடா நாடுகளிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட பணியாளர்கள், சேமிப்பினை வைத்துக் கொண்டு அடுத்து கொல்லத்தில் படகு விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். கோயமுத்தூர், ஈரோடு, பொள்ளாச்சி வளையத்தில் இருக்கும் டெக்ஸ்டெல் மில்கள் பணியாளர்களை குறைத்து காற்று வாங்குகின்றன. குஜராத்தில் வைரம் வெட்டி சீரமைக்கும் தொழில் மிக மோசமான நிலைக்கு போய், இன்றைக்கு தேர்தல் பிரச்சாரத்தில் பெயில் அவுட் கொடுக்கும் அளவிற்கு பேசப்பட்டு வருகிறது. ஆக இந்த நிலையில் கண்டிப்பாக புள்ளியியல்ரீதியாக கணக்கிடப்படும் பணவீக்கம் குறைந்துதான் இருக்கும்.

பண வீக்கம் இந்தியாவில் பழகி போன ஒன்று. இந்திராகாந்தி ஆட்சியில் இந்தியாவின் பணவீக்கம் 35% உலகளவில் எல்லா அரசுகளும் பணவீக்கத்தினை எப்படி கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பதை கடந்த 60 ஆண்டுகளாக பின்பற்றி வருகின்றன.பிரச்சனை பணவீக்கத்தில் இல்லை. அது பணஇளைப்பில்(Deflation) இருக்கிறது. பணவீக்கத்தினை விட மோசமான விஷயம் பணஇளைப்பு.

பண இளைப்பு என்பது தொடர்ச்சியாக ஒரு பொருளின்/சேவையின் விலை, வாடிக்கையாளர்கள் இன்றி, தொடர்ச்சியாக சரிந்து கொண்டே வருதல். பொருட்களின் விலை குறைவு என்பது வாடிக்கையாளனுக்கு சந்தோஷமான விஷயமாகத் தானே இருக்கமுடியும், இதில் என்ன பிரச்சனை?

உதாரணத்திற்கு உங்களிடம் ஒரு விலையுயர்ந்த ஒரு செல்பேசி இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதன் வாங்கிய விலை ரூ.30,000. இதை சந்தையில் விற்றால், ரூ.24,000 போவதாக கொள்வோம். இப்போது நீங்கள், ஒரு ஆளரவமற்ற தீவில் இருக்கிறீர்கள். உங்களின் செல்பேசியின் விலையென்ன? விடை: பூச்சியம். சுழி. ஒன்றுமேயில்லை. ஒரு பொருளின் / சேவையின் விலை என்பது அதை வாங்கும் வாடிக்கையாளர்களைப் பொறுத்தே அமையும்.

இப்போது அதே உதாரணத்தினை வேறுவிதமாக பார்ப்போம். நீங்கள் ரூ.24,000க்கு விற்கு தயாராக இருக்கிறீர்கள். ஆனால் வாடிக்கையாளர்கள் இல்லை. உடனே, விலையினை ரூ 22,000க்கு குறைக்கிறீர்கள். அப்போதும் வாடிக்கையாளர்கள் இல்லை. ரூ 20,000, ரூ 18,500, ரூ 16,000, ரூ 15,000. ம்ஹூம். ஒரு பயலும் பக்கத்தில் நெருங்குவதாக இல்லை. இப்போது உங்களின் மனநிலையென்ன?

இதுதான் பண இளைப்பு. இது மோசமான விஷயம். இதையே ஒரு பொருள் விற்கும் வியாபாரிக்கும், சேவை செய்யும் வியாபாரிக்கும் பொறுத்திப் பாருங்கள். அவனுடைய இருப்பு (inventory) அதிகமாகும். இந்தியாவில் ஏன் கார் விற்பனை கடந்த நான்கு மாதங்களில் சரிந்தது ? ஏன் உங்களின் ஒன்றுவிட்ட சித்தப்பாவின் ஒர்ப்படியின் மகனுக்கு அவனுடைய மென்பொருள் சேவை வேலை பறிபோனது? ஏன் நாத்தனாரின் கணவர் துபாயிலிருந்து திரும்பிவந்து இந்தியாவில் தொழில் தொடங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்? ஏன் ரூ.52,000 போன ஸ்டீல் கம்பிகள், இன்றைக்கு சீந்த ஆளில்லாமல் ரூ.35,000க்கு அல்லாடுகிறது ? ஏன் டி.எல்.எப் மாதிரியான, இந்தியாவின் முதன்மை கட்டமைப்பு நிறுவனங்கள், பெங்களூரிலும், சென்னையிலும், அவர்களின் அபார்ட்மெண்ட் விலைகளை 35% குறைத்ததை லவுட் ஸ்பீக்கர் வைத்து அரற்றுகிறார்கள்?

ஒரே விடை: நாம் பண இளைப்பினை நோக்கி போய் கொண்டிருக்கிறோம். உங்களுக்கும், எனக்கும் நாளை என்ன நடக்குமோ என்கிற பயம் வந்துவிட்டது. நம்முடைய வேலை நிரந்தரமா, இல்லை கழட்டி விட்டுவிடுவார்களா என்கிற தொடர்ச்சியான அலர்ஜி எல்லோரிடமும் இருக்கிறது. அப்படியே வேலை இருந்தாலும், சம்பளம் சரியாக ஒன்றாம் தேதி வருமா என்கிற கவலை வாட்ட ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில், நாம் உபயோக்கிக்கும் பொருட்கள் / சேவைகளை குறைத்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறோம்.

வார இறுதியில் ஹோட்டலில் சாப்பிட்டதை குறைக்க ஆரம்பித்து விட்டோம். கிரெடிட் கார்டில் வாங்கி பின்னாடி கட்டிக்கொள்ளலாம் என்கிற நினைப்பு கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பித்திருக்கிறது. குமிழில் ஷேவ் பண்ணக்கூட பார்லர் போன பயல்கள், ஜில்லெட் ப்ரெஸ்டோவும் கையுமாக சுயசிரைப்பில் இறங்கிவிட்டார்கள். எங்கெங்கெல்லாம் குறைக்க முடியுமோ, அங்கெங்கெல்லாம் நாம் நம் தேவையினை குறைத்து கொண்டிருக்கிறோம். இது தான் நிதர்சனம்.

நாம் நம் தேவைகளை குறைத்தால், அதை விற்பவர்களின் வருமானம் குறையும். அவர்கள் வேலை குறைப்பு செய்வார்கள். வேலை போனவர்களுக்கு வருமானம் வராததால், அவர்களின் தேவையும் சுருங்கும். தேவை சுருங்கினால் இருப்பு அதிகமாகும். விற்கமுடியாமல் தேங்கும். தேங்கினால் அதன் வட்டி எகிறும். கட்டமுடியாதவர்கள், நிறுவனத்தினை மூடிவிட்டு போய்விடுவார்கள். இது ஒரு கொடுமையான, குரூரமான வட்டம். இதை தவிர்க்கதான் உலகெங்கிலும் அரசாங்கங்கள் பணத்தினை பெயில் அவுட் பேக்கேஜ், ஸ்டியுமலஸ் பேக்கேஜ் என்று கொட்டோகொட்டென்று கொட்டி, தேவையினை அதிகரிக்க விரும்புகின்றன.

இறுதியாக, இந்தியாவின் நிஜமான பணவீக்க குறீயிடு 10.43%, இது வாடிக்கையாளர் விலை குறியீட்டளவினை (Consumer Price Index - CPI) அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டது.

மற்றபடி, ஒவராக பொருளாதாரம் பேசி கடுப்பேற்ற விரும்பவில்லை.



மொழி எப்படியெல்லாம் காலத்திற்க்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் என்பதற்கு ஆங்கிலம் சரியான உதாரணம். பட்லர் இங்கிலிஷில் ஆரம்பித்து, அமெரிக்கன், பிரிட்டிஷ் என பல வட்டாராக்கங்கள் ஆங்கிலத்தில் உண்டு. அதில் நான் சமீபத்தில் தொடர்ச்சியாக படித்து வருவது, வேர்ட்ஸ்பெ தளத்தில் வரக்கூடிய சில தற்காலத்திய வார்த்தைகள்.

உதாரணத்துக்கு
self-tracker - பல்வேறு தளங்களில் தன்னுடைய உடல், மனம் சம்பந்தப்பட்ட விஷயங்களை தொடர்ச்சியாக பாலோ பண்ணுதல்.
sexting / sexter கில்மாவாக கேர்ல் ப்ரெண்டுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புதல் / அனுப்புவர்.
data shadow - உங்களுடைய கிரெடிட்/டெபிட் கார்டுகள், செல்போன்கள், இணைய தளங்களில் நீங்கள் செய்திருக்கக்கூடிய விஷயங்கள், வலைப்பதிவுகளில் நீங்கள் போடக்கூடிய கமெண்டுகள் போன்ற உங்களைப்பற்றிய பல்வேறு டேட்டாவினை விட்டு போதல்

இதுமாதிரியான விஷயங்களை கொஞ்சநாட்கள் என்னுடைய நண்பர் ஒருவர் டிவிட்டரில் செய்து கொண்டிருந்தார். அப்புறம், தமிழ்கூறும் நல்லுலகம், “செல்லமாக” மிரட்டியதால் அதனை விட்டு விட்டார். இப்போது Googling என்கிற வார்த்தை டிக்‌ஷ்னரியிலேயே வந்துவிட்டது. ஆனால், தமிழில் இதெல்லாம் நடக்கும் சாத்தியங்கள் குறைவு. தமிழ்நாட்டில் தமிழினை வெறுக்க வைப்பது இரண்டே விஷயங்கள் 1. தமிழாசிரியர்கள் 2. திராவிட கட்சிகள்


இந்த வார கோவம்

கோவம் என்பது சாதாரண வார்த்தை. மூர்க்கமான, அரக்கத்தனமான கோவம் என்று வைத்துக் கொள்ளலாம்.

மும்பாயில் தந்தையும், தாயுமாக சேர்ந்து, ஒரு சாமியாரின் பேச்சினைக் கேட்டுக் கொண்டு, சொந்த மூத்த மகளையே 9 வருடங்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இதுதாண்டி அந்த சாமியாரும் அந்த பெண்ணின் வாழ்க்கையில் விளையாடியிருக்கிறார். இது போதாதென்று அவருடைய இன்னொரு மகளையும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்த முயன்றபோதுதான் விஷயம் வெளியே வந்திருக்கிறது. இதில் சோக நகைச்சுவையென்னவென்றால், இந்திய அரசியலைமைப்பு சட்டத்தில் incest என்றழைக்கப்படும் பாலியல் பிரச்சனைகளுக்கு சட்டமேயில்லை. Disgusting. அதனால் வெறுமனே பாலியல் வன்முறை என்கிற கோணத்தில்தான் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். பல விஷயங்களில் மத்திய கிழக்கு நாடுகளின் மேல் எனக்கு பிரச்சனைகள் இருந்தாலும், இந்த ஒரு விஷயத்தில், அவர்களுடைய தண்டனை தான் சரியானதாக தெரிகிறது.

பெற்ற மகளோடு உறவு கொண்டால், செல்வம் பெருகும் என்று சொன்ன ஒரு புறம்போக்கு சாமியாரின் பேச்சினைக் கேட்டு 9 வருடங்கள் நடந்த இந்த கொடுமையினை படிக்கும் போது பிபி எகிறுகிறது. பெற்ற மகளோடு உறவு கொண்டு ஒருவேளை செல்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டுமானால், உலகத்தில் இன்றைக்கு உறவு முறைகள் வேறுமாதிரியாக இருந்திருக்கவேண்டும். தமிழில் எனக்குதெரிந்த எல்லா கெட்டவார்த்தைகளை பிரயோகித்தாலும், இன்னமும் கோவம் தனிந்தபாடில்லை.

இராம.நாராயணன் மாதிரியான ஆட்கள் கிராபிக்ஸ் உத்திகளுடன் தீய சக்தியை தெய்வ சக்தி அழிக்கும் என்றெடுக்கும் உடான்ஸ் படங்களின் கோரமான முகம் தான் சாமியார்களை நம்பி இந்த மாதிரியான காரியங்களில் ஈடுபடுவது. இப்படிப்பட்ட கோரங்கள் நடக்கும்போது பார்த்து கொண்டிருப்பதற்கு பெயர், தெய்வ சக்தியல்ல, அது தெய்வ சகதி. என்ன புரியவில்லையென்றால், அந்த இரண்டு பெண்களின் மனநிலை எந்தளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கும், சமூகத்தில் அவர்களின் நிலையென்ன, நாளை அவர்களுடைய வாழ்க்கையினை எப்படி பார்ப்பார்கள் - இதையெல்லாம் அந்த பெற்றோர்கள் யோசித்தே பார்த்திருக்க மாட்டார்களா? இந்த மாதிரியான சம்பவங்களினாலேயே, நான் கூடிய விரைவில் நிஹிலிஸ்டாக (Nihilist) மாறிவிடுவேனோ என்கிற பயம் இப்போது வர ஆரம்பித்திருக்கிறது.

8 comments:

  1. //தமிழ்நாட்டில் தமிழினை வெறுக்க வைப்பது இரண்டே விஷயங்கள் 1. தமிழாசிரியர்கள் 2. திராவிட கட்சிகள்//

    அவர்களுக்கு முன் தமிழை விரும்ப வைத்தவர்கள் யார்? இனி விரும்புமாறு செய்யப் போகிறவர்கள் யார்?

    ReplyDelete
  2. நாராயண்,

    பண வீக்கம் பற்றி சூப்பராக விளக்கம் தந்ததற்கு நன்றி !!!
    //பெற்ற மகளோடு உறவு கொண்டால், செல்வம் பெருகும் என்று சொன்ன ஒரு புறம்போக்கு சாமியாரின் பேச்சினைக் கேட்டு 9 வருடங்கள் நடந்த இந்த கொடுமையினை படிக்கும் போது பிபி எகிறுகிறது.
    //
    இப்படிப்பட்ட நாதாறிகளை பப்ளிக்காக தூக்கிலிட்டால (rarest of rarest என்ற வகையில்), பலன் இருக்கும் என்று தோன்றுகிறது !!

    எதுக்குப் பாவம் இராம நாராயணனை திட்டறீங்க ? அவர் ஏதோ சின்னப் பசங்களுக்காக, moral சொல்லும் வகையில், படமெடுக்கிறார் ;-)

    எ.அ.பாலா

    ReplyDelete
  3. //இந்த வார கோவம்//

    மனம் கனத்த செய்தி. அமெரிக்காவா இருந்தா அந்த ஆள நாரடிச்சுருப்பாங்க எல்லா ஊடகத்துலையும். இதில் பெரும் சோகம் தாயும் உடந்தையாக இருந்த விஷயம். ஆஸ்ட்ரியாவில் ஒரு லூஸ கடைசியா மனநல மருத்தவமனைக்கு அனுப்பிச்சாங்க.

    செருப்பு பிய்யிர வரைக்கும் அடிச்சாலும் கோபம் தீராதுனு நினைக்கிறேன் !

    ReplyDelete
  4. webinar, coopetition, BG/AG (before google, after google) are created that way.

    In US also, only 8% of RAPE or incest cases are found guilty and punished.

    ReplyDelete
  5. /தமிழினை வெறுக்க வைப்பது இரண்டே விஷயங்கள் 1. தமிழாசிரியர்கள் 2. திராவிட கட்சிகள்/

    எதாவது எழுதவேண்டும் என்று எழுதிவிடுவதா..எந்த விதத்தில் திராவிட இயக்கங்கள் தமிழினை வெறுக்க வைத்தன..சொல்லுங்கள்.?

    ReplyDelete
  6. ரவி,

    தமிழ்நாட்டில் தமிழினை வாழ வைப்பவர்கள், தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்கள்,சிற்றிதழ்கள்,பல வலைப்பதிவர்கள். தமிழினை முன்னேற்றுதல் என்று வெறுமனே தமிழ் சினிமாவுக்கு தமிழில் பெயர் வைத்தால் நடக்காது. தமிழினை முன்னேற்றுதல் என்பது தமிழில் எல்லா செய்திகளையும் தருதல், முன்னோடி - சுஜாதா. இந்நாளில் - பா.ராகவன், இரா.முருகன், நாஞ்சில் நாடன், ஞாநி மற்றும் பலர்.

    அரவிந்தன்,

    உங்களுக்கான பதில் அனுப்பியாகிவிட்டது :)

    ReplyDelete
  7. //
    இப்படிப்பட்ட நாதாறிகளை பப்ளிக்காக தூக்கிலிட்டால (rarest of rarest என்ற வகையில்), பலன் இருக்கும் என்று தோன்றுகிறது !!
    //
    இப்படி செய்தால் ஒரு சில நிமிடங்களில் அவரது தண்டனை முடிந்து விடும்.. ஆயுள் முழுவதும் வறுத்தும் மிக மோசமான தண்டனையாக கொடுக்கவேண்டும்.. சாவதே மேல் என்றென்னும் அளவிற்கு அது இருக்க வேண்டும்.. சுருக்கமாக சொன்னால், உயிரோடு நரகத்தை காணவைக்க வேண்டும்..

    ReplyDelete