சனிதோறும் ஒரு பத்தி

June 18, 2009

சனிமூலை - 009

இந்தியாவின் பணவீக்கம் முதல்முறையாக -1.61% குறைந்திருக்கிறது. ஏற்கனவே பணவீக்கம்(Inflation)/பண இளைப்பு(Deflation) பற்றி பார்த்திருந்தோம். உடனே வந்த கேள்விகள், பண இளைப்பு இன்னமும் பெருகுமா? என்ன ஆகும்?

உண்மையில், இந்த பண இளைப்பு தற்காலிகமே. நிரந்தரமாக இருக்காது. கச்சாப் எண்ணெயின் விலை $70/பேரல் ஒடிக் கொண்டிருக்கிறது. இந்தியா கச்சா எண்ணெயினை பெருவாரியாக இறக்குமதி பண்ணும் தேசம். அதனால் நம் அன்னிய செலவாணி அதிகம். அதனால் எல்லா பொருட்களின் விலையும் கொஞ்சம் ஏறும். மீண்டும் பணவீக்கத்திற்கு உள்ளே வருவோம். முரளி தியோரா அமைச்சராக பொறுப்பேற்ற போது சந்தை விலையிலேயே பெட்ரோல் பொருட்களின் விலை இருக்கும் என்று ஜபர்தஸ்தாக அறிக்கையெல்லாம் விட்டார். உண்மையில், இந்தியா மாதிரி ஒரு நாட்டில் மான்யம் இல்லாமல் பெட்ரோல்/டீசல் விற்கமுடியாது.ஆந்திரா/ராஜஸ்தான்/அஸ்ஸாம்/வட கிழக்கு மாநிலங்களில் பெருவாரியாக ஏதாவது ஒரு கண்டுபிடிப்பு நடந்து, பகவான் நம்மை ரட்சித்தாலேயொழிய, நாம் அரபு நாடுகள் இல்லாமல் குடித்தனம் நடத்த முடியாது.

பங்கு சந்தை எதிர்ப்பார்த்ததைப் போலவே இறங்கிக் கொண்டிருக்கிறது.பட்ஜெட் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. ஆகவே சந்தையின் இறக்க விகிதங்கள் அதிகமாகவும், ஏற்றங்கள் குறைவாகவும் இருக்கும். ஆனால் இந்த டூபாக்கூர் பண இளைப்பு என்கிற ஒரு விஷயத்தினை வைத்துக் கொண்டு ஒரு லாபியே வட்டி விகிதத்தினை குறைக்க சொல்லும். இவ்வளவு நிதிநிலை சீர்கேடுகள் உலகமெங்கும் நடந்தாலும், இந்தியா பெரிய அளவில் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு மொத்த இந்தியாவும், மத்திய வங்கியின் முன்னாளைய கவர்னர் ஒய்.வி.ரெட்டிக்கு கடமைப்பட்டிருக்கிறது. எவ்வளவோ மேலிடத்து அழுத்தங்கள் வந்த போதிலும், தொடர்ச்சியாக கருமமே கண்ணாயினர் வகையறா அவர். அவரால் தான் இன்னமும் நாம் நிலையாய் நிற்க முடிகிறது.

சமீபத்தில் மத்திய வங்கி சத்தமே போடாமல் சில விஷயங்களை சொல்லியிருக்கிறது. ஒரு லட்ச ரூபாய் காசோலைகள் மே.1 முதல் உயர் மதிப்பு (High Value) காசோலையாக கணக்கிலெடுக்கப்பட மாட்டாது. 5 லட்சம் தான் இப்போதைக்கு உயர் மதிப்பு. இதுவும் செப்-அக்டோபரில் 10 இலட்சமாக மாறும். அடுத்த ஏப்ரல் 2010இல் உயர் மதிப்பு காசோலை என்கிற ஒரு வகையறாவே இருக்காது. மத்திய வங்கி வெகு தீவிரமாக தேசிய மிண்-பண மாற்ற முறையினை (National Electronic Funds Transfer(NEFT) ) வங்கிகளுக்கும், வாக்காளர்களுக்கும் பரப்ப முயன்று கொண்டிருக்கிறது.

நான் ஒரு ஆன்லைன் வங்கிவாசி.NEFT மற்றும் RTGS - Real Time Gross Settlement போன்றவற்றினை பயன்படுத்துபவன் என்கிற முறையில், இம்முறைகள் பெரும்பாலான பணரீதியான கேடுகளை நிராகரிக்கும். கூடுமானவரை 25000 ரூபாய்க்கு மேல் எவ்விதமான கொடுக்கல் வாங்கலாய் இருந்தாலும் NEFT வழியாக செய்யுங்கள். ஒரே நாளில் அல்லது முழு 24 மணிநேரத்திற்குள் பணம் மாறிவிடும். ஒரு லட்சத்திற்கு மேலென்றால் RTGS செய்யுங்கள். அடுத்த 10 நிமிடங்களுள் மாறிவிடும். பல அலைச்சலகள், செலவுகள், போன்கள், பேரங்கள், வாக்குவாதங்கள் மிச்சம். 2015க்குள் காசோலைகள் வழக்கொழிந்துவிடும் என்பது என் தனிப்பட்ட எண்ணம்.


போன வாரம் ஒரு உடுப்பி ஒட்டலில் என் ஆர்டரினை கொடுத்து விட்டு, தேமே என்று விட்டத்தினை பார்த்து கொண்டு, உட்கார்ந்த நேரத்தில், “ஏன் சார் தோனி இப்படி சொதப்பறான்” என எதிரில் இருப்பவர் பேச ஆரம்பித்தார். இந்தியாவில், முன்பின் தெரியாத ஆட்களிடம் பேச வேண்டிய கட்டாயங்கள் வந்தால், நீங்கள் பேசும் முதல் மூன்று விஷயங்களில், இந்த மூன்று விஷயங்கள் இல்லாமல் இருக்காது - அரசியல், சினிமா, கிரிக்கெட்.

வாத்தியார் கிரிக்கெட் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.ஐபிஎல் பார்க்காமல், டி20 பற்றி எழுதாமல் போய்விட்டாரே என்கிற வருத்தம் எனக்கு எப்போதுமுண்டு. இந்தியா நல்ல பீமபுஷ்டி பயில்வான்களாக போய் லண்டனில் இறங்கி, ஒமக்குச்சி நரசிம்மன் போல் உதைப்பட்டு ஊர் வந்து சேர்ந்தார்கள். கிரிக்கெட், சினிமா, அரசியல் என்கிற மூச்செயல்கள் தான் இந்தியாவை ஆளுகின்றன.

கதைசொல்லியே வளர்ந்த/வாழ்ந்த பரம்பரை நம்முடையது. அதனாலேயோ என்னமோ, இன்னமும் நாடகத்தனமான தமிழ் திரைப்படங்கள் வெற்றி பெருகிறது. நாம் தமன்னாவில் ஐக்கியமானால், ஜெனிலியாவினை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது மும்பாய். கிரிக்கெட் வீரர்கள் நடிகைகளுடன் தொடர்பு. அரசியலுக்கும் பாலிவுட்டிற்கும் இருக்கும் சம்பந்தம். மேட்ச் பிக்சிங். கிரிக்கெட் வீரர்கள், நடிக/நடிகைகள் அரசியலில் இறங்குவது (அசாரூதின், ஜெயப்பிரதா, சத்ருஹன் சின்ஹா, நெப்போலியன்). சினிமாவினிற்குள் / கிரிக்கெட்டிற்குள் அரசியல் செய்வது என எப்படிப்போட்டு கலக்கினாலும் கிடைக்கும் சுவையான காக்டெய்ல், இந்தியாவில் சினிமா.அரசியல்.கிரிக்கெட்.

தோனியின் கொடும்பாவி எரித்த கையோடு, “தேகா துஜை, தேக்கா முஜை” என ஷாருக்கான்/தீபிகா படுகோனின் பரந்த மார்புகளையும், உயரமான கால்களையும் பார்த்துக் கொண்டே, அரசியல்வாதிகளை சலூனில் திட்டிக் கொண்டே டீக்கு ஆர்டர் கொடுக்கும் அற்புதர்கள் நாம். எல்லா மனிதர்களுக்குள்ளும் இருக்கும் ஜெனடிகல் கோடில், இந்தியர்களுக்கென்றே சில தனித்துவமான ஜீன்கள் இருக்கலாம் என்பது பரவலான அபிப்ராயம். அமெரிக்க/ஐரோப்பிய விஞ்ஞானிகள் அதற்கு வேண்டுமானால் வேறு பெயர் வைத்து இருக்கலாம். ஆனால், அதன் உண்மையான பெயர் - இந்தியன் ஜீன்.


சென்னையின் மின்வெட்டுகள் பற்றிய கதைகள் ஏராளம். போன வாரம் இரவில் இதே போல மின்சாரம் திடீரென பிடுங்கப்பட்டது. நடுநிசி 2.00 மணி இருக்கலாம். பால்கனியில் கொஞ்ச நேரம். உலாத்தல் கொஞ்ச நேரம். சிந்தனைகள் கொஞ்ச நேரமென காலம் ஒடிக் கொண்டிருந்த போது, பக்கத்து அடுக்கக்த்தில் போன் அடித்தது.

நள்ளிரவு 2.30-3.00 மணிக்கு போன் அடித்தால் அது ஏறக்குறைய துர்செய்தியாக தான் இருக்க வேண்டும். ஒரு துர்செய்தி சொல்லப்படும் நேரத்தில், ஒரு பார்வையாளானாய் இருப்பதன் துரதிர்ஷ்டம் போல் வேறெதுவுமில்லை. எவ்விதமான உதவியும் செய்ய வாய்ப்பில்லாமல், வெறுமனே, இருளில் சில அதிர்ச்சிகரமான நினைவுகளையும், அழுகைகளையும் கேட்பது போன்ற ஒரு பயங்கரம் எதுவுமில்லை. யாருக்கு என்ன ஆயிற்று, யாரோடு யார் உறவு என்கிற எவ்விதமான அடிப்படை தகவல்கள் கூட இல்லாமல் போனாலும், நள்ளிரவு போன்கள் ஒரு விதமான நிச்சயமற்ற தன்மையினை தொடர்ச்சியாக நினைவுறுத்திக் கொண்டிருக்கின்றன.


இந்த வார ஏடாகூட கேள்வி

டிவிட்டரில் ஏற்பட்ட செய்திகள் தான் ஈரானின் தேர்தல் குறித்த கேள்விகளை மறுபரிசீலனை செய்ய வைத்தன என மேற்கத்திய ஊடகங்கள் தொடர்ச்சியாக சொல்லி வருகின்றன. ஏகப்பட்ட புள்ளிவிவரங்கள், மேப்புகள், கிராப்கள் வேறு. அமெரிக்காவின் காலனியாதிக்க முயற்சிகளில் முறியடிக்கப்படாத தேசங்களில் ஈரானும் ஒன்று. இப்போது கேள்வி, நவீன சமூக இணைய ஊடகங்கள் ஒரு நாட்டுக்கு எதிரான அரசியலை பரப்ப உபயோகப்படுத்தப்படுகிறதா? சி.ஜ.ஏவின் தொடர்ச்சியான மாற்று முயற்சிகளில் இப்போது டிவிட்டரும், பேஸ்புக்கும் சேர்ந்திருக்கிறதா? (காரணம்: பாரக்ஒபாமா என்கிற டிவீட்டருக்கான தொடர்பாளர்களை பாருங்கள். ஒபாவின் வெற்றிக்கு இணைய ஊடகங்கள் எவ்விதமான முன்னேற்பாடினை கொடுத்தன என்பது வரலாறு)

June 13, 2009

சனிமூலை - 008

நடுவில் ஆறு வாரங்களாக காணவில்லை. எழுதவில்லையே என்று நிறைய பேர் கேள்வி கேட்டார்கள். யாரும் மடல் அனுப்பவில்லை. பிஸியாக இருந்தேன், இல்லை மூடு இல்லை என்றெல்லாம் எழுதலாம். ஆனால் உண்மையில், நானெடுத்து எழுதுவதற்கு தோதான செய்திகள் எதுவும் அமையவில்லை என்பது தான் உண்மை.


பங்குச்சந்தை எகிறுகிறது. என்.டி.டி.வி ப்ராபிட், சி.என்.பி.சி டிவி 18 எல்லாம், கிராப்கள் காண்பிக்கிறார்கள். ஒரு பெரிய புள்ளி விவர புயலே தாக்கிக் கொண்டிருக்கிறது. டைம்ஸ் ஆப் இந்தியாவில் அங்கலேஷ் அய்யர், மத்திய வங்கியின் வெளிநாட்டு முதலீடு டேட்டாவினை வைத்துக் கொண்டு வாரத்துக்கு ஒரு பில்லியன் டாலர்கள் இந்தியாவுக்கு வருகிறது என்று கீபோர்ட்டிலேயே குதிக்கிறார். தினமும் எதாவது ஒரு அமைச்சர் புதிய திட்டங்கள், மானியங்கள், சலுகைகள் பட்ஜெட்டில் வரும் என்று டீசர் கொடுக்கிறார்கள்.

காங்கிரஸ் பெருபான்மை பலத்தோடு வென்றாலும், வென்றது. அவரவர்கள் கொடுக்கும் பில்ட்-அப்புகளுக்கு அளவேயில்லாமல் போய்விட்டது. மன்மோகன் சிங் ஆட்சியமைப்பார் என்று சொன்ன விடனேயே 2000 புள்ளிகள் ஏறி மே.18 அன்று பங்குச்சந்தைக்கு விடுமுறை. டாட்.காம் காலத்தில் ஆலன் கீரின்ஸ்பேன், இதற்கு ஒரு அழகான வார்த்தை சொல்லியிருப்பார்.Irrational exuberance.இந்தியாவில் அதுதான் நடக்கிறது இப்போது.

அடிப்படை விஷயங்களில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாத போது, இம்மாதிரியான ஜீபும்பா வேலைகள் எந்தளவிற்கு சாத்தியம் என்று யாரும் யோசித்தாற்போல தெரியவில்லை. பணவீக்கம் குறைந்திருக்கிறது, சுழிக்கு அருகாமையில் வந்து விட்டோம் என்று நாளிதழ்கள் சொல்கின்றன. அப்படியென்றால், ஏறின பொருட்களின் விலை இறங்கியிருக்க வேண்டுமே? ஏன் இறங்கவில்லை? வேலை வாய்ப்புகள் அதிகரித்து இருக்க வேண்டுமே? அது நடக்கவில்லையே? ஏன் ? உண்மை நிலவரம் என்னவென்றால், எல்லா முன்னேறி வரும் நாடுகளுக்கும் இப்போது பணம் வெள்ளமாய் பாய்கிறது. இந்த பணம், அமெரிக்கா அச்சடித்த பணம். எவ்விதமான பின்விளைவுகளின் பாதிப்புகளையும் பற்றி கவலைப்படாமல், தாராளா தொண்டியாய், அமெரிக்கா டாலரை அச்சடித்து கொண்டு, ஜி.எம்மையும், செத்துப் போன வங்கிகளையும் வாங்கிக் கொண்டிருக்கிறது. பொருளாதார பாஷையில் இதற்கு “quantitative easing" என்று பெயர். இதன் விளைவு 2012க்கு பின்னால் தெரியும். இப்போது அதன் பாதகங்கள் புரியாது.

இந்த மாதிரி அச்சடித்து புழக்கத்துக்கு விடும்போது, முதலில் எல்லாம் செளஜன்யமாக தான் இருக்கும். அதிக பணப்புழக்கத்தினால், மீண்டும் பணவீக்கம் ஏற தொடங்கும். ஏனெனில், இது கடினமாய் உற்பத்தியினை பெருக்குவதால் உள் வரும் பணமல்ல. இது Easy Money. பவர்பாயிண்ட், எக்செஸ் தாள்களில் போடப்பட்ட ப்ரொஜக்‌ஷன்களை அடிப்படையாகக் கொண்டு உள் வரும் பணம். அதனால் தான். ஐ.எம்.எப். 400 டன் தங்கத்தினை சர்வதேச சந்தையில் இறக்கும் என்று தெரிந்தாலும், தங்கத்தின் விலை ஏறிக் கொண்டிருக்கிறது. கடந்த 45 நாட்களில் $1000/oz தொட்டு தொட்டு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறது.

நிஜம் என்னவென்றால், மந்த நிலையின் பாதிப்பு இனிமேல் தான் அதிகமாகும். வளர்ந்த நாடுகளின் உற்பத்தி குறையும். மக்கள் வேலையில்லாமல் திண்டாடுவார்கள். இப்போது ஒடிக் கொண்டிருப்பது சந்தை மொழியில் Bear market rally.இதனை இதே நிலையில் தாக்கு பிடிப்பது கடினம். உங்களைச் சுற்றி பார்த்தாலே, டிவி சேனல்கள் நம் காதில் எவ்வளவு பெரிய மாலையினை போட்டு நமக்கு மங்களம் பாட முயற்சிக்கிறார்கள் என்று தெரியும். இதில் தரகர்களுக்கு தான் லாபம். இதன் மூலம், ஒட்டு மொத்தமாக, நாம் எல்லாரும் மண்ணுக்குள் போகப் போகிறோம் என்கிற பெஸிமிஸ்ட் பார்வையல்ல.

நம் பயங்கள் குறைந்திருக்கின்றன. நிறுவனங்கள் இனிமேல் தங்களுடைய சேவை தேவைகள்/உற்பத்தி கீழே போகாது என்று நம்புகின்றனர்.வலிமையான அரசு. பொங்கும் பங்குச்சந்தை. பரவலான உள்ளூர் சந்தை என்று பல காரணிகள் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கின்றன.

ஜிம் ரோஜர்ஸ், சொரோஸ் போன்ற விற்பனர்களின் பார்வையில், இந்தியாவும் சீனாவும் தான் இந்த மந்த நிலையிலிருந்து வெளிவரும் முதலிரு நாடுகளாக இருக்கும் என்று சொல்கிறார்கள். ப்ரிக் நாடுகளில் இந்தியாவும், பிரேசிலும் தான் முதலிடத்தினை பிடிக்க ஒடிக் கொண்டிருக்கின்றன.

ஆக இந்த நம்பிக்கை தான் வாழ்க்கை. இப்போதைக்கு உங்களின் பர்ஸினை கெட்டியாக பிடித்திருங்கள்.


தொழில் நிமித்தமாக 2-3 வாரங்களுக்கு முன்பு, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான தயாரிப்பாளாரான “ஆஸ்கார்” ரவிச்சந்திரனை சந்தித்தேன். மனிதர் மிக மிக சாதாரணமாக இருக்கிறார். டிவி சீரியல் நடிகர்களே ஹோண்டா சிட்டியும், ஹுண்டாய் ஆக்செண்ட்டுமாய் செட்டுக்கு வருகையில், வெறுமனே ஒரு i10 வைத்திருக்கிறார். ஒரு லீ டீ சர்ட், சாதாரண ஜீன்ஸ் என உள்ளே வந்தார்.

ஆழ்வார்பேட்டை அனுமார் கோயில் காலையில் போகவில்லை, அதனால் பரிகாரமாக 500 சுற்றுகள் சுற்றிவிட்டு வந்தேன், அதான் லேட்டு என்று தன்னிலை விளக்கம். மனிதருக்கு அசாத்திய கடவுள் நம்பிக்கை. கார் வைத்திருப்பதே திருப்பதி போவதற்கு தான் என்கிற தொனியிலான விளக்கத்தினை இப்போது தான் கேட்கிறேன். ஆஸ்கார் பிலிம்ஸ் ஒரு தனி நபர் கார்ப்பரேஷன். ரவிச்சந்திரனோடு அவர் சகோதரர்கள் எல்லாரும் பங்குதாரர்களே. 85% படங்கள் வெற்றிப் படங்கள்.

ரவிச்சந்திரன் எடுப்பது தான் இறுதி முடிவு. பல நடிகர்கள், இயக்குநர்கள் பற்றியெல்லாம் பேசி கொண்டிருந்தோம். ரவிச்சந்திரனின் முதல் சினிமா நுழைவு வேலூரில் “வானம்பாடி” படத்தினை 37வது தடவையாக எடுத்து திரையரங்கத்தில் போட்டது. அவர் போட்ட ஒரு வாரம் செம கல்லா. அங்கிருந்து ஆரம்பித்து, இன்றைக்கு ஜாக்கி சானை வைத்து ஒரு படமெடுக்கிறார் - 6 மொழிகளில் வர இருக்கிறது. இது தாண்டி, முருகதாஸ் நன்றிக் கடனுக்காக “ரமணா”வினை ஹிந்தியில் இவருக்காக இயக்குகிறார். இன்னமும் இரண்டு படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன. மிக அபூர்வமாக இவ்வளவு பணமிருந்தும் [தசாவதாரம் சம்பாதித்தது 200 கோடிகள்] மிக மிக down-to-earth ஆக இருக்கும் ஒரு நபரினை இப்போது தான் பார்க்கிறேன். வழக்கமாக ரஜினிக்கு தான் இம்மாதிரியான வர்ணணைகள் பொருந்தும்.

மிக எளிமையாக இருக்கும் அவரின் வியாபார யுக்திகள், நேற்றைய சாண்டோ சின்னப்பா தேவரினை நினைவுப் படுத்துகின்றன. ஒரு தனி நபர் என்கிற முறையில், ரவிச்சந்திரன் மிக நல்லவர். ஆனால் நிறுவனம் என்கிற வகையில் ஆஸ்கார் ஒரு பெரிய பெயிலியர்.


இந்த வார செய்கைகள்

படித்தது: பா.ராவின் “பிரபாகரன்: வாழ்வும் மரணமும்”
பிடித்தது: வோடாபோன் விளம்பரத்தில் வரும் சூசூக்கள்(Zoozoo)
கேட்டது: “என்னடா பாண்டி, இன்னா பண்ண போறே” இளையராஜாவின் ரஸ்டிக் குரலில் “வால்மீகி” பாடல்
பார்த்தது: திருவல்லிக்கேணி ரத்னா கபேயில் ”கடவுள் பாதி.மிருகம் பாதி” ஜெகன்
பங்கேற்றது: கிழக்கு மற்றும் Fundsindia.com இணைந்து நடத்திய "பேரங்கள் மற்றும் ரிவார்டு பாயிண்டுகள்” கலந்துரையாடல்
வாங்கியது: ரிச்சர்ட் தேலரின் “Nudge: Improving Decisions about Health,Wealth and Happiness
முணுமுணுப்பது: ”இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை” - டி.ஆர். மகாலிங்கம்
வெறுப்பது: இன்னமும் anyindian.com-இல் “விதுர நீதி” புத்தகம் இல்லாமலிருப்பது
கொலை வெறியோடு இருப்பது: சென்னையில் ஓடும் ஆட்டோக்கள்